சமயங்களின் உள் முகங்கள்


ஒரு முன் குறிப்பு:
நானும் ஜெயமோகனும் பரிமாறிக் கொண்ட  இந்தக் கடிதப் போக்குவரத்து சரியாக ஒருவருடத்திற்கு முந்தைய நிகழ்வு. இக்கடிதங்களில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் எங்கள் இருவருக்குமானவையாக இல்லை; பொதுவில் வைக்கப்பட வேண்டியவை என்று அப்போதே  தோன்றியது என்றாலும் பதிவேற்றம் செய்யவில்லை; காரணம் இருவருக்கும் எதோ பிரச்சினை எனக் கருதிக் கொள்ளும் சூழல் தான் காரணம். தமிழில் அறிவார்ந்த விவாதங்கள் தனி நபர் பிரச்சினைகளாகப் பார்க்கப்படும் ஆபத்து இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இப்போது வலைப்பதிவில் ஏற்றுகிறேன்.
இந்தக் கடிதம் எழுதத் தூண்டியது ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த ஒரு நிழற்படமும் குறிப்பும் தான். அந்தக் குறிப்பில் நமது அறிவுஜீவிகள் இதையெல்லாம் கண்டு கொள்வது இல்லை என்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அப்படத்தில் ஒரு இசுலாமியர் தனது காமிராவில் மூன்று பெண்களை படம் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த மூன்று பேரும் பெண்கள் என்பது அவர்கள் அணிந்திருந்த கறுப்பு ஆடைகளின் அடையாளத்தால் மட்டுமே தெரிந்தது. மூன்று உடல்களும் ஒட்டுமொத்தமாகக் கருப்புக் கோஷாவுக்குள்- புர்க்காவிற்குள்- மறைந்திருந்தது. பார்ப்பதற்காகக் கண்கள் இருக்கும் இடத்தில் ஊடுருவிச் செல்லும் துணியால் தைக்கப்பட்டிருந்தது.
படம் எடுப்பவரின் நோக்கம் இடத்தைப் பதிவு செய்வதா? அந்த இடத்தில் இம்மூவரும் இருந்தார்கள் என்பதைப் பதிவு செய்வதா? என்று கேள்விக்கு ஒற்றைப் பதிலைச் சொல்லி விட முடியாது. படம் எடுக்கும் அந்த மனிதனைப் படம் பிடித்து ஊடகங்களில் காட்டும் போது இசுலாமிய அடிப்படைவாதத்தின் முகம் ஒன்றைப் பேசுவதாக ஆகி விடுவதைத் தவிர்த்து விட முடியாது.
ஜெயமோகனுக்கு நான் எழுதியது போலப் பலர் கடிதங்கள் எழுதியிருக்கக் கூடும். அவற்றில் சில விமரிசனங்களாக இருந்திருக்கலாம்; ஆலோசனைகள் வந்திருக்கலாம்; அச்சுறுத்தல்கள் வந்திருக்கவும் வாய்ப்புண்டு. என்ன காரணம் பற்றியோ அடுத்த நாள் அந்தப் பதிவையும் படத்தையும் எடுத்து விட்டார். அப்படிச் செய்ததைத் தவறெனச் சொல்ல முடியாது.
இங்கே கடிதங்களில் இடம் பெற்றுள்ள விவாதம் மட்டுமே முக்கியம். இனிக் கடிதங்கள்…

