பாடத்திட்டம்: பாஸ்டன் பாலாவின் கேள்வி: எனது பதிலும் விளக்கங்களும்



எனது முகநூல் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியாகத் தினத்தந்தியின் செய்தி ஒன்று இருந்தது. அதை எனது சுவரில் ஒட்டிய பாஸ்டன் பாலா என்பவர், ”இது குறித்து தங்கள் எண்ணம்  என்ன? ”  என்று கேட்டிருந்தார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=740129&disdate=6%2F26%2F2012 
பாஸ்டன் பாலா! உங்கள் கேள்விக்கு முதலில் எனது கருத்தைச் சொல்லி விடுகிறேன்: 
நவீனத்துவ அடிப்படைகளற்ற நம்பிக்கைகள் சார்ந்து எழுப்பப்படும் கண்டனங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்பது என்னுடைய பொதுவான கருத்து. பக்தர்களின்நம்பிக்கைக்கும், ”பாட்டாளி மக்களின்” ” தார்மீகக் கோபத்திற்கும், ஆதிக்கக் குழுமங்களின்கண்ணசைப்புக்கும் ஏற்பப் பாடத்திட்டத்தை அமைப்பது என முடிவு செய்து விட்டால் பாடத்திட்டம் உருவாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.
அத்தோடு 10 பேர் கொண்ட வல்லுநர் குழு(?) ஏற்றுக் கொண்டு முடிவு செய்த பாடத்தை ஊடகங்களில் வரும் கண்டனச் செய்தி அல்லது பல்கலைக்கழகத்தை நோக்கி வரும் ஊர்வலம் ஆகியவற்றைக் காரணம் காட்டிப் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக  மாற்றுவது என முடிவு செய்தால் பெரும் ஆபத்தில் கொண்டு போய் முடித்து விடும். முதலில் அந்தத் தவறைச் செய்த குழுவினருக்குத் தண்டனை தந்து விட்டு மாற்ற வேண்டும். குழு உறுப்பினராகச் செய்ய வேண்டிய பணியைச் செய்யாமல் இருந்ததின் தொடர்ச்சியில் தானே இத்தகைய எதிர்ப்புணர்வுகள் எழுகின்றன. குழுவினரின் பொறுப்பின்மை உணரப்பட்டால், அக்குழுவை நீக்கி விட்டு மாற்றுக் குழுவை அமைத்துப் பரிசீலனை செய்தல், அதில் கிடைக்கும் முடிவு எனச் செல்வதே சரியான ஜனநாயகப் பார்வையாக அமையும். அப்படிச் செய்யாமல் எடுத்தேன்; கவிழ்த்தேன் எனப் பாடத்திட்டத்தை உடனடியாக மாற்றக் கூடாது என்பதைச் சொல்லும் அதே நேரத்தில் டி.செல்வராஜின் நோன்பு சிறுகதைத் தொகுப்பு பாடமாக்கப்பட்டதை  நான் முழுமையாக ஏற்கவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அதற்கான காரணங்கள் ஒன்றல்ல; பற்பல.

தினத்தந்தியில் செய்தியாக வந்துள்ள இந்தக் குறிப்பின் விரிவான கண்டனம் தமிழ் இந்து இணைய தளம் வழியாக ஏற்கெனவே நான் வாசித்த ஒன்று தான். எல்லா நேரங்களிலும் இது போன்ற கண்டனங்கள் அல்லது எதிர்ப்புணர்வின் பின்னணியில் வியாபார நோக்கம் மட்டுமே இருக்கும் என்பதை நானறிவேன். பட்டப்படிப்பில் சேரும் 90 சதவீத மாணாக்கர்கள் வாங்க வேண்டிய பகுதி ஒன்று பாடப் பகுதிகள் குறித்து மட்டும் தான் எதிர்ப்புணர்வும் கண்டனங்களும் எழுகின்றன. மற்றவற்றைப் பற்றி கடவுள் நம்பிக்கை கொண்ட பக்தர்களும்சரி, அரசியல் சித்தாந்தங்களின் மீது நம்பிக்கை கொண்ட இயக்கவாதிகளும்சரி கவலைப்படுவதில்லை. தங்களின் சிறுகதைத் தொகுப்பு அல்லது நாவல் அல்லது உரைநடைத் தொகுப்பு பாடப்பகுதியாக ஆகாமல் போகும் நபர்கள் அல்லது பதிப்பகத்தாரின் தூண்டுதலும் இந்த எதிர்ப்புணர்வில் பின்னணியாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.

பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலைமை. நான் துறைத்தலைவராக இருந்த காலங்களில் பட்டப்படிப்புப் பாடத்திட்ட வல்லுநர் குழுவில் ஆலோசனை சொல்லும் உறுப்பினராக இருந்ததால் நேரடியாக அறிந்தவன். தொடர்ந்து ஆசிரியர்களை மையப்படுத்தியே பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணாக்கர்களை மையப்படுத்தி எப்போதும் பாடத் திட்டக்குழு உறுப்பினர்கள் யோசிப்பதில்லை. அதிக அனுபவம் என்ற அடிப்படையில் உறுப்பினராகி விடும் மூத்த பேராசிரியர்களைக் கொண்டு அமைக்கப்படும் பாடத்திட்டங்கள் அவர்களின் வாசிப்பைத் தாண்டி நகர்வதில்லை. தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படும் அபத்தம் பற்றி கட்டுரைகளும் எழுதியுள்ளேன்; விஜய் தொலைக்காட்சி நீயா நானாவில் விரிவாகப் பேசவும் செய்துள்ளேன். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகப் போகிறது என்று சொல்வதைத் தவிர என்ன செய்து விட முடிகிறது. தமிழ் ஆதியிலிருந்து தொடங்கி நிகழ்காலத்திற்கு வரும் விதமாகக் கற்பிக்க வேண்டும் எனச் சொல்லிச் சண்டை போட்டுத் தோற்றுப் போனேன். இப்போதும் தலைகீழாக – நிகழ்காலத்திலிருந்து பின்னோக்கிப் போகும் விதமாகவே இலக்கிய வரலாறு கற்பிக்கப்படுகிறது.

மற்றப் பல்கலைக்கழகங்களை விட நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் விநோதமானது. இடதுசாரிகளின் சங்கம் இன்னும் வலிமையோடு இருக்கிறது. அதனால் அவர்களின் ஆதரவு பெற்ற நூல்கள் சுலபமாகப் பாடமாகி விடும். எளிமையாகச் சமூக முரண்பாட்டைப் பேசும் கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் பாடம் நடத்துவதற்கு – குறிப்பாகச் சமுதாயவியல் நோக்கில் பேசுவதற்கு எளிதானது என்பதால் இடதுசாரிகள் அல்லாதவர்களும் அதையே விரும்புகிறார்கள். ஆனால் இப்போது குமரி மாவட்டத்தில் இந்துத்துவ உணர்வு மேலோங்கி வருவதால் கருத்து ரீதியாக முரண்பாடுகள் வரத்தொடங்கி உள்ளன என்பதற்கு இந்த எதிர்ப்பு ஓர் அடையாளம்.

என்னிடம் கொஞ்சம் அதிகாரம் இருந்த காலத்தில் நான் செய்த ஒன்றை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அனைத்துப் பாடங்களையும் கற்கும் மாணாக்கர்களுக்கு பகுதி ஒன்று பாடத்தில் ‘ஒரு ஆசிரியரின் சிறுகதைத் தொகுதியைப் பாடமாக வைப்பது சரியல்ல என்பதைச் சொல்லிப் பல ஆசிரியர்களின் சிறந்த கதைகளை அறிமுகப் படுத்தலாம் என வேண்டுகோள் வைத்தேன். அப்படியொரு தொகுப்பைக் கண்டறிவது சிரமம் என மறுத்துப் பார்த்தார்கள். அப்போது அத்தகைய தொகுப்பை நாமே உருவாக்கலாம் எனச் சொல்லி ஏற்றுக் கொண்டு வேலையைத் தொடங்கினேன். தமிழின் முக்கியமான 12 சிறுகதை ஆசிரியர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பை ஆசிரியர்களுக்குப் பணம் கொடுத்து அனுமதி பெற்று உருவாக்கித் தந்தேன். என்னோடு இணைந்து பணியாற்றும் மனநிலையோடு ஒரு பேராசிரியை அந்தக் குழுவில் இருந்தார் அவர் பெயர் வி. ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி

Pannirantu cirukataikal / A. Ramacami, Vi. Hermana Jilt Aracci ...
newarrivals.nlb.gov.sg/itemdetail.aspx?bid=13103037
Block all newarrivals.nlb.gov.sg results
Pannirantu cirukataikal / A. Ramacami, Vi. Hermana Jilt Aracci. 
பன்னிரண்டு சிறுகதைகள் / அ. ராமசாமி, வி. ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி.

