உள்ளுணர்வின் முன் அறிவிப்புகள்

பாண்டிச்சேரியிலிருந்து அன்று நான் ஏறிய வண்டி கிளம்பிய போது பிற்பகல் மணி ஒன்று. அதிகபட்சம் சென்னை செல்ல நாலுமணி நேரம் ஆகலாம் . பாரிமுனையில் இறங்கி நடந்தே போனாலும் அரை மணி நேரம் தான் ஆகும். ஐந்து மணிக்குப் போய் இறங்கி ஆறு மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கொள்ளலாம்.மதுரையிலிருந்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய உருளும் பாறைகள் நாடகத்தை நடத்தவுள்ள சுதேசிகள் காலையிலேயே சென்னை வந்து சேர்ந்திருப்பார்கள். சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையை நாடகமாக ஆக்கியபின் அதை மேடை ஏற்றுவதற்காக உருவாக்கப் பட்ட நாடகக் குழு சுதேசிகள். நாடகம் என்னும் கூட்டுக் கலையில் ஆசிரியத்துவம் நீக்கப் பட வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்துச் செயல்பட விரும்பிய நாடகக் குழு. ஆசிரியரின் அதிகாரத்துவ மொழிக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும் என்பதால் அனைவரும் விவாதித்து நாடகத்தை உருவாக்கலாம் எனத் திட்டமிட்டுக் கடைசியில் சுந்தரராமசாமியின் கதையை நாடகமாக்கும் பொறுப்பை என் வசம் ஒப்படைத்தது. அதிகார நீக்கத்தின் தொடர்ச்சியாகவே பல்லக்குத்தூக்கிகளுக்கு ஓர் இயக்குநரின் தனிக் கட்டுதிட்டங்கள் எதுவும் இல்லாமல் நாடகத்தைக் கூட்டுத் தயாரிப்பாக முன் வைத்தது. தாராளமான சுதந்திரத்துடன் ஒரு நாடகக் குழுவை உருவாக்க வேண்டும் என்ற ஆசையில் நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய அந்த நாடகக் குழு அதே பார்வையுடன் நீண்ட நாள் இயங்க முடியவில்லை. சங்கீத் நாடக அகாடெமியின் இளம் இயக்குநர் திட்டத்தில் நாடகத்தேர்வுக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் நாடகத்தை அனுப்பிய போது நான் நான் மதுரையில் இல்லை. இயக்குநர் என்ற இடத்தில் வங்கியில் பணியாற்றிய நண்பர் சந்திரனின் பெயர் இருந்தது. ஆனால் நாடக ஒத்திகையின் போது அதிகம் முறைப்படுத்திக் கொண்டிருந்தது சுந்தர் காளி தான். ஓரிரு முறை அவர்களின் ஒத்திகைக்காக அரசரடி இறையியல் கல்லூரியில் கூடிய போது வெறும் பார்வையாளனாக இருந்து விட்டு வந்தேன். அரங்கப் பொருட்களாக உருட்டுச் சவுக்குகள் ஏராளமாகப் பயன் படுத்தப் பட்டிருந்தன.

அந்த முறை தென்மண்டல நாடகவிழாவில் தமிழ் நாட்டிலிருந்து போன இன்னொரு நாடகம் வ.ஆறுமுகத்தின் ஊசிகள். ஊசிகள் நாடகத்தை, புதுவைப் பல்கலைக்கழக நாடகப்பள்ளி மாணவர்களையும் உள்ளடக்கி வ.ஆறுமுகம் ஒத்திகைகள் நடத்திய போது பார்த்திருந்தேன். அந்நாடகத்தின் மேடைப் பொருட்களும் அதிக அளவு கனபரிமாணங்கள் கொண்டவைதான். நாடகத்திற்குத் தேவையான அரங்கப் பொருட்களும் நடிகர்களுமாகப் பாண்டியிலிருந்து சென்னைக்கு ரயில் பிடிக்கக் கிளம்பிய வ.ஆறுமுகம் காலையில் கூப்பிட்ட போது பல்கலைக்கழகத்திற்குப் போய்விட்டுப் பிற்பகல் கிளம்பி வருவதாகச் சொன்னேன். ஆறுமுகத்தின் தலைக்கோல் குழுவும் சென்னை போய்ச் சேர்ந்திருக்கும் . இரண்டு நாடகக் குழுவும் பயணம் செய்யும் விஜயவாடாவுக்குச் செல்லும் ரயிலில் தான் நானும் போக வேண்டும். அந்த ரயில் சென்னையில் கிளம்பும் நேரம் இரவு 8.30.

