விழுப்புண்களும் விழுத்தண்டுகளும்

  
இன்று எனது வாழ்க்கையில் முக்கியமான நாள் என ஏதாவது ஒரு நாளைப் பலரும் கூறக் கேட்டிருக்கலாம். அப்படிக் கூறுபவர்களிடம் கொஞ்சம் கூடுதலாக விசாரித்துப் பாருங்கள். அந்த நாள் அவரது வாழ்க்கையில் நல்லது அல்லது கெட்டது என இரண்டில் ஒன்று நடந்த ஒரு நாளாக இருக்கும்.
வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும்படி நிகழ்ந்த அந்த நாளை நினைத்துக் கொள்வதற்காகவே அந்த மனிதன்  தனது வாழ்க்கையின் முக்கியமான நாள் என அதனைக் கருதுகிறான்.
தனிமனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் பெரும் நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தப் பட வேண்டும் என்பதற்காக அரசுகளளும் சில நடைமுறைகளைப் பின்பற்று கின்றன. அரசு தரும் சலுகைகள், உதவிகள் போன்றனவற்றைத் தேசத்தலைவர்களின் பிறந்த நாளன்றும், தேசத்தின் முக்கிய நாட்களான விடுதலை நாள், குடியரசு நாள் போன்றவற்றிலும் செய்கின்றன. முக்கிய நாட் களின் போது சலுகைகளையும் உதவிகளையும் வழங்குவது போல வேறு சில காரியங்களும் செய்யப் படுகின்றன. சிறைக்கைதிகளை விடுதலை செய்வதும் அத்தகைய செயல்களுள் ஒன்று.
மனிதாபிமான அடிப்படையில் நீண்ட நாள் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகின்றார்கள் என்று சொல்லப்பட்டாலும், அக்கைதிகள் சிறை இருப்புக் காலத்தில் தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்தவர்களாக மாறிவிட்டார்கள் என்பதைப் படிப்படியாக உணர்ந்த பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படும் நிகழ்வு நடக்கிறது. தமிழகப் பெருஞ்சிறைகள் பலவற்றிலிருந்தும் இந்த மாதம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நீண்ட நாள் கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர். பெரும்பாலும் ஆயுள் தண்டனை என்னும் பெருந்தண்டனையைப் பெற்ற கைதிகளே விடுவிக்கப்பட்டனர் என்பதை நாமறிவோம். அவர்களின் விடுதலையோடு தமிழகத்தின் பெருந் தலைவர்களுள் சிறப்பிடம் பெற்றவரான சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாள் இணைக்கப் பட்டது .
மனித வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் என்பன ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும் தங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றியும் நினைத்துக் கொள்வதற்கான நாள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அண்ணாதுரையின் பிறந்த நாளன்று விடுதலை செய்யப்பட்ட இவர்களுக்கு அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது என்பதை நாம் மறுத்து விடவும் முடியாது. இப்படி நினைத்துக் கொண்டு தினசரித் தாளைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது இந்தச் செய்தியை நான் வாசித்தேன். நீங்களும் வாசித்திருக்கக் கூடும். என்னை அந்தப் புகைப்படமும் பக்கத்திலிருந்த செய்தியும் அதன் அடியாழத்திற்கு அழைத்துப் போனது என்பதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தமிழகத்தின் பெருஞ்சிறைகளில் ஒன்றான பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட நான்கு ஆயுள் கைதிகளும் வரிசையாக நிறுத்தப்பட்டு எடுக்கப் பட்ட புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. வெள்ளை ஆடைகள் அணிந்து நின்ற அந்த நான்கு பேரைப் பற்றிய முன்தகவல்களும் செய்தியாக வெளியிடப் பெற்றிருந்தது. அந்த நான்கு பேரில் மூன்று பேர் தங்கள் உறவினர்களுடன் சென்றார்கள் என்றும் , ஒருவரை அழைத்துச் செல்ல அவரது உறவினர் ஒருவரும் வரவில்லை; அதனால் முதியோர் இல்லத்தில் அவர் சேர்க்கப் பட்டார் என்றும் அந்தச் செய்தி சொல்லியது. விடுவிக்கப்பட்ட நான்கு பேரும் கொலைகள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் என்பதையும் அந்தச் செய்தி சொல்லியது.