வரலாற்று அடிப்படையிலும் (உயிருடன் இருப்பவர்கள் 6 பேர்; இல்லாதவர்கள் 6 பேர்) நிலவியல் அடிப்படையிலும் எங்கள் (பல்கலைக்கழகம் அமைந்துள்ள குமரி,நெல்லை, தூத்துக்குடி மாவட்டக் கதாசிரியர்கள் 6 பேர்; பிற பகுதிகளிலிருந்து 6 பேர்) சமூக அடுக்குகள் மற்றும் வேறுபாடுகளுக்கான பிரதிநிதித்துவம் எனக் கவனமாகக் கதைகளைத் தெரிவு செய்தோம்.; ஒவ்வொரு ஆசிரியர்களின் குறிப்பை விரிவாக எழுதி அந்தக் கதையை வாசிப்பதற்கான தூண்டுகோலும் உருவாக்கப் பட்டிருந்தது. அதற்காக நான் ஒருவாரம் செலவழித்தேன். பல்கலைக்கழக வெளியீடாகக் கொண்டு வந்தோம். அதன் மூலம் பல்கலைக்கழகத்திற்குப் பணம் கிடைத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக 6 ஆண்டுகள் இருந்த அந்தப் புத்தகத்தைத் தூக்கி விட்டு இப்போது டி. செல்வராஜின் நோன்பு தொகுப்பை வைத்திருக்கிறார்கள். பொதுத்தமிழ் பாடத்தில் ஒரே ஆசிரியரின் கதைகளைப் பாடமாக வைப்பது சரியான முறையல்ல. நாங்கள் தொகுத்தது போல ஒரு தொகுப்பை உருவாக்கும் முயற்சியில் மனம் செலுத்தாமல் ஒரே ஆசிரியரின் கதைகளைப் பாடமாக்கியிருக்கிறார்கள்.
===========================