இரண்டு நாடகங்களின் அரங்க அமைப்புக்குத் தேவையான உருட்டுக் கட்டைகளை ரயிலில் கொண்டு போவதற்குரிய அனுமதிகள் பெறாமல் அவற்றை ஏற்றுவது இயலாது. எனவே இன்று காலையிலேயே இரண்டு குழுக்களும் போய்ச் சேர்ந்ததே சரியானது. நான் இந்த இரண்டு நாடகங்களுக்கும் வெறும் பார்வையாளன் தான். ஒருவேளை அங்கு போன பின்பு அவர்கள் சொல்லக் கூடிய வேலைகள் எதையாவது செய்யக் கூடும்.

எல்லா நாடகங்களையும் பார்ப்பதற்கும் அவை பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எனக்கு இருந்தது. அதைச் சொல்லித் தான் பல்கலைக் கழகத்தில் அனுமதி வாங்கியிருந்தேன். போய்வந்தபின் எனக்குப் பல்கலைக்கழகம் பயணப்படி கூட வழங்கும். இந்த முறை ஐதராபாத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற திட்டமும் இருந்தது. இதற்கு முன்பு ஆந்திராவில் நடந்த தென்மண்டல நாடக விழாவிலும் தமிழ் நாட்டிலிருந்து இரண்டு நாடகங்கள் கலந்து கொண்டன. குருவம்மாளின் இயக்கத்தில் சீனிவாசன் எழுதிய நாயைப் பறிகொடுத்தோம். பார்வையாளர்கள், வல்லுநர்கள் என ஒருவரது கவனத்தையும் பெறாத ஒரு தமிழ்நாடகம் அதுதான். அந்த முறை தான் வ. ஆறுமுகத்தின் கருஞ்சுழி தேசிய நாடகவிழாவிற்குத் தேர்வு செய்யப்பட்டது. விஜயவாடாவில் நடந்த அந்த விழாவிற்குச் சென்ற போது ஊர் சுற்றவே நேரம் இல்லை.

இந்தமுறை முற்பகலில் நடக்கும் விவாதங்களை விட்டு விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். திரும்பத்திரும்ப விவாதப் பொருளாக இருந்த வேர்களைத் தேடுதல் என்னும் கருத்தியல் மீது ஏறத்தாழ நான் வெறுப்பு கொண்டிருந்தேன். நவீனத்தன்மை கொண்ட உள்ளடக்கத்தைக் கவனமாகப் பின்னுக்குத் தள்ளி விடும் நோக்கம் கொண்டது இந்த வேரினைத் தேடும் முயற்சி என்பதைத் திட்டவட்டமாக நம்பத் தொடங்கியிருந்தேன். மனம் ஒப்பாத விவாதம் ஒன்றை ஏன் காது கொடுக்க வேண்டும். அதற்குப் பதிலாகக் கண்கொடுத்துப் பார்க்க ஐதராபாத்தில் ஏராளமான இடங்கள் உண்டு.

