அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்….

இப்போது நான் நிற்பது பயணச்சீட்டு வாங்குவதற்காக அல்ல; வாங்கிய பயணச்சீட்டை ரத்து செய்வதற்காக. ஆறு நாட்களுக்கு முன்பு நான் பதிவு செய்த போது காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது பெயர் நேற்றுத் தான் உறுதியானது. ஆனால் இன்றோ ரத்து செய்யும்படி ஆகி விட்டது. அப்படி ஆனதற்குக் காரணம் நான் அல்ல; இந்திய தேர்தல் ஆணையம் செய்த அறிவிப்பு தான் காரணம். இந்தத் தேர்தல் இன்னும் என்னென்ன திருப்பங்களைக் கொண்ட வரப்போகிறதோ தெரியவில்லை.

தேர்தல் உண்டாக்கும் திருப்பங்கள் அரசியல்வாதிகள் உழலும் பொதுவெளிக்கு மட்டும் தான் உரியது என்று நினைத்து விடாதீர்கள். நமது அன்றாட வாழ்க்கையிலும் தேர்தல்கள் திருப்பங்களை உண்டாக்கவே செய்யும். அதை நீங்கள் உணர வேண்டும்; உணர்தல் அறிவு; உணர்தல் தான் மகிழ்ச்சி; உணர்தல் தான் துயரம்; உணர்தல் தான் வாழ்க்கை. வாழ்க்கையை அதன் போக்கில் மட்டுமே வாழ சாதாரண மனிதர்கள் பழக்கப்பட்டுள்ளார்கள். நமது போக்கில் திருப்பிப் பார்க்க முயல்வது இலட்சியவாதிகளின் வேலை
நீங்கள் இலட்சியவாதியா? சாதாரண மனிதனா? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
நான் நின்ற வரிசையில் எனக்குப் பின்னால் மூன்றாவது ஆளாக நின்றிருந்தார் அவர். கையில் ரூபாய் நோட்டுக்களை மடித்து வைத்திருந்தார். இரண்டு முறை அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தார். ஆனாலும் பைக்குள் வைக்கவில்லை. கையிலேயே வைத்துக் கொண்டிருந்தார். எப்படியும் இன்னும் அரைமணிநேரம் காத்திருக்க வேண்டும். அதுவரை பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டியதில்லை; பைக்குள் வைத்துக் கொள்ளலாம் என்ற யோசனையைச் சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.
முன்பதிவுக்கான பணியாளர் வந்து திட்டிவாசலைத் திறக்கவில்லை. அநேகமாக ஏதாவது அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். அறுபதுக்கும் மேல்தான் வயது. ஆனால் தளர்ச்சியெல்லாம் இல்லை. அவர்தான் பேச்சுக் கொடுத்தார்.
கல்கத்தாவிற்கு முன்பதிவு செய்ய வேண்டுமாம். மார்ச் கடைசியில். பயணச்சீட்டு அவருக்கு அல்ல; அவரது தம்பி மகனுக்கு என்று சொன்னார். ”என்ன வேலையாகச் செல்கிறார்?” என்று உடனே கேட்டு விட்டேன். அரசுத்துறை சார்ந்த வேலை என்றால் திரும்பவும் ஒருமுறை உறுதி செய்துவிட்டுப் பயணச்சீட்டு வாங்கலாம் என்ற முன்னெச்சரிக்கையைச் சொல்லலாம் என்று கருதித்தான் அப்படிக் கேட்டேன். அரசு வேலை இல்லை; உறவினர் ஒருவரை அங்கிருந்து அழைத்து வர வேண்டும். வயதானவர்; தனியாக வரமுடியாது. இவன் போய் அழைத்துக் கொண்டு வருவான் என்று பதில் சொல்லிவிட்டு உங்களுக்கு எங்கே போக வேண்டும் என்று கேட்டார்.
பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை; ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுக் காரணத்தைச் சொன்னேன். தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை நடத்தும் இயல் இசை நாடகம் தொடர்பான 13 நாள் கலைவிழாவில் பங்கேற்றுப் பேசும்படி அழைக்கப்பட்டிருந்தேன். விழா ஏற்பாடுகள் முன்பே திட்டமிடப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பியாகி விட்டது. பிப்ரவரி 26 ந்தேதியே தொடங்கி விட்டது. நாலாம் தேதி நான் செல்ல வேண்டும் ஆனால் விழா ரத்து எனத் தகவல் வந்து விட்டது. வேறு வழியில்லை. வாங்கிய பயணச்சீட்டுக்கான பணம் நஷ்டம்.
அவர் சிரித்தார். சிரித்து விட்டு,” தடியெடுத்தவன் தண்டல்காரன்” என்ற பழமொழியை மட்டும் சொல்லி விட்டு நிறுத்தி விட்டார். எனக்கு ஏன் அப்படிச் சொன்னார் என்று புரியவில்லை. ’என்ன சொல்றீங்க’ என்றேன்.
ஜனநாயகம் செயல்படுவதாகச் சொல்லிக் கொண்டு ஜனநாயகத்தின் ஒவ்வொரு அமைப்பும் அதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். ஒருத்தர் பாக்கி இல்லை. அரசியல்வாதிகள் வெளிப்படையா ஆட்டம் போடுறான்; எல்லாருக்கும் தெரியுது. ஆனா அவனுகளும் பயந்துகிட்டேதான் ஆட்டம் போடுறான். அடுத்த தடவை ஓட்டுக் கேட்டுப் போற போது ஆப்பு வச்சிருவான்ற பயம் அவனுக்குள்ள இருக்கு; ஆனா இந்த கவர்மெண்ட் ஆபிசில இருக்கிறவனுக போடுற ஆட்டம் கொஞ்சநஞ்சம் அல்ல; அவனவனுக்கு ஒரு நேரம்.; காவல் துறைக்கு ஒருநேரமுன்னா , கோர்ட்டில இருக்கிற நீதிபதிகளுக்கு ஒரு நேரம்; வானளாவிய அதிகாரம் இருக்கிறதா ஒவ்வொரு துறையும் கருதுது. இப்போ தேர்தல் கமிஷன். தேர்தல் இல்லாதபோது பெட்டிப் பாம்பா கெடக்கிற தேர்தல் கமிஷன் தேதியைச் சொல்ற அதிகாரம் வந்த உடனே படம் எடுத்து ஆடி வேடிக்கை காட்டுது.
அவரது பேச்சு நிறைய பத்திரிகைகள் வாசிப்பார் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. என்ன வேலை பாத்தீங்க என்று கேட்டேன். ”என்ன வேலையா? எல்லா வேலையும் தான் பார்த்தேன். ஸ்டேட் கவர்ன்மெண்ட் கிளார்க்கா ஆரம்பிச்சு ஊர் ஊரா அலைஞ்சு கடைசியிலே டிப்டி தாசில்தாரா முடிஞ்சது, ஏன் கதெ, ஆறு தேர்தல ஆறு ஊர்கள்ல நடத்தியிருக்கேன்” என்றார். அவரே சொன்னார். நடந்துகிட்டு இருக்கெ விழாவெ எப்படி நிறுத்த முடியும்? எந்தச் சட்டத்தில் அப்படி எழுதி இருக்கு; அவனவன் அப்படி நினைச்சுக்கிட்டு நிறுத்திடுறான் சார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயின்னு சொல்வாங்கள்ல; அதுதான்.
அப்பொழுதுதான் எனக்கே உறைத்தது. தேர்தல் தேதி அறிவிப்பு செய்தாகி விட்டது என்பதற்காக திட்டமிட்ட எல்லாப் பணிகளையும் எப்படி நிறுத்த முடியும்? என்று கேட்டுக் கொண்டேன். அப்படி நிறுத்தும்படி யார் சொல்கிறார்கள் என்று கேட்டால் யாரும் சொல்வதில்லை என்பதும் புரிந்தது. அதை நடத்துபவர்களே இதெல்லாம் தேர்தல் நடத்தை விதிகளுக்குள் இருக்குமோ என நினைத்து நிறுத்தி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஒவ்வொரு மனிதனின் தலைக்குள்ளும் விதிகளும் விதிகளின் விளக்கங்களும் ஓடிக் கொண்டே இருக்கும்படி தூண்டுவதுதான் சட்ட நடவடிக்கைகளின் வெற்றி என்பது புரிந்தது. அதே போல் தேர்தல் தேதிகள் அறிவிப்பு கூட தர்க்கப்படி இல்லை என்று தோன்றியது. அவரிடமே கேட்டேன்.
45 நாட்களைத் தேர்தல் கமிஷன் தன்னுடைய காலமாக நினைக்குது சார். நாங்க நினைக்குறோம்; அதன்படி செய்யுங்க என்பதுதான் அந்த நினைப்புக்குப் பின்னாடி இருக்கு. ஜனநாயகத்தக் காப்பாத்திறதா நெனச்சிக்குட்டு அதன் ஒவ்வொரு அமைப்பும் எதேச்சதிகாரமா நடந்துகிட்டு இருக்கு; இந்திய ஜனநாயகத்துக்கு இதுதான் ஆபத்து. ஒவ்வொரு அமைப்பும் ஏற்படுத்தும் விரிசல்கள் மொத்தமா கட்டடத்தைக் காலி பண்ணிப் போகுது என்று கோபமாகச் சொன்னார்.
”தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடக்கும் நாள் ஏப்ரல்13 எனச் சொன்னது சரி; அதை எண்ணி முடிவு சொல்ல எதுக்கு ஒரு மாதம்?” கேட்டார்.
”மேற்கு வங்காளத்தில நாலு கட்டமாத் தேர்தல் நடக்குதில்ல; அதான் அது முடியவரை காத்திருந்து அப்புறம் எண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.” நான் சொன்ன பதில் அவருக்குச் சிரிப்பை வரவழைத்து விட்டது .
“இந்தியாவில ஒரே மன உணர்வு இருக்கிறதா நெனச்சிக்கிட்டு அப்படிச் சொல்றாங்க. அப்படி நம்ப வைக்கிறாங்க. உண்மையில அப்படியெல்லாம் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்தேர்தலும் தனித்தனி. அதனதன் பிரச்சினைகள் அந்தந்த மாநிலத்தேர்தலுக்கு மட்டும் தான் பொருந்தும். இந்த நிலையை இந்தியா 25 வருடத்துக்கு முன்னாடியே அடைஞ்சிருச்சு. சட்டசபைத் தேர்தல்களின் காரணங்களும் வெற்றி தோல்விகளும் வேறு எந்த மாநிலத்தையும் பாதிப்பதில்லை.”
அவர் சொல்வதை என் மனம் ஏற்கவில்லை; நாடாளுமன்றத்தேர்தலின் போது வடமேற்கு எல்லைப் புற மாகாணங்களும் தமிழ்நாடும் ஒரே உணர்வை வெளிப்படுத்தும் போக்கு இன்னும் இருக்கவே செய்கின்றது; காங்கிரஸ் இன்னும் தேசியக் கட்சியாக இருப்பதன் அர்த்தம் பொய் அல்ல என்று தோன்றியது. மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். எனது மௌனத்தைக் கண்டு அவரே தொடர்ந்தார்.
”சரி ஒரே மன உணர்வு இருப்பதா வச்சிக்கிருவோம். நாலு கட்டமா தேர்தல் நடத்த வேண்டிய மேற்கு வங்காளத் தேர்தலை முதலில் நடத்தி விட்டு ஒரே நாளில் தேர்தல் நடத்தும் கேரளம், தமிழ்நாடு, பாண்டிச்சேரியைக் கடைசியில் நடத்தலாமே? நடத்தி முடிச்சவுடனே தேர்தல் முடிவு தெரிஞ்சு போகுமே? ஏன் ஒரு மாதம் காத்திருக்க வைக்கணும்? எல்லாருக்கும் மனக் கொதிப்பை உண்டாக்கணும் “
ஒரு அரசுப் பணியாளராகவும் அதிகாரியாகவும்.. பல வருட அனுபவங்கள் கொண்ட அவரது இந்தக் கேள்வி ஒரு புத்திசாலியின் கேள்வியாகத் தோன்றினாலும் சாதாரண மனிதனின் தர்க்கமே இருப்பது எனக்குப் புரிந்தது. இன்னும் சில விசயங்களை அவரது எளிய உரையாடல் உணர்த்தியது.
தமிழ்நாட்டு மக்களுக்குரிய கொண்டாட்டப் பொறுப்பை இரண்டு மாதங்களுக்குக் கைமாற்றிக் கொள்ளப்போகிறது  தேர்தல் ஆணையம். அந்நிகழ்வுகளின் நாயகப்பொறுப்பைத் தற்காலிக மாற்றித்தர அரசியல்வாதிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது அவர்களின் பெருந்தன்மை தான். ஆனால் வாக்காளர்கள் எப்போதும் பார்வையாளர்கள் தான்.  அவர்கள் ஏப்ரல் 13 முதல் மே 13 வரை ரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதை அப்படியே அவரிடம் சொன்னேன்.
”அதெல்லாம் தேவையில்லீங்க. இலவசமா தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தாச்சில்ல.. தேர்தல் பெட்டிகள மறந்துட்டு ஐ.பி.எல். கொண்டாட்டத்தைப் பாருங்க.. குதூகலம் உச்சத்துக்குப் போயிடும்.
இந்தியர்கள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள். எத்தனையெத்தனை வேடிக்கைகள்.. விநோதங்கள்.. அவரவர் ஆட்டத்தை அவரவர்கள் ஆடுகிறார்கள்.

கருத்துகள்

தருமி இவ்வாறு கூறியுள்ளார்…
//வாக்காளர்கள் எப்போதும் பார்வையாளர்கள் தான்.//

வேடிக்கையும் வேதனையும் அதுதான்!

//எத்தனையெத்தனை வேடிக்கைகள்.. விநோதங்கள்.. அவரவர் ஆட்டத்தை அவரவர்கள் ஆடுகிறார்கள்.//

ஆடும் வரை ஆட்டம் ...!

word verification தேவையற்றது என்று நினைக்கிறேன். எடுத்து விடலாமே?!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்