தமிழ் இந்துவில் வந்துள்ள கட்டுரை

ஆண்டாள் மீது வக்கிர அவதூறு
June 26, 2012

னோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 2012-13 ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தில் இளநிலை (BA, BSc) முதலாண்டு முதல் பருவம் தமிழ்பாடப்பகுதியில் தோழர்.டி.செல்வராஜ் எழுதிய நோன்பு என்னும் சிறுகதைத் தொகுதி இடம் பெற்றுள்ளது. இச்சிறுகதைத் தொகுதியில் அமைந்த நோன்புஎன்னும் சிறுகதை பாடநூலில் இடம் பெறும் தகுதி அற்றது.
இச்சிறுகதையின் நோக்கம் விஷமத்தனமானது; மரபுவழி வந்த பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் எண்ணமுடையது. ஆண்டாள், பெரியாழ்வார், பாண்டிய மன்னன் ஆகிய மூவரும் இச்சிறுகதையின் முக்கிய பாத்திரங்கள்.புதிய கோணத்தில் மறுவாசிப்புஎன்னும் போர்வையில் இம்மூவர் மீதும் அவதூறு பேசுவதே கதையின் நோக்கம் ஆகின்றது.
ஆண்டாள் துளசிச்செடி அருகில் கண்டெடுக்கப்பட்டவள் என்பது வைணவ மரபு. அவளை தாசிமகள் ஆக்கியுள்ளது இக்கதை. பெரியாழ்வார் அகத்தில் கண்ணனையும் புறத்தில் ஆண்டாளையும் வளர்த்த பெரும் பேறு உடையவர். அவரை ஆன்மஞானம் பெற்றவராகவும், பக்தியில் கனிந்த சீலம் நிரம்பியவராகவும் தமிழ்மரபு போற்றும். அவரை தாசி உறவு பெற்றவராகச் சித்தரிக்கிறது இக்கதை. பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லப தேவன் தெய்வீக விஷயங்களில் ஆர்வம் மிக்கவனாகவும், சம்வாதங்களை ஆதரித்தவனாகவும் மரபுச் செய்திகள் கூறும். அவனைப் பெண் பித்தனாகச் சித்தரிக்கின்றது இச்சிறுகதை. இச்சிறுகதை காட்டும் இச்சித்தரிப்புகள் அனைத்துமே சான்றாதாரங்கள் அற்றவை. உயர்மனச் சூழலில் மானுட விழுப்பம் கருதிப் பேணியப் பண்பாட்டு விழுமியங்களை இழிவுபடுத்தும் கதாசிரியரின் உள்நோக்கம் சிந்தித்தற்குரியது. கற்பனை சுதந்திரம் என்னும் பெயரில் இவர் நிகழ்த்தும் கலாச்சார அவதூறு கண்டிக்கத்தக்கது, ‘மறுவாசிப்புஎன்னும் பெயரில், முதல் வாசிப்பே அறியாத மாணவ மன வயலில் இவர் விதைக்கும் பிழை வாசிப்புகல்வி ஆர்வலர்களால் தண்டிக்கத்தக்கது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் மரபு வழிப் போற்றப்படும் மேன்மைச் சித்திரங்களை எழுத்தாளர் சுதந்திரம் என்னும் முகமூடி அணிந்து சேறுவாரி எறிதல்; அதனைப் பாடத்திட்டக்குழுவுக்கு பரிந்துரை செய்தல்; அது பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுதல் ஆகிய மூன்று குற்றங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும். நிகழ்ந்த குற்றங்களுக்கு காரணமாகிய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இனிமேல் இவ்வகைக் குற்றங்கள் நிகழாவண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் இது பல்கலைக்கழகத்தின் பெயருக்குக் கேடு விளைவிக்கும் செயலாகும்.