எட்டாண்டுகளுக்கும் குறையாமல் சிறையில் தங்கள் வாழ்நாளைக் கழித்துவிட்டு வெளியேறியுள்ள இந்த நான்கு பேருக்கும் திருப்பு முனையாக எந்த நாளைச் சொல்லுவது? அவர்கள் விடுதலையாகும் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 என்ற இந்த நாளையா? அல்லது அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்குக் காரணமான  பெருநிகழ்வுகளை- கொலைக்குற்றங்களைச் செய்தார்களே அந்த  நாளையா?
யோசித்துப் பார்த்தால் திருப்பங்கள் நிகழ்ந்த நாள் என்பது நம்மை மீறிய சக்தி ஒன்று நம்மை இயக்கிய நாளாக இருப்பதை உணரலாம். நமது தன்னுணர்வுக்கு அப்பாற்பட்டதான அந்த சக்தியின் காரணமாக அந்த நிகழ்வு நடந்தது என்றே நினைக்கிறார்கள். உயிர்க்கொலை செய்த ஒருவனை நிதானப் படுத்திக் கேட்டால் என்னை அறியாமல் நான் அதைச் செய்து விட்டேன் என்றே சொல்லக்கூடும். கொலை மட்டும் அல்ல; தற்கொலைக்கு முயன்று தோற்றவர்கள் கூடத் தன்னுணர்வு நீங்கிய கணத்திலேயே அந்த உணர்வுக்குள் தள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள். தன்னுணர்வு நீங்குதல் என்பதற்கு இன்னொரு பெயரே அமானுஷ்ய சக்திக்கு ஆட்படுதல் என விளங்கிக் கொண்டால் இது புரிய வரலாம்.
அமானுஷ்ய சக்தி நமக்கு நன்மைகளைத் தருகிற போது அதனை அதிர்ஷ்டம் விளைந்த நாள் எனக் கொண்டாடுகிறோம். அதே நாள் நமக்குத் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்திருந்தால் துக்க நாள் எனக் கருதிக் குற்றவுணர்வுக்குள் தள்ளப்படுகிறோம். செப்டம்பர் 15 அன்று விடுதலையாகி வெளியில் வந்து செய்தியாகவும், செய்திக்கான புகைப்படமாகவும் ஆன அவர்கள் - கொலைகள் காரணமாக சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்தக் கைதிகள்- தண்டனை கிடைப்பது வரை தாங்கள் செய்தது பெரும் சாகசம் என்றே நினைத்திருக்கக் கூடும். தாங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்றை முடித்துவிட்டதாகக் கர்வம் கூட அடைந்திருக்கலாம்.
நீதிமன்றத்தில் சாட்சியங்களும் சமூக ஒழுங்கும் பொது விதிகளும் சேர்ந்து நீங்கள் செய்தது கடமை நிறைவேற்றம் அல்ல; தண்டிக்கப்பட வேண்டிய பெருந்தவறு எனக்கூறித் தண்டித்த போது கூட உண்மையை உணர்ந்திருப்பார்கள் எனக் கூற முடியாது. ஆனால் எட்டாண்டுகளுக்குக் குறையாத சிறைவாசம் நிச்சயம் அவர்களைக் குற்றவுணர்வுக்குள் ஆழ்த்தியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அவர்களின் விடுதலை சாத்தியமாகி இருக்கிறது.
படத்தில் வரிசையாக நின்ற அந்த நால்வரும் ஏறத்தாழ வாழ்க்கையின் அந்திமக் காலத்தில் இருக்கும் முதியவர்கள். இனி வரும் ஒவ்வொரு நாளையும் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பத்தாரைப் பற்றியும், சுற்றி இருப்பவர்கள் பற்றியும் நினைத்துப் பார்த்துச் செயல்படும் பக்குவத்தை அடைந்தவர்களாக அவர்களை ஆக்கித் தான் சிறைவாழ்க்கை அனுப்பி இருக்க வேண்டும். அதற்கு மாறாக பழிக்குப் பழி வாங்குதல் என்பதாக அவர்கள் வெளியேறி இருந்தால் நடைமுறையில் செயல்படும் மனிதாபிமான விடுதலை என்னும் கருத்தாக்கமே கேள்விக்குறியாக மாறிவிடும்.