பேருந்து கிளம்பிப் புதுச்சேரி நகரைத் தாண்டுவதற்கு முன்பே தூக்கம் கண்ணைச் சுற்றியது. கையிலிருந்த புத்தகத்தை மடித்துப் பைக்குள் வைத்து விட்டுத் தூங்கி விட்டேன். திரும்பவும் வண்டி குலுங்கி நின்ற போது வயிற்றுக்குள் கலக்கம் தெரிந்தது. வலிக்கவும் செய்தது. இறங்கிக் கக்கூஸ் போக வேண்டும் என்று தோன்றியது. வண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தால் வயிற்றுக் கலக்கம் தெரியாது. மெதுவாகப் பேருந்து நகர நகர வயிற்றின் கலக்கமும் கூடியது. தாம்பரம் வந்தால் தான் போக்குவரத்துக் கூடுதலால் வண்டியின் வேகம் குறையும். வெளியே பார்த்த போது செங்கல்பட்டுத் தாண்டியிருப்பது புரிந்தது.

எதிரே பேருந்துகள் வரவில்லை; கனரக லாரிகளும் வரவில்லை. கார்கள் போன்ற தனியார் வாகனங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. நான் பயணம் செய்த பேருந்தின் வேகம் ஊர்வனவாக மாறிய போது முன்னும் பின்னும் வாகனத் தொடர்கள் நீண்டன. வயிற்றின் கலக்கம் தாங்காது என்ற நிலையில் கையில் பையை எடுத்துக் கொண்டு இறங்கி விட்டேன். வயிற்றைக் காலி செய்து விட்டுத் திரும்பவும் ஒரு சோடாவைக் குடித்து நிரப்பிக் கொண்டு வேறொரு பேருந்தில் செல்லலாம் என்பது திட்டம். இறங்கிய இடம் வீடுகள் இல்லாத வெளி. சாலையோரத்தில் கற்றாழையும் முள்செடிகளும் வளர்ந்திருந்தன. இப்படியான இடங்களில் வெளிக்கிருக்கப்போவது புதியதல்ல. அதுவும் வயிற்றில் இருக்கும் கலக்கம் வேறு நெருக்கிக் கொண்டிருந்தது.

ரோட்டோரப் புதருக்குப் பின்னால் போய்விட்டுத் திரும்பி வந்த போது சாலையில் நின்ற வாகனத் தொடர் நகர்ந்ததாகத் தெரியவில்லை. நான் வந்த பேருந்தைத் தேடினேன். மெதுவாக நடந்து முன்னே போன போது ஒரு பெட்டிக் கடை கூட்டத்தால் மறைக்கப் பட்டிருந்தது. சோடாவைக் குடித்து விட்டு சிகரெட் பற்ற வைக்கலாம் என நினைத்து கடைக்காரர் முகத்தைப் பார்த்துக் காசுடன் கைநீட்டிய போது கடையில் சோடா தீர்ந்து விட்டது. எதிர்பாராத கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் அந்தக் கடைக்காரர் திணறிக் கொண்டிருந்தார். கடைச்சரக்கெல்லாம் வேகமாகக் காலியாகிக் கொண்டிருந்தன. பீடி, சிகரெட், பாக்கு தவிர அந்தக் கடையில் இருந்தவை கொஞ்சம் மிட்டாய்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள். ஊருக்குள் இருக்கும் கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வர ஆளனுப்பினார் அந்தக் கடைக்காரர். போனவர் பதினைந்து நிமிடத்தில் வந்து விட்டார். அவர் கொண்டுவந்த பெட்டியிலிருந்து வாழைப்பழங்களும் கொய்யாக் காய்களும் கூடுதல் சரக்குகளாக இருந்தன. ஏற்கெனவே இருந்த சிகரெட், பீடி, மிட்டாய்களோடு பாக்குப் பொட்டலங்களும் சேர்ந்து கொண்டன.

போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்பதற்கான காரணங்கள் சரியாக ஒருவருக்கும் தெரியவில்லை. சென்னையில் வண்டிகள் எதுவும் ஓடவில்லையாம். ரயில்கள் கூட நிறுத்தப் பட்டு விட்டனவாம். இனி வண்டிகள் எதையும் எடுக்க வேண்டாம் என உத்தரவுகள் வந்து விட்டனவாம். இடையிடையே சாலைகளில் இருக்கும் வாகனங்களை எப்படியாவது கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டும் என்பதில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மும்முரமாக இருந்தார்கள்.