29-09-09
அ.ராமசாமி
அந்தப் புகைப்படம் ஏன் உங்களுக்கு மன இறுக்கத்தைத் தர வேண்டும். ஒரு மதம் தனது நம்பிக்கைகள் , சடங்குகள் சார்ந்து மனிதர்களைக் கட்டுக்குள் வைக்கிறது. எல்லா மதங்களும் இந்த விசயத்தில் ஒத்துப் போகின்றன. அவை ஒத்துப் போகும் இன்னொரு விசயம். ஆண்களுக்குக் கூடுதல் சலுகைகளும், பெண்களுக்குக் குறைவான சலுகைகளும் வழங்குவது. மத அடையாளம் என்ற பெயரில் உடலை மூடுதல் அவர்கள் அடையாளம் என்று நம்புகிறார்கள். இந்துப் பெண்கள் திலகம் இட்டுக் கொள்வது போல. கிறித்தவப் பெண்கள் அப்படி இட்டுக் கொள்வதைப் பாவச்செயல் என நம்புவதைப் போல.
ஆனால் இவை எல்லாம் அடையாளங்கள் அல்ல; ஆதிக்கம் செலுத்துவதற்கான - அடக்கி வைப்பதற்கான விலங்குகள் என்பதை ஓர் ஆண்- அவன் சொந்த சமய ஆணாக இருந்தாலும் சரி, பிற சமய ஆணாக இருந்தாலும் சரி - சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். வேண்டாம் என்று தூக்கி எறிய வேண்டியது பெண்கள் தான். எப்போதும் மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும். அதுவே நிற்கும்; நிலைக்கும்.
இங்கே எல்லாவற்றையுமா? அறிவுஜீவிகள் பேசி விட்டார்கள்? இன்னும் பேச வேண்டியவை ஏராளம் உண்டு தான்.  ஏன் இந்துச் சடங்குகளை மட்டும் தாக்குகிறீர்கள்; இசுலாமியத்தில் மூடநம்பிக்கைகளும், பெண்ணடிமைத்தனமும் இல்லையா? என்ற கேள்வி நியாயம் தான். ஆனால் அதற்குள் மூக்கை நுழைக்க இன்னொரு சமயத்தானுக்கு இருக்கும் உரிமையைவிட அந்தச் சமயத்தைச் சேர்ந்த மாற்றம் விரும்பிகளுக்கே உண்டு. அதைச் செய்யத் தொடங்கும் போது கிடைக்கும் தண்டனைகளையும் எதிர்ப்புகளையும் அவர்களே சரியாக எதிர்கொள்ள முடியும்.
இங்கே இன்னொரு மகான் சொன்ன சொல்லை நினைத்துக் கொள்ள வேண்டியது தான். உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தைப் பார்க்காமல் அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்ப்பதென்ன?
எல்லா மதங்களின் கண்களிலும் உத்தரமும் இருக்கின்றன; துரும்பும் இருக்கின்றன.
எல்லாவற்றையும் மறைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்ள அந்தப் பெண்கள் ஆவலோடு இருக்கும் போது நீங்களும் நானும் குமிறி என்ன ஆகப் போகிறது.
தங்களின்
அ.ராமசாமி
=================================
அன்புள்ள ராமசாமி,
நான் சொல்லாத நிறையவிஷயங்களை 'வாசித்'திருக்கிறீர்கள் --அவை உங்கள்
ஆதங்கங்கள் என்றே எண்ண இடமிருக்கிறது.
நான் அந்தப்படத்தைப் பார்த்து ஒன்றும் குமுறவில்லை. ஒரு வருத்தத்தை
அடைந்தேன்,அவ்வளவுதான். அது மதம் சார்ந்த ஆதங்கம் அல்ல, மனிதம்
சார்ந்தது. நம் மதத்தில் ஒரு தீங்குக்கு எதிராக நாம் வருத்தமுறுகிறோம்
என்றால் அதற்குக் காரணம் மனிதாபிமானம், மனித சமத்துவத்திற்கும் மனித
உரிமைக்குமான விருப்பு. அதே மதிப்பீடுகள் உண்மையானவை என்றால் அவை எல்லா
மக்கள் மேலும் விரியும் அல்லவா? என் மனிதாபிமானம் அல்லது மனிதசமத்துவ
நோக்கு என் மதத்துக்குள் மட்டுமே விரியும் என்றால் அதன் பெயர்தானே
அடிப்படைவாதம் என்பது?
எந்த ஒரு ஆசாரமும் சுதந்திரம், சமத்துவம், முழுமைநோக்கிச்செல்லும்
துடிப்பு ஆகிய அடிப்படை மானுட இயல்பை ஒடுக்கும் என்றால் அது ஆதிக்கமே.
அது எங்கிருந்தாலும் அதை நோக்கி தன் பார்வையை திருப்புகிறவனே உண்மையான
சிந்தனையாளன். அது காந்தியாக இருந்தலும் சரி, அம்பேத்காராக இருந்தாலும்
சரி, நாம் இவ்வியல்பையே காண்கிறோம். வாசித்துப்பாருங்கள்.
என் குறிப்பிலும் நான் சொல்வது அதையே. மாற்றங்கள் அந்தந்த மதத்துக்குள்
இருந்தே வரவேண்டும். அப்படித்தான் காந்தி சொன்னார். ஆனால் அம்பேத்கார்
அந்த அணுகுமுறையை மறுந்து விமரிசனங்கள் செய்தார்.இ.எம்.எஸ் அதை மறுத்து
கடுமையான விமரிசனங்களை முன்வைத்து ஓர் அரசியலியக்கமே நடத்தினார்.

