தலித் அல்லாதார் பார்வையில் தலித் எழுச்சி

தமிழ்ச் சிந்தனைத்தளம் -அரசியல், பொருளாதாரம், கலை இலக்கியம், போராட்டம் - என அனைத்துத் தளங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அது வரை பிராமணர்கள்/ பிராமணர் அல்லாதார் எனப்பிளவுபடுத்திப் புரிந்து கொண்ட எல்லாவற்றையும் இன்று தலித்/ தலித் அல்லாதார் என எதிர்வு களை நிறுத்தி விவாதிக்கவும் விளக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் எனக்கோருகிறது இந்த நெருக்கடி.
இந்த நெருக்கடியின் விதைகள் தூவப்பட்டு பத்துப் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டிய தலித் எழுச்சியின் விதைகள் தான் இன்றுள்ள நெருக்கடிக்கான காரணங்கள். பிராமணரல்லாத இடைநிலைச் சாதி உயிரி ஒன்று இந்த நெருக்கடியை எப்படி எதிர் கொள்கிறது என்பதில் தான் அதன் தன்னிலையும் நிலைப்பாடும் அடங்கியிருக்கிறது எனக் கருதிட வேண்டும்.
ஞாபக அடுக்குகளிலிருந்து இரண்டு செய்திகள்: செய்தி ஒன்று.
நான், 1989-ல் பணி நிமித்தமாகப் புதுவைக்கு வந்து ஓராண்டுக்குப்பின் இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவை அமைத்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தவும் செய்தோம். புதுவையிலும்,அதனைச்சுற்றியுள்ள சில கிராமங்களிலும் சுற்றுச் சூழல் மற்றும் சமூக அவலங்கள் பற்றிய  வீதி நாடகங்களை நடத்தி வந்த கூட்டுக்குரல் ,1990-களில் தலித் இயக்கம், கலை இலக்கியத் துறைகளில் வீச்சைத் தொடங்கும் போது அதனுடன் இணைந்து வீதி நாடகங்களை நடத்தத் தொடங்கியது. வெண்மணி முதல் சுண்டூர் வரை, நியாயங்கள், வார்த்தை மிருகம், தண்ணீர் முதலான தலித் பிரச்சினைகளை மையமிட்ட நாடகங்களை அரங்கேற்றவும் செய்தோம். புதுவையில் மட்டுமல்லாமல் நெய்வேலிகடலூர்,பண்ருட்டி போன்ற ஊர்களில் நடந்த தலித் கலை விழாக்களிலும் பின்னர் மதுரையில் நடந்த தலித் கலைவிழாவிலும் இரண்டு முறை நாடகங்களை அரங்கேற்றினோம்..அந்தக் கூட்டுக்குரல் 1996-க்குப் பின்,- 'தலித் இலக்கியங்களை தலித்துகள் தான் எழுதவேண்டும்' என்ற விவாதம் ஒரு முடிவுக்கு வந்தபின்பு- தலித் நாடகம் எதையும் செய்யவில்லை. அப்படிச் செய்யாமல் விட்டு விட்டதற்கு இந்தக் கருத்தியலை அப்படியே ஒத்துக் கொண்டது மட்டும் தான் காரணம் என்று இப்பொழுது நான் சொன்னால் முழுமையும் உண்மையாக இருக்காது. ஆனால் அதுவும் ஒரு காரணம்தான்.

அந்த நேரத்தில் தலித் நாடக முயற்சிகளில் ஈடுபட்ட நண்பரும் நாடகத்துறையின் தலைவருமான முனைவர் கே.ஏ. குணசேகரன், எனது மாணவியான முனைவர் மு.ஜீவா ஆகியோரின் வாய்ப்புகள் என்னால் பறிபோவதாக அவர்கள் நினைத்ததும் உண்டு. அவர்களது நினைப்பு தவறானது அல்ல. நானும், ரவிக்குமாரும் நண்பர்கள். எங்களை நாங்கள் இடதுசாரிகளாக உணர்ந்துகொண்ட நிலையில் தலித் உணர்வுகள் உருண்டு திரள்வதற்கு முன்பே சேர்ந்து சில காரியங்கள் செய்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே தலித் அலையிலும் பங்கெடுக்கிறோம். நண்பர் ரவிக்குமாரே பலநேரங்களில் தலித் கலை விழாக்களைத் திட்டமிடும் மையமாக இருந்தார். அந்த வகையில் அவர் முதலில் கேட்பது என்னைத்தான். நானும் நாடகத்தயாரிப்புச் செலவுகளைப் பற்றியெல்லாம் விவாதிக்காமல் சரியென்று ஒத்துக் கொள்வதுண்டு. என்னுடன் கூட்டுக்குரலில் இணைந்து பணியாற்றிய அருணன், கோமதி, பால சரவணன்வேலாயுதம், பெருமாள், பூபாலன் போன்ற நண்பர்களும் மறுப்புச் சொல்ல மாட்டார்கள். காரணம் இவர்களில் பெரும்பாலோர்  இடதுசாரிச் சிந்தனையின்பாலும் நவீனத்துவ வாழ்க்கை முறையின்பாலும் நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாக இருந்தது என்பதுதான்.ஆனால் அவர்கள் யாரும் பிறப்பு காரணமாக தீண்டாமையை அனுபவித்த தலித்துக்கள் இல்லை.

"நான் பலதடவை என்னையே நான் கேட்டுக்கொண்டதுண்டு; நீ ஏன் தலித் நாடக முயற்சிகளில் ஈடுபடுகிறாய்.."என்று..? அந்தக் கேள்விகளுக்கு ஊடாக, "ஒரு தலித் தனக்கான நாடகத்தை ரத்தமும் சதையுமாய் செய்து மேடையேற்றும் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிறேனோ" என்று நினைத்ததும் உண்டு. அந்த நினைப்பு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலித் நாடக முயற்சிகளிலிருந்து விலகச் செய்தது. நாடக இயக்கங்களைக் கட்டுவதிலிருந்து மட்டுமல்லாமல் நாடகத்துறைச் செயல்பாடுகளிலிருந்தும் விலகி, எழுதுவதுடன் நிறுத்திக் கொள்வது என்று திருநெல்வேலிக்குப் போய் துறையையும் மாற்றிக்கொண்டு விட்டேன். நாடகத்துறையிலிருந்து தமிழியல் துறையை நோக்கிய எனது விலகலைப் போலவேதான்  மற்றவர்களும் விலகினார்கள் என்று சொல்வதற்கில்லை. வெவ்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.

செய்தி இரண்டு.
புதுவையிலிருந்த காலங்களில் நடந்த இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் கவிஞர் பழமலய்யைச் சந்தித்திருக்கிறேன். தீவிரமாக அவர் கவிதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்த நேரம். பத்திரிகைகளும் அவர் கவிதைகள் இடம்பெறுவதை விரும்பிய காலகட்டம் அது.அவரும் புதுவையில் நடக்கும் கூட்டங்களுக்குத் தவறாது வருவார். அவர் வருவதை முதலில் பார்ப்பவர், வேடிக்கையாக 'இலக்கியத்தாசில்தார் வருகிறார்' என்று சொல்வார். எல்லோருடைய சாதியையும் தெரிந்து கொள்வதில் அவர் ஆர்வமாக இருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம். 'ரகசியமாகத் தெரிந்து கொள்ள முயல்வதைவிட வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள முயல்வது தவறில்லை' என்ற அவரது வாதத்தில் இருக்கும் நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. தன்னை தலித் கவிஞராக நினைத்துக் கொள்ளத் தொடங்கிய பழமலய் பின்னர் தலித்தல்லாத தலித் ஆதரவுக் கவிஞராக ஒதுங்கிக் கொண்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது அவரது நிலைப்பாடுகள் என்ன..? என்று எனக்குத்தெரியாது. ஆனால் வன்னிய அறிவுஜீவிகள் அடங்கிய கருத்துப் பட்டறையில் அவர் கலந்து கொண்டார் என்றும், அவர்தான் பொறுப்பாக இருந்து அப்பட்டறையை நடத்தினார் என்றும் திருநெல்வேலிப் பக்கம் செய்தி மிதந்துவந்தது. முதலில் கொஞ்சம் அதிர்ந்து போனேன்.பிறகு அதுவும் நல்லதுக்குத்தான் என்று தேற்றிக்கொண்டேன்.வன்னிய கலை இலக்கியவாதிகள் மட்டுமல்ல நாயக்க எழுத்தாளர்கள், தேவரினப் படைப்பாளிகள், கவுண்டர் கலைஞர்கள், பிள்ளைமார்கள் கவிஞர்கள், நாடார் அறிவுஜீவிகள் என ஒன்றிணைவதும் பட்டறைகள் நடத்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதைத் தடுக்கவும் முடியாது என்பதை நான் அறிவேன்.காரணம் அவர்கள் முன்னுள்ள அச்சமும் பயமும்தான் என்பதுகூடப் புரியக் கூடியதுதான். அச்சத்தையும் பயத்தையும் உண்டு பண்ணியதில் தலித் எழுச்சிக்கும் பங்கு இருக்கிறது.

நெருக்கடியின் விளைவுகள்
இப்படிப் பலரையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள தலித் எழுச்சி, தலித் அல்லாத அறிவுஜீவிகளை- தாங்களும் தலித் இயக்கங்களுடன் இருக்கவேண்டும்; தலித் இலக்கியம் படைக்கவேண்டும் ; தலித் விடுதலையில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பிய இடதுசாரி உணர்வுகொண்ட கலை இலக்கியவாதிகளை- உங்களுக்கு இங்கு இடமில்லை என்று சொல்லி ஒதுங்கச்செய்துவிட்டது. அதனுடன் அண்மைக்காலங்களில் தலித் சிந்தனையாளர்கள், பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சிந்தனைகள் மீதும் அவர் நடத்திய போராட்டங்கள் மீதும் விமரிசனங்களை எழுப்பி அவரை ஒரு பிராமணரல்லாத இடைநிலைச்சாதிகளின் நலன்விரும்பி எனக் கூறியபோது இடதுசாரிகளை மட்டுமல்லாமல் 'தமிழால் ஐக்கியம்' பற்றிப்பேசி வந்த தமிழ்த்தேசியவாதிகளையும் ஒதுங்கிக் கொள்ளச் செய்து விட்டது. இத்தகைய ஒதுங்குதல்களும் ஒதுக்குதல்களும் அவசியமானவைகள் தானா என்று திரும்பவும் நிதானமாக யோசிக்கவேண்டும்; விவாதிக்க வேண்டும்; முடிவுகள் எடுக்கவேண்டும். அப்படி நடக்காத நிலையில் ஏற்படும் பின்விளைவுகள் மிகமோசமானவைகளாக இருக்கக் கூடும் என்பதற்கான அடையாளங்கள் வெளிப்படத் தொடங்கிவிட்டன.

தலித் எழுச்சியும், மதவாத அரசியலும் தமிழ்நாட்டின் நடுநிலையான அறிவுஜீவிகளை- சாதி, மதங்களைக் கடக்கும் பயணத்தில் இருந்ததாக நம்பிய அறிவுஜீவி அல்லது கலை இலக்கியவாதி எனக் கருதிக் கொண்டிருந்த பலரை-அவரவர் சாதியடையாளங்களைத் தேடும் அறிவுஜீவிகளாகவும் மாற்றியுள்ளன. மண்ணின் மணம், பாரம்பரியப் பற்று, பண்பாட்டின் வேர்களைத்தேடுதல், பெருநெறிக் கெதிராக சிறுநெறிகளை முன்நிறுத்துதல் எனப்பேசித்திரும்பவும் சாதி அடுக்குகளில் மனதை அலையவிடும் நிலமானிய காலத்துச் சிந்தனைகளுக்குள் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அதன் வெளிப்பாடுகளாக ஒவ்வொரு இடைநிலைச் சாதிகளின் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும்  தனித்துப்பேசுவதும் ஒன்றிணைவதும் இணக்கமாகச் செயல் படுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இந்த இணக்கத்தில் வணிக எழுத்து, வெகுமக்கள் எழுத்து, பிற்போக்கு எழுத்து என்ற சொல்லாடல்கள் எல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அவைகளுக்கெதிராக இருந்த மனோபாவங்கள் துடைக்கப்படுகின்றன. எல்லாமே எழுத்துக்கள்தான் ; எல்லாமே பிரதிகள்தான் என்ற பின் அமைப்பியல் வாதச் சிந்தனைகளை இதில் பொருத்திப் பார்த்து அவற்றையும் நேர்மறை அம்சமாகக்கருதுவது சரியா...? என்று மட்டும்தான் இப்பொழுது கேட்கத் தோன்றுகிறது. இல்லை; இல்லைஇவையெல்லாம் பிராமணியத்திற்கெதிரான செயல்பாடு என்று கருதிக்கொண்டே பிராமணியத்தின் வலைக்குள் அகப்படுதல் என்றுகூற இன்னும் சில காலங்கள் ஆகலாம்.
இடைநிலைச்சாதி இலக்கியவாதிகள் தங்களுக்குள் ஒன்றிணைவதும் இணக்கமாகச் செயல்படுவதும் முற்றிலும் தலித் விடுதலைக் கெதிரான பயணத்தின் தொடக்கம் என்று கருத வேண்டியதில்லை. .இருக்கின்ற வேறுபாடுகளை மட்டுமே தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கும்போது அதன் விளைவுகள் எதிர்மறையாக அமையும் ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நிலைமைகளின் நடப்பு எதார்த்தம்கூட அவ்வாறுதான் இருக்கின்றன. இந்த நெருக்கடிகளைத் தவிர்க்க என்ன செய்வது என்று யோசிக்கவேண்டிய கட்டாயம் இருதரப்பினர் முன்னேயும் இருக்கிறது. இதில் யார் விட்டுக்கொடுப்பது..? யார் சமரசம் செய்துகொள்ள வேண்டும்..? என்ற பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கின்றன. தங்களுக்குப் பெரிய இழப்புக்கள் எதுவும் இல்லை எனக்கருதும் இடைநிலைச்சாதி எழுத்தாளர்கள் ஒருதலைப் பட்சமாகத் தலித் எழுத்தாளர்கள் தான் விட்டுத்தரவேண்டும் என்றும், முன்வைக்கும் விமரிசனங்களை விட்டுவிட வேண்டும் என்றும் நினைப்பது தெளிவாகவே புரிகிறது. இதுவரைத்தீவிரமாகத் தலித் இலக்கியம், தலித் சிந்தனை,தலித் விடுதலை எனப்பேசி வந்த, ஆதரித்துவந்த தலித் அல்லாதவர்கள்,' அது அவர்கள் பிரச்சினை ; அவர்களே பார்த்துக் கொள்வார்கள்' என ஒதுங்கத் தொடங்கி விட்டதன் வெளிப்பாடு இதனைத்தான் காட்டுகின்றன. இப்படி  ஒதுங்கிக் கொள்வது தலித்துக்களைப் பொறுத்தவரையில் ஓரளவுக்கு நல்லதுதான். ஆனால் தலித் அல்லாதவர்களைப் பொறுத்த வரையில் நல்லதல்ல என்று உறுதியாகச்சொல்லமுடியும்.
ஏற்புடையவைகள் தானா இந்தக்காரணங்கள்:
விட்டுக்கொடுத்தல், சமரசம் எனப்பேசி-தலித் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் இடைநிலைச் சாதி அரசியலான பிராமணரல்லாதார் அரசியல் மீதும் அதன் தலைவர்கள் மீதும் அதன் முன்னோடிச் சிந்தனையாளர்கள் மீதும் முன்வைக்கும் விமரிசனங்களைக் கைவிட வேண்டும் எனக்கூறுவது கூட பிராமணீயத்தின் சாதிக்கட்டமைப்பின் வெளிப்பாடுதான். இடைநிலைச்சாதி எழுத்தாளர்களின் படைப்புக்களை மறுவாசிப்புச் செய்வதை விட்டுவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் அதுதான் செயல்படுகிறது."நான் நம்புவதும் பின்பற்றியதும் உலகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறைகொண்ட -சர்வதேச மனிதனை நோக்கிய மனிதநேயச் சிந்தனை; அதற்குள் சாதிவேறுபாடுகளை ஒத்துக் கொள்ளும் மனநிலையும் சுயசாதி அபிமானமும் இருக்க வாய்ப்பே இருக்க முடியாது" எனக் கருதுவதன் வெளிப்பாடாகவே தங்கள் எழுத்துக் களைத் தலித்தியச் சிந்தனையின் ஊடாக மறுவாசிப்புச் செய்கின்றபோது  கோபம் கொள்கின்றனர். எழுத்து என்பது ஒருவிதத்தில் நனவிலி மனத்தின் வெளிப்பாடு எனக் கருதுகிறவர்கள் கூட தனது எழுத்தைப்பற்றிய விமரிசனத்தைத் தன்னைப்பற்றிய விமரிசன மாகவே கருதிக் கொள்கின்றனர். இத்தகைய கோபங்களும் சகிப்பின்மையும் சாதீயம்சார்ந்த தன்னகங்காரங்கள் அல்லாமல் வேறல்ல. நாகரீக சமுதாயத்தில் வாழுகிறவர் களாக நம்புகிற சாதாரண மனிதர்களுக்கே இத்தகைய தன்னகங்காரங்கள் தவிர்க்கப்பட வேண்டிய குணங்கள். ஜனநாயக சமூகம் இத்தகைய குணங்களை அனுமதிப் பதில்லை.அதிலும் தன்னையறிவதிலும் தன்னை யுருவாக்கும் சமூகத்தை அறிவதிலும் முழுமையும் ஈடுபட்டு அதையே எழுத்தாக வடிக்கும் கலை இலக்கிய வாதிகளிடம் அத்தகைய கோபங்களும் சகிப்பின்மையும் வெளிப்படுகின்றன என்றால் அவர்களை எழுத்தாளர்கள் என்று மதிப்பது இருக்கட்டும்;சாதாரணமான மனிதர்கள் என்று மதிப்பதே கேள்விக்குரிய ஒன்று.
ஓர் ஊரில் சாதிவேறுபாடு காரணமாக மனிதர்கள் சேரிகளில் வாழ நேர்ந்துள்ள பிரச்சினை தலித்துகளின் பிரச்சினை மட்டும்தானா..? அவர்களது தாகம்போக்கும் குடிதண்ணீரை  எடுத்துக் கொள்ள விதிக்கப்படும் தடைகளும், மீறுகிறவர்கள் வாயில் சிறுநீரைக் கழிப்பதும் மலத்தைத் தினிப்பதும் நடக்கிறதென்றால், அவை யெல்லாம் தலித்துகளின் சொந்தப் பிரச்சினை தான் என்று கருதிவிட முடியுமா...? சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அதிகாரத்தில் அனைவரும் பங்கேற்கும் வாய்ப்பை இந்த அரசியல் நிர்ணயச்சட்டம் தர விரும்புகிறது என முடிவு செய்து அதற்கென இடஒதுக்கீடு போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என ஒத்துக்கொண்டு ஐம்பது ஆண்டுகள் ஆனபின்பும் ஒருசில ஊர்களில் தேர்தலையே நடத்தமுடியவில்லை என்பதும், தேர்வுசெய்யப்பட்டவர் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் ,சாதி காரணமாகவே தேர்வு செய்யப் பட்ட கிராமத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்படுகிறார், என்பதும் நிச்சயமாகத் தலித்துகளின் பிரச்சினைகள் அல்ல. இந்தத் தேசத்தில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளில் முதலில் உள்ள பிரச்சினைகள். இத்தகைய தேசத்தில் வாழநேரும் ஒவ்வொரும் வெட்கப்பட வேண்டிய பிரச்சினைகள். 'புண்ணியபூமி' யெனப் பெருமை பேசும் சித்தாந்திகள் இதனைக் களைய வழிசொல்லவேண்டாமா..?. ‘இந்தியா ஒளிர்கிறது' எனச் சொன்னவர்களும் இனி அதனையே வேறு வார்த்தைகளில் சொல்லப் போகின்றவர்களும் இதையெல்லாம் அறியாதவர்களா...தெரிந்துகொண்டே நடிக்கும் சுதேசிகளாய் இருப்பது எதுவரை..? இப்படியான கேள்விகள் பலவற்றையும் தலித் எழுச்சி காரணமான நெருக்கடி நம்முன் நிறுத்தியுள்ளது.
தங்கள் சாதியில் தோன்றிய முன்னோர்கள் இந்நாட்டை ஆளும் சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர் களாயிருந்தார்கள் என்பதற்காகப் பெருமைப்படும்போது, சத்திரிய தர்மம் என்பது சாதி வேற்றுமையைப் பாதுகாத்த தர்மம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. தங்களுக்கு மேலே பிராமணர்களை வைத்துக் கொண்டு அவர்களின் யோசனையின் பேரில் வரம்பற்ற அதிகாரத்தையும் வன்முறையையும் நிகழ்த்தி யிருப்பார்கள் என்பதை மறந்து விடக் கூடாது; மறுத்து விடமுடியாது. எனது கடவுள் ஆரியக்கடவுள் அல்ல என் ஊரில் இருக்கும் அம்மன் என்றோ மாடன் என்றோ சொல்லிப்பெருமை பேசும் அதேநேரத்தில் அந்த அம்மனும் மாடனும் சாதி வேறுபாடு காரணமாகக் கொலை செய்யப்பட்டவர்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டவர்கள் என்பதை நினைக்கும் போது குற்றவுணர்வு உண்டாகாமல் போகாது. நமது பாரம்பரியம் சாதிகாத்த பாரம்பரியம்; நமது பண்பாடு சாதிகாக்கும் பண்பாடு. நமது அடையாளங்கள் சாதிசார்ந்த அடையாளங்கள்; நமது பெருமைகள் சாதி மேன்மை பேசும் பெருமை கள்தான் என்பதை எழுத்தாளர்களும் கலைஞர்களும் அறிவுஜீவிகளும் உணர்ந்து கொள்ளவில்லை யென்றால் வேறு யாரால் உணர்ந்து கொள்ள முடியும்?
இந்த நிலையில் தங்களுக்குள் ஒன்றிணையும் இடைநிலைச் சாதிகளின் கலைஞர்கள் தாங்கள் நடத்தும்  பட்டறைகளில் தங்களின் அடையாளங்களை, பழம்பெருமைகளை, வரலாற்றை எப்படிப்பதிவு செய்வது என்பதைப் பற்றிய விவாதங்களை முதலில் ஒதுக்கி வைக்க வேண்டும்; அதற்குப் பதிலாகத் தங்கள் சாதி மனிதர்களிடம் நிலவும் அறியாமையைப் போக்கும் மொழியைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக சாதிப்படி நிலைகள் சார்ந்த அறியாமை முதலில் களையப் படவேண்டும் என்பதைத் தீர்மானமாக்கி விவாதிக்க வேண்டும். தலித் அல்லாதவர்களும் தலித்துக் களும் இணைந்து வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். சாதிவேறுபாடு காரணமாக நிலவும் மனிதத் தன்மையற்ற மனோபாவத்தை விட்டொழித்தவர்களாகத் தங்கள் சாதியினரை மாற்றும் மிக முக்கியமான பொறுப்பு தலித் அல்லாத வர்களுக்கு இருக்கிறது. தலித் அல்லாதவர்கள் என்ற வகைப் பாட்டில் இடைநிலைச்சாதிகள் மட்டும் இருப்பதாக நான் நம்பவில்லை. பிராமணர்களும் தலித்தல்லாதவர்கள் என்ற வகைக்குள் தான் அடக்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்