பேருந்துகள் நகரத் தொடங்கிய போது கூட்டம் குறைவாக இருந்த பஸ் ஒன்றில் ஏறி இருக்கையில் அமர்ந்த போது பேருந்து நகரத் தொடங்கியது. ஆனால் மணி மாலை ஆறு ஆகி விட்டது. இப்போது வேகம் பிடித்தாலும் ரயிலைப் பிடித்து விடலாம். ஆனால் பேருந்துகள் வழக்கமான வேகத்தில் செல்லவில்லை. பாரி முனைக்கு நான் போய்ச் சேர்ந்த போது மணி எட்டு. பசியுடன் ஆட்டோ பிடித்து சென்ட்ரல் ரயில் நிலையம் போன போது ரயில் போய்விட்டது. பிளாட்பாரத்தில் உருளும் பாறைகள் நாடகத்தின் அரங்கப் பொருட்களான உருட்டைக் கட்டைகள் கட்டிக் கிடந்தன. மதுரையிலிருந்து வந்த நண்பர் அதனருகில் உட்கார்ந்திருந்தார். ரயிலில் அவற்றை ஏற்ற மறுத்துவிட்டதால் காலையில் ஏதாவது வேன் பிடித்து எடுத்துச் செல்லலாம் என்று நினைப்பதாகச் சொன்னார். ஆகும் செலவை சங்கீத் நாடக அகாடெமி ஏற்கும் என்றால் தான் அந்தத் திட்டம் ; இல்லையென்றால் வேறு திட்டம் என்றார்.

ரயிலைத் தவற விட்டதால் ஏற்பட்ட வருத்தத்தோடு பசி வேறு. வெளியில் வந்து சாப்பிட்டு விட்டு இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்குப் போகலாம்; பின்னர் அடுத்த நாள் செல்லும் ஏதாவது ரயிலில் பதிவு செய்யாத பெட்டியில் ஐதராபாத் செல்லலாம் என்று மனம் ஓடியது. துணைக்கு வர ஒருவரும் இல்லை. தனியாகவே சாப்பிட்டு விட்டு நின்ற போது மாநிலங்களுக்கிடையே செல்லும் பேருந்துகள் நிற்கும் நிலையத்திற்குப் போய் பார்க்கலாம் என்று தோன்றியது. போனேன். விஜயவாடா செல்லும் ஒரு பேருந்து நின்றது. இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். டிக்கெட் தருவதற்கு கண்டக்டர் இல்லை. முன்பதிவு மையங்களிலும் ஆட்கள் இல்லை. பேருந்து கிளம்பும் என்று உறுதியாகக் கூற முடியாது என்ற தகவலுக்குப் பின் சினிமாவுக்குப் போகலாம் என்று திரை அரங்குக்குப் போனேன்.

பாரி முனைக்கு அருகில் இருக்கும் அந்தத் திரை அரங்கு பொருட்படுத்தக் கூடிய திரை அரங்கு கிடையாது. இதுவரை ஒரு சினிமா கூட அதில் பார்த்ததும் இல்லை. வேறு வழியில்லை என்பதால் அதன் வாசலில் போய்ச் சேர்ந்த போது அங்கும் பத்திருபது பேர் தான் நின்றிருந்தார்கள். இது போன்ற திரை அரங்குகளில் மெல்ல மெல்லத்தான் கூட்டம் வரும். ஊர்களுக்குப் போகத் திட்டமிட்டுப் போக முடியாமல் போனவர்கள், காலையில் முதல் வண்டியில் ஊருக்குப் போகலாம் என்று நினைப்பவர்கள் என ஒவ்வொருவராக வந்து சேர்வார்கள். திட்டமிடப் படாத பயணங்கள் காரணமாகத் திருச்சியிலும் மதுரையிலும் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் திரை அரங்குகளில் நானே பல முறை படங்கள் பார்த்திருக்கிறேன்.

திரை அரங்கிலும் திரைப்படம் இல்லை எனச் சொல்லி வெளியே எழுதி ஒட்டிய போது பெரிதாக ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. ஆனால் என்ன நடந்திருக்கும் என்பது புரியவில்லை.

உத்தரப் பிரதேசம்- கரசேவகர்கள் - மசூதி இடிக்கப்பட்டது என்ற சொற்களை ரிக்ஷாக்காரர்களும் தியேட்டர் வாசலில் இருந்தவர்களும் பேசிக் கொண்டார்கள். திரும்பவும் நடந்து பாரிமுனைப் பேருந்து நிலையத்திற்கு வந்து புதுச்சேரிக்குச் செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். என்னோடு சேர்த்துப் பத்துப் பன்னிரண்டு பேர் இருந்தார்கள். கால்கள் கடுத்ததால் ஏற்பட்ட வலியால் தூங்கிப் போய்விட்டேன். நடத்துநர் எழுப்பி டிக்கெட் வாங்கச் சொன்ன போது வெளியே எட்டிப் பார்த்தேன். சென்னை நகரத்தைத் தாண்டி இருந்தது. கண்ணை விரித்துப் பார்த்தபோது கற்றாழைச் சுவரும் முள்புதரும் தெரிந்தன. இறங்கி வெளிக்கிருக்கப் போன இடம் இதுதான் என நினைத்துக் கொண்டேன்.

எனது ஐதராபாத் பயணத்திற்கான ரயிலைத் தவற விட்டதற்கு வயிறு கலக்கியது பிரச்சினை இல்லை என்ற போதும், அந்த இடத்தில் இறங்கியதால் தான் ஐதராபாத் போக முடியாமல் போய்விட்டது என்று மனம் சொன்னது. மனம் எப்போதும் இப்படித்தான் மூடத்தனமாக எதாவது ஒரு காரணத்தில் நின்று விடும்.