திருப்புமுனை நாட்களை நாம் திரும்பவும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் எப்படி நினைத்துக் கொள்வது என்பதில் வேறுபாடுகள். நமது ஒரு பெரியவர் தனது இளமைக்காலத்தைத் திரும்பவும் கிடைக்காது என வருத்தத்தோடு நினைத்துக் கொள்ளும் பிரபலமான பழந்தமிழ்க் கவிதை ஒன்றைப் பலரும் படித்திருக்கக் கூடும்.
இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
 “தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம்ஆகிய எமக்கே?
என வரும் இக்கவிதை புறநானூற்றில் உள்ளது. எழுதியவர் பெயர் தெரியாத இந்தக் கவிதையைத் தமிழ்ச் சமூகம் அவர் எழுதிய கவிதை வரியான ‘ தொடித்தலை விழுத்தண்டினார்’ என்பதைக் கொண்டே அழைக்கிறது.
இளமையின் துடுக்கும், பெண்கள் முன்னால் ஓர் ஆண் செய்து காட்டும் சாகமும் படம் பிடிக்கப்படும் இக்கவிதை நினைத்துப் பார்க்கும் கடந்த காலத்தை நம்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் கவிதை. இந்தக் கைதிகளின் படத்தையும் செய்தியையும் வாசித்தவுடன் என் மனக்கண் முன்னால், அந்தக் கவிதையின் வரிகளும் அது உண்டாக்கும் சித்திரமும் தோன்றின என்றாலும்,  எதிர்மறை நிலையிலேயெ தோன்றின என்பதையும் சொல்ல வேண்டும்.
இனி எனது அந்தக் கடந்த காலம் சாகசங்கள் நிறைந்த கடந்த காலம் எனக்குத் திரும்ப வராது எனச் சொல்லும் தொடித்தண்டிலை விழுத்தண்டினார் போல இந்த நால்வரும் கடந்த காலத்திற்காக ஏங்க வேண்டியதில்லை. குற்றவுணர்வு மிக்க அந்தக் கடந்த காலத்தை மறந்து விட்டுப் புதிய மனிதர்களாக ஆகும் நிலையை நோக்கி நிற்கும் அவர்களில் மூவருக்குத் தான் அந்த வாய்ப்பும் கூட இருக்கிறது. அந்த நான்கு பேரில் ஒருவரைத் தேடி அவரது உறவினர்களில் ஒருவர் கூட வரவில்லை என்பதை நினைக்கிற போது குற்றவாளிகளும், குற்ற நிலையும் இந்த உலகத்தில் என்னவாகக் கருதப்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
 நமது உலகம் நமது உறவினர்கள்- நமது செயல்பாடுகளினால் கிடைத்த அனைத்தையும்  விழுப்புண்களுக்காகக் கருதிக் கொள்வதில்லை என்பதை அந்த ஒருவரின் நிலை நமக்கு உணர்த்தியது.  விழுப்புண்கள் என அவர் நினைத்த குற்றச் செயல்கள் இன்று, விழுத்தண்டு ஊண்டும் முதிய காலத்தில் குற்றவுணர்வைக் கொண்டு வந்து சேர்க்கும் ஒன்றாக மாறிவிட்டதை அவர் உணர்வதை விட, அவரைப் பற்றிய செய்தியைப் படிக்கும் மற்றவர்கள் உணர வேண்டும் என்பதே மிக முக்கியம்

கருத்துகள்

குட்டி மணி இவ்வாறு கூறியுள்ளார்…
THANDANAIKAL THAVARUKALAI KURAPATHILLAI, MANNIPATHUM, MARAPATHUME KURAIKINRANA.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்