நாம் கேட்பது அச்சமூகத்தில் இருந்து எழுந்து அந்த மாற்றங்களை நிகழ்த்த
முற்பட்டவர்கள் நம் பொதுச்சமூகத்தின் அறிவுஜீவிகளால் என்னவகையில்
அணுகப்பட்டார்கள் என்பதே.
பொட்டு வைப்பதும் புர்க்கா போடுவதும் சமமானவை என நீங்கள் எண்ணுகிறீர்கள்
என்றால் நான் என்ன சொல்வது? அப்படி என்றால்கூட பொட்டு வைக்க மறுக்கும்
பெண்ணை எவரும் மதநீக்கம் செய்வதில்லை. எல்லா மதமும் மூடநம்பிக்கைகளும்
பழமையான ஆசாரங்களும் கொண்டவையே. மதம் என்பதே நம்பிக்கைசார்ந்த அமைப்பு
என்பதனால் பொதுவாக மதச்சீர்திருத்தம் என்பது எளிய விஷயம் அல்ல.

ஆனாலும் இந்துமதத்திலும் கிறித்தவ மதத்திலும் மிகவேகமாக
மனிதாபிமானம் சார்ந்த, மனிதசமத்துவம் சார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே
இருக்கின்றன. மேலும் நிகழ வாய்ப்பும் இருந்துகொண்டிருக்கிறது. மாறாக
இஸ்லாமியர் தரப்பில் நூற்றாண்டுகளாக நம் சமூகத்தில் இல்லாதிருந்த
அடக்குமுறைப் பழக்கங்கள் இன்று புதியமதவாதமாக வற்புறுத்தப்படுகின்றன.
அதற்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன.
அதற்கு முன் மூடிய கண்களுடன் நின்றபடித்தான் நம் அறிவுஜீவிகள் முற்போக்கு
வாதம் பேசுகிறார்கள். இந்த உண்மையை மழுப்பிக்கொண்டு எதையும் நாம்
பேசமுடியாது. இப்போது மழுப்பினாலும் நாளை எவரேனும் அதை கேட்கத்தான்
செய்வார்கள்.
 
நம் கண்ணில் உத்தரங்களே இருக்கிறதென்பதை நான் மறுக்கவில்லை என்பதையும்
எப்போதும் அதற்கு எதிராக தீவிரமாக எழுதி வருகிறேன் என்பதையும் நீங்கள்
அறிவீர்கள் --குறைந்தபட்சம் 'ஏழாம்உலகம்' போன்ற ஒரு நாவலையாவது எவரும்
மறுக்க இயலாது. நீங்களும் கடந்த வருடங்களில் அத்தகைய கடுமையான சமூக
விமரிசன நோக்கில் நிறைய எழுதியிருக்கிறீர்கள் என நான் அறிவேன். அத்தகைய
ஏராளமான கடுமையான திறந்த விமரிசனங்கள் மேலும் மேலும் தேவை என்றே நான்
நினைக்கிறேன். எனக்கு உங்கள் மீதான மதிப்பே அவ்விமரிசனங்கள் மூலம்
உருவாவதுதான்

தன் கண்ணில் உத்தரம் இருக்கையில் பிறர் கண்ணை விமரிசனம்செய்யலாகாது
என்பது எல்லாருக்கும் பொருந்தும் உண்மை என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள்
என்றும் நம்புகிறேன்.
 
ஜெ

29-09-09 மாலை 7.30
அன்புள்ள ஜெயமோகனுக்கு-
அந்தப் படத்தைப் பார்த்து நீங்கள் ஏன் குமுறுகிறீர்கள் என்று சொல்லவில்லை; நீங்களும் நானும் குமுறி என்ன ஆகப்போகிறது என்று தான் கடைசியில் கேட்டிருக்கிறேன்.
ஈஎம் எஸ்ஸும், அம்பேத்கரும் மதங்களை விமரிசித்தார்கள் என்றால், தங்களை ஒரு மதத்தைச் சார்ந்தவர்களாகக் கருதிக்கொள்ளவில்லை என்பதுதான் காரணம். காந்தி மட்டும் விதிவிலக்கு. அவர் ஒருவரே பிற சமயங்களின் மீது விமரிசனம் வைத்த அதே நேரத்தில் தான் சார்ந்த இந்து மதத்தில் ஏராளமான கசடுகள் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பேசியவர்.  நீங்களே ஒரு அறிவுஜீவி தானே ? பிறகு ஏன் நமது அறிவு ஜீவிகள் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை எனக் கூறி உங்களை அதிலிருந்து விலக்கிக் கொள்கிறீர்கள். உங்களுக்கான பொறுப்பாக நினைத்துப் பேசலாம் தானே. உங்களை நீங்களே விலக்கிக் கொள்ள வேண்டும் எனத் தூண்டுவது எது? என்பதுதான் எனக்கிருக்கும் கேள்வி.
சரி  அதிருக்கட்டும். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசுவோம்.
இந்தியாவில் பெரிய சமய நம்பிக்கைகளாக இருக்கும் இந்துசமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்றில் இசுலாம் மட்டும் அடிப்படைவாதத்தை நோக்கிப் போவதாகவும் மற்ற இரண்டும் மனிதாபிமானம் சார்ந்து முற்போக்குநிலையில் வளர்வதாகவும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்றால் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.
கடந்த கால் நூற்றாண்டாகக் கிறித்தவம் தொடர்ந்து சாதியத்தைக் கட்டிக் காக்கும் கெட்டி தட்டிப் போன நிறுவனமாக ஆகி விட்டது என்பது தான் தமிழக யதார்த்தம். முதலாளித்துவத்தின் நல்ல கூறுகளைக் கொண்டதாகத் தொடங்கப் பட்ட கிறித்தவக் கல்வி நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. கல்வி நிறுவனங்களின் வெளிப்பாடே இத்தகையது என்றால், சமய நிறுவனங்களுக்குள்ளும், குடும்ப அமைப்புக்குள்ளும் அவை எப்படி இயங்கிக் கொண்டிருக்கும் என்பதை ஆய்வுகள் செய்து விளக்க வேண்டியதில்லை. அறிவொளிக்கால  ஐரோப்பிய வாடையிலிருந்து விலகி இன்னொரு இந்துமதமாக மாறி விட்டது என்றே நினைக்கிறேன். ஆனால் கிறிஸ்தவர்களுக்கான ஆசிரிவாதமும் அரசாணையும்  கூட அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வருகிறது என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் தேசம் இந்தியா என்பதை பல நேரங்களில் மறந்தே விடுகிறார்கள். அமெரிக்காவின் உயர்ந்த கோபுரங்கள் தகர்க்கப் பட்ட போது அண்டை வீட்டு முஸ்லீம்களைக் கூடப் பாளையங்கோட்டைக் கிறித்தவர்கள் எதிரிகளாக நினைத்தார்கள் என்பதை நான்  நேரடியாக உணர்ந்திருக்கிறேன்.
காந்தியிடமிருந்து எதனையும் கற்றுக் கொள்ளாத இந்து மதமும்,இந்துத்துவ வாதிகளும் சொந்தச் சகோதரர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்குத் தமிழ் நாட்டின் திண்ணியம் தொடங்கி இந்திய அளவில்  சாட்சிகள் ஏராளம். தொடர்ந்து உலக அளவில் அமெரிக்காவை மையப்படுத்திய கிறித்தவ  மேற்குலகத்தின் நெருக்குதலாலும், இந்திய அளவில் குஜராத்தை மையப்படுத்திய இந்துத்துவப் பெரும்பான்மைக்குரலின் ஆர்ப்பரிப்பாலும் தங்களைச் சிறுபான்மையினர் எனக் கருதத் தொடங்கி விடும் ஒரு கூட்டம்- இசுலாமியர்கள்-  தங்களின் அடையாளங்களைப் பேணுதல் , அதனைத் தக்க வைத்தல் என்ற நோக்கில் அடிப்படைகளை நோக்கிச் செல்வதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படைவாதிகள் எப்போதும் மத அடையாளங்கள் பெண்களாலும் ஏழைகளாலும் காக்கப்படுவதாக நம்புகின்றனர். மத அடையாளங்களைக் காக்க வேண்டிய கடமை ஆண்களைவிடவும் பெண்களுக்கே மிக்க பொறுப்புடைய ஒன்று என எல்லாச் சமயமும் நம்புகின்றன. அதில் இசுலாம் பெண்கள் அதிகம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் அதே நேரத்தில் ஆண்களும் விட்டு விடக் கூடாது என்கிறது. இதன் பின்னணியிலும் சிறுபான்மையினர் என்ற அச்சம் தான்  இருக்கிறது. ஆனால் இந்துமதமும் கிறிஸ்தவும் ஆண்களுக்கான மத அடையாளத்தை எப்போதும் வலியுறுத்துவதில்லை.
இந்த நேரத்தில் தான் தமிழின் காத்திரமான இசுலாமியப் படைப்பாளிகளான தோப்பில், ரசூல், சல்மா, போன்றவர்களின் தைரியம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. குறைந்த பட்சம் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையை ஒத்த ஒரு நாவலை இங்கே ஒரு இந்துப் பெண்ணோ, கிறித்தவப் பெண்ணோ  ஏன் இன்னும் எழுதவில்லை.
இந்து  மதத்திற்குள்ளிருந்து  அதனை விமரிசித்து எழும் குரல்கள் இலக்கின்றியெ விலகிச் சென்றுள்ளன. குறிப்பிட்ட ஒன்றை விமரிசிப்பது என்பதும் கூட உங்களின் ஏழாவது உலகம் போல மதத்தை நோக்கிய விமரிசனமாக இல்லாமல் அதன் சூழலில் நடக்கும் அட்டூழியம் என்பதாக விலகி விடுகின்றன. இல்லையென்றால் ஆர்ப்பாட்டமான நாத்திகக் குரல்களாக மாறிக் காற்றில் கரைகின்றன.
ஒரு முறை பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பேசிய  அம்பர்ட்டோ ஈகோவிடம்  ,” நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராகத் தொடர்ந்து  கருத்துச் சொல்கிறீர்கள்; ஆப்கானிஸ்தானில் நடக்கும் தலிபான்கள் பெண்களுக்கெதிராக நடத்தும் அடக்குமுறையைப் பெண்ணடிமைத்தனத்தைப் போக்க அமெரிக்கா அங்கு செல்ல வேண்டும் என்பதை ஏன் நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் “ என்பது போலக் கேட்டார்கள் மாணவர்கள்.  அப்போது அவர்  சொன்னதாக நான் படித்தது இதுதான்.” இசுலாமிய அடைப்படைவாதத்தை வெல்லும் சக்தியை ஆப்கானியர்களுக்குக் கொடும் எம் பரமபிதாவே எனப் பிரார்த்தனை செய்வதோடு அமெரிக்கா நின்று கொண்டால் போதும். அதன் பின் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்”  என்றார் .  இதுதான் உங்களின் குறிப்பைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது. உடனே எழுதி அனுப்பினேன்.
அ.ராமசாமி