அதிகாலையில் வீட்டிற்குப் போன போது காலைத் தினசரி வெளியில் கிடந்தது. அயோத்தியில் பாப்ரி மஜித் இடிக்கப் பட்ட செய்தி படத்துடன் வெளியாகி இருந்தது. கரசேவகர்கள் உச்சியில் நின்று கடப்பாரையாலும், கொத்தாலும் இடித்துக் கொண்டிருந்தார்கள். அச்சிடப் பட்ட படத்தில் புகை மூட்டம் படர்ந்திருந்தது. இப்போது பயணம் தடுத்து நிறுத்தப் பட்டது எப்படி ? என்று யோசித்துக் கொண்டிருந்தது. சரியாக மஜித் இடிக்கப்பட்ட அதே நேரம் எனது வயிறு கலக்கியது எப்படி?
ஒட்டு மொத்த இந்தியர்களின் வயிற்றிலும் புளி கரைக்கப்பட்டிருக்குமோ என்னவோ?
***********  
அது நடந்து ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னால் முன்னறிவிப்பு ஒன்றைச் செய்தது அதே முன்னுணர்வு. அந்த அறிவிப்பு சொந்த அண்ணனின் மரணத்தோடு தொடர்புடையது. அது நடந்தது ஒரு குடியரசு தினத்தன்று. குடியரசு தினம், சுதந்திர தினம் என்றால் நமது தொலைக்காட்சிகள் தேசப்பற்று வெளிப்படும் படங்களை ஒளிபரப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்பதை அனைவரும் அறிவோம். பெரும்பாலும் மணிரத்னத்தின் ரோஜா, உயிரே, பம்பாய் போன்ற படங்கள் அடிக்கடி திரும்பத் திரும்ப ஒளிபரப்புப் பெற்று தேசப்பற்று வளர்ப்பதை இன்றும் நமது தொலைக் காட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. ஆனால் அன்று மணிரத்னத்தின் மனைவி சுகாசினி இயக்கிய,'இந்திரா’ படத்தைப் பிற்பகல் ஒளிபரப்பாக ஒரு தொலைக்காட்சி காட்டத் தொடங்கியதும் குட்டித் தூக்கத்திற்காகப் போய்விட்டேன். ஏற்கெனவே சிலதடவை பார்த்த படம். தூக்கம் கலைந்து திரும்பவும் வந்த போது படம் இன்னும் முடியவில்லை. முடியும் கட்டத்தில் இருந்தது. மனைவி விஜயா, மகள் சிநேகா, மகன் ராகுலன் ஆகியோர் மட்டுமல்ல, பக்கத்து வீட்டுச் சிறுமியும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு படத்தின் உச்சகட்டத்திற்கு முந்திய நிகழ்வான திருப்புக் காட்சி திரையில் ஓடியது. படத்தின் மையப் பாத்திரமான இந்திராவின் அப்பாவாக நடித்திருந்த நடிகர் நாசர் கொல்லப்படும் காட்சி அண்மைக்காட்சியாக விரிந்த போது எனது கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் ஓடியது. அடக்க நினைத்து துண்டை எடுத்துத் துடைத்த போது மகள் சிநேகாவும் மகன் ராகுலனும், ”என்ன ஒங்க பிரண்டு நாசர் செத்துப் போகும் காட்சி வந்ததும் அழுகை வந்து விட்டதா?” எனக் கேலியாகச் சிரித்தார்கள். பாண்டிச்சேரியில் இருக்கும் போது நடிகர் நாசருடன் நட்பாக இருந்ததும் அவர் இயக்கிய தேவதை படத்தில் ஒரு காட்சியில் நடித்ததையும் வைத்துப் பிள்ளைகள் அப்படிச் சொன்னார்கள். அவர்களுக்கு அப்போது என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் அடுத்து அரை மணிநேரத்தில் வந்த தகவல் தான் எங்களைத் திடுக்கிட வைத்தது.

சொந்தக் கிராமமான தச்சபட்டியிலிருந்து தொலைபேசி வந்தது. எனது அண்ணன் , எனக்கு நேரே மூத்தவர் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார் என்று சொன்னது அந்தத் தகவல். அவர் ஒரு அதிமுக அரசியல் தொண்டர். சேடபட்டி முத்தையாவின் கூட்டாளிகளில் ஒருவராக இருந்தவர். கூடவே சுற்றிக் கொண்டிருப்பார். உடல் எதை ஏற்குமோ அதற்கேற்றபடி உணவு மற்றும் பிற பழக்கங்களைக் கைக் கொள்ளாதவர். ஆனால் நோய் வாய்ப்பட்டுப் படுத்திருந்தவர் அல்ல. அவரோடு சுமுகமான உறவு எதுவும் கிடையாது. குடும்பப் பிரச்சினை காரணமாகப் பேச்சு வார்த்தையின்றி இருந்த நேரம். என்றாலும் அவரது மரணத்தை எனக்கு சரியான நேரத்தில் உணர்த்திக் கண்களைக் குளமாக ஆக்கியது எது என்பதைப் பலதடவைக் கேட்டுக் கொள்வேன். அது தான் ஆழ் மன நீரோட்டம் என்னும் உள் உணர்வு போலும்.

திருநெல்வேலியில் இந்த ஆழ்மன நீரோட்டம் ஒரு துக்கத்தை முன் அறிவித்தது என்றால், பாண்டிச்சேரியில் இருந்த போது வேறு விதமான முன் அறிவிப்பு என் பயணத்தை மாற்றித் திசை தெரியாமல் தவிக்க இருந்த நிலையிலிருந்து தடுத்து நிறுத்தியது. அந்த ஆழ் மன நீரோட்டம் நடந்த தினமும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களுள் ஒன்றாக ஆகி விடும் என்பது அப்போது தெரியாது. பின்னர் அப்படி ஆகி விட்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்