நமது சிந்தனையில் தெளிவு வேண்டும். இது கல்விசார்ந்த (academic) விஷயம். பிரச்சார மண்டபம் அன்று. நல்லவற்றை இழிவுபடுத்துவதும், தீயவற்றை அங்கீகரித்து மேலெடுத்துச் செல்வதும் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்தில் வரும் வழி கெடுக்கும் நடனப்பாட்டு. ‘Fair is foul and foul is fair’ என்று வீரன் மாக்பெத் வரும் வழியில் பாடி ஆடிக்கொண்டிருக்கும் இருட்குரலே நாடகத்தில் வியாபிக்கும். இந்த நடனப்பாட்டின் நிழல் விழுந்த ஆய்வுகள் ஏற்கனவே முற்போக்கு என்னும் பெயரில் தமிழில் நிறையவே வருகின்றன. காரைக்காலம்மையைக் கொச்சைப்படுத்தி, ஔவையாரை இழிவுபடுத்தி, ஆண்டாளை அவதூறு செய்து தோழர்கள்சிலர் எழுதியுள்ளனர். இடக்கை ஆசிர்வாதங்கள் இவர்களுக்கு உண்டு. உலக அரங்கில் தமிழின் பெருமிதங்களாக கருதவல்ல உயர் சிகரப்படைப்புகள் தந்த இப்பெண்களை அவமானப்படுத்துவது தமிழினத்தை அவமானப்படுத்துவது ஆகும்.
அன்னியச் சித்தாந்தங்களுக்கு விலைபோகும் போது, சின்னஞ்சிறு சௌகரியங்களில் மிதப்பு காணும் போது, உயர் லட்சியங்களுக்கு கண்ணடைக்கும் போது, இது நிகழும். இவர்களின் செயல்பாடு மானுட மேன்மைக்கு எதிரானது. சிந்தனை மண்டலத்தில் பிழை மனச்சித்திரங்கள் சித்தாந்த முலாம் பூசி நுழைய முற்படும்போது எளிதில் வலிமை பெற ஏற்ற இடமாகப் பாமர வாக்குவங்கிகளையும், பல்கலைக்கழக வளாகங்களையும் குறி வைக்கக் காண்கின்றோம். பல்கலைக்கழகம் பன்மடங்கு எச்சரிக்கையுடன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கிறது.
அவதூறு பரப்பும் ஒரு மனநோய்க்கு பாடத்திட்டத்தில் இலக்கிய அறிமுகம் வழங்குவது மிகவும் தவறான முன்னுதாரணம். மாணவர் நலனும், பல்கலைக்கழகத்தின் தரமும், நாட்டின் எதிர்காலமும், ஒரு சிலரின் சித்தாந்த வெறிக்கும் பொருளாதார லாபத்துக்கும் பலியாகிவிடக்கூடாது.
வாழ்க்கைச் சிதறல்களில் ஏதேனும் ஓர் அனுபவத்துளி நோக்கிய அழகிய பாய்ச்சல் மொழிநுட்பத்தோடு சிறுகதைகளில் நிகழல் வேண்டும். Singleness of aim and singleness of effect முக்கியம் என்பது பாலபாடம். குருவிக் கழுத்துக்குக் குறிபார்க்கும் அர்ஜுன அம்பு சிறுகதை. வாமனம் நெடுமாலாகும் வித்தையும் அங்குண்டு. மனிதநேய தடாகங்களில் குள்ளக் குளிர்ந்து நீராடாத போது, மன அழுக்கைச் சுரண்டிச் சுருட்டும் சோம்பல் விரலுக்கு நோன்புபோலும் சிறுகதையே திரளும். அனுபவத்தில் நேர்மை, கருத்தோட்டத்தில் தெளிவு, வாழ்வியலில் அழகும் ஆழமும் பருகும் துடிப்பு, உலகத்தரத்துக்கு உன்னதங்களைத் தரும் திறன் என விரியும் சிறுகதை உலகம் தமிழுக்கு உண்டு. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ஜெயகாந்தனின் யுக சந்தி’, சுந்தர ராமசாமியின் சீதைமார்க் சீயக்காய்த் தூள்’, லாசராவின் ஜனனி’, ஜெயமோகனின் அறம்’ … என ஒரு பல்வண்ணப் பார்வை குழல் (Kaleidoscope) தந்து மாணவ மன மண்டலத்தை உயர் சிகரங்களில் உலவச் செய்ய வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமை. இதற்கு ஏற்ப பாடத்திட்டக் குழுவை நெறிமுறைப்படுத்த வேண்டும்.