கருத்துகள்

ஆண்டனி இவ்வாறு கூறியுள்ளார்…
//கடந்த கால் நூற்றாண்டாகக் கிறித்தவம் தொடர்ந்து சாதியத்தைக் கட்டிக் காக்கும் கெட்டி தட்டிப் போன நிறுவனமாக ஆகி விட்டது என்பது தான் தமிழக யதார்த்தம்.
அமெரிக்காவின் உயர்ந்த கோபுரங்கள் தகர்க்கப் பட்ட போது அண்டை வீட்டு முஸ்லீம்களைக் கூடப் பாளையங்கோட்டைக் கிறித்தவர்கள் எதிரிகளாக நினைத்தார்கள் என்பதை நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன்.//

அ.ராமசாமி அய்யா அவர்களுக்கு . உங்களுடைய எழுத்துக்களை விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. ஆனால் கிறிஸ்துவம் பற்றிய உங்களின் கருத்துக்களுக்கு கிறிஸ்துவன் என்பதால் பதில் அளிக்க விரும்புகிறேன். தமிழக கிறிஸ்துவத்தில் நிலவும் சாதிய கொடுமைகளைப் பற்றிக் திரு.ஆ. சிவசுப்ரமணியம் அவர்கள் தன்னுடைய கிறிஸ்துவமும் சாதியும் நூலில் " யூதர்களின் மாமூல்களை மாற்றியமைத்தமைக்காக யூதர்கள் கிறிஸ்து நாதரைச் சிலுவையில் ஆராய்ந்தனர். அவர் திரும்பவும் இங்கு வந்து தமிழக கிறிஸ்துவர்களின் மாமூல்களை (இது வடக்கன்குளம் என்ற கிராமத்தில் நடந்த சாதியக் கொடுமை பற்றி) மாற்றியமைக்க நேர்ந்தால் இரண்டாவது தடவையாக அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று கூக்குரலிடத் தவற மாட்டர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மையே. சாதியைப் பொறுத்தவரையில் இந்து மதத்திற்கும் கிறிஸ்துவ மதத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் அமெரிக்கவுடனும், ஐரோப்பவுடனும் தொடர்புபடுத்தி கிறிஸ்தவர்களை பேசும்போது கிறிஸ்தவர்களின் தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் கேள்விக்குறியதாகிறது. அமெரிக்க, ஐரோப்பா நாடுகளின் கலாச்சாரத்தை விரும்புவன் ஒரு தமிழ் சாதிக்காக சண்டையிட மாட்டான் என்பது என் கருத்து.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்