எனது வாசிப்பு- நினைவுகள்-1
பாண்டிச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்குக் கிளம்பியபோது எனது வயது 38. வாசிப்புக்கு வயது 25 க்கும் மேல். வாசிக்கிறேன் என்ற உணர்வோடு வாசித்தபோது வயது எட்டு. 1960 களின் பிற்பாதியில் வயசான கிழவனுக்காக ஒரு பேரன் திண்ணையில் உட்கார்ந்து விராட பர்வம் படித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் வாசிப்பு என்னவென்று தெரியாதபோது அதனை ஒரு கடமையாக -நிகழ்வாகச் செய்துகொண்டிருந்தான். அவனைப்போல அல்லாமல் அவனது தாய்மாமா பாரதக் கதை வாசிப்பாளராக எங்கள் ஊரான தச்சபட்டியிலும் வெளியூர்களிலும் அறியப்பட்டவர். பக்கத்து ஊரான உத்தப்புரம் சாவடியில் உட்கார்ந்து பாரதம் படிப்பதைப் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.