சில வினாக்கள்:
1. ‘ஆண்டாள் தேவதாசி வம்சத்துக் குலக்கொடிஎன்கிறது நோன்புஎன்னும் சிறுகதை. இது வரலாற்று ஆதாரம் சிறிதும் அற்றது. எனவே அவதூறு. ஆண்டாளை அவ்வாறு கூறுவதற்கு ஆதாரம் தர இயலுமா?
2. ஆண்டாளைத் தேவதாசியாகச் சித்தரிப்பது எழுத்தாளன் சுதந்திரம்என்று கூறித் தப்பலாம்; ‘தேவதாசி என் பார்வையில் இழிந்தவர் அன்றுஎன கூறி வாதிடலாம். எனில், சமகாலப்பெண்களில் யாரையேனும் அல்லது தமது உறவுப் பெண்டிர் (மன்னிக்கவும்) யாரையேனும் இவ்வாறு சித்தரிப்பது தோழர்களுக்கு ஏற்புடையதுதானா?
3. பெரியாழ்வார் ஆண்டாளை வளர்த்த செய்தி குருபரம்பரைக் கதைகள் வழி அறியலாகும் மரபுச்செய்தி. இதை நிராகரித்து ஆண்டாள் மனத்துக்கு ஒவ்வாத, ஆண்டாளை மதிப்போர்க்கு மனம் ஏற்காத இழிவுச் சித்திரம் படைத்தல்தான் மறுவாசிப்பா? இது இலக்கிய கயமை ஆகாதா?
4. ’கோட்டை மதிலுக்கு வெளியே கேட்கும் தோட்டி மகனின் ஓலம் ஓநாயின் ஒப்பாரியாகக் காற்றில் கலந்து மறைகிறது.என்கிறது கதை. மானுட நேயம் பேசுவோரிடம் சாதி இழிவுப்பார்வையின் உவமை வரலாமா? மதுரைவீரன் திரைப்படத் தாக்கத்தின் முதிராப் பார்வைப் பதிவா? அது மட்டும்தானா? இது அடிமனத்தில் ஒளிந்திருக்கும் சாதிய வக்கிரத்தின் வெளிப்பிதுங்கல் என ஆழப்பார்வை காட்டவில்லையா? இப்புத்தகத்தையே பாடத்திட்டத்தில் வருவதைத் தடுக்க இது போதுமான காரணம் ஆகாதா? ஔசித்தியம் என ஒன்று பாரத மரபில் காட்டப்படுமே!
5. ’விளக்கின் கதிர்கள் காமன் எறிந்த கனலாகத்தகிப்பது முதிரா மனத்தின் மூன்றாந்தர எழுத்தாளர்களின் வாய்ப்பாடுகள்அல்லவா?
6. ’கைக்கட்டாரியுடன் ரோந்து வரும் ஊமையான கச்சணிந்த காவற் பெண்டிர்ஆண்டாள் காலப்பின்னணியில் இல்லையே? சங்க இலக்கியத்திலிருந்து அல்லது சாண்டில்யனின் கதைகளிலிருந்து H.G.வெல்ஸின் காலயந்திரத்தில் ஏறி எப்படி வந்தார்கள்?
7. ‘ஸ்ரீ வில்லிபுத்தூர் என்னும் அப்புண்ணிய ஸ்தலம் நிலவொளியில் ஜலக் கீரிடையாடிக் கொண்டிருக்கிறதுஎன அறிமுகப்படுத்துகிறது சிறுகதை. கோபுரக் காட்சியின் சித்திரமோ பூரித்து எழுந்து நிற்கும் குமரிப்பெண்ணின் கச்சணிந்த கொங்கையாக ஆசிரியருக்குக் காட்சியளிக்கிறது. தமிழக உன்னதங்களை இளநிலை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் நடையா இது? ஆசிரியரின் இழிமனப் பிதுங்கல்கள் அல்லவா இவை?
8. தமிழக அரசின் சின்னம் கோயிற் கோபுரம். அது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரப்பதிவு, இரண்டையும் இழிவுபடுத்தும் இக்கதைக்குப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அனுமதி வழங்கலாமா? இம்மனநிலை தவறென எச்சரிக்கும் வகையில் இவரது நூற்களுக்குப் பல்கலைக்கழக மஞ்சள் அட்டை’ (வேணுமானால் சிவப்பு அட்டை) எனும் ஒரு தடைமுறை உருவாக்கலாமே.
9. “எத்தனை எத்தனையோ ஆரணங்குகளைக் கண்டிருந்தாலும் அனுபவித்திருந்தாலும்…” என்றெல்லாம் பாண்டிய மன்னனின் பலவீனத்தைச் சித்தரிப்பது விரசமான வருணனை அல்லவா? கீழ்த்தர கதைத் தொழிலில் பாமர பலவீனத்துக்கு தீனி தரும் கருவும் பின்னலும் நடையும் கொண்ட சிறுகதையைத் தாங்கிய இந்நூல் எந்தத் துணிவுடன் பாடத்திட்டத்தின் முன் சென்று நின்றது? மாணவர்க்குப் பல்கலைக் கழகம் வழி அறிமுகப்படுத்த வேண்டிய செய்தியும் அதைச் சுமக்கும் நடையும் இத்துணை அளவு தரம் தாழலாமா?
10. நூலின் அட்டைப்படத்திலும் ஆடும் தோற்றத்தில் தரப்பட்ட சலங்கை அணிந்த பாதம் அதிர்ச்சி தருகிறது. பெண்ணொருத்தியின் குனிந்த நிலைச் சித்திரம் போலும் அருவருக்கும் தோற்றம் அதில் உண்டு. ஆசிரியரின் மனவிகாரம் தரும் விரசம் இச்சித்திரத் தேர்வில் வெளிப்படவில்லையா? மாணவ மாணவியர் கையிலேந்தும் நூலில் இவ்வகை அட்டைப்படத்தை பல்கலைக் கழகமே தருதல் சரியா?
11. ’மார்க்சீயப் பார்வையில்படைத்ததாக முற்போக்கு இலக்கிய வட்டத்தில் இயங்கியவராக’ ‘சோஷலிஸ்ட் யதார்த்தப் படைப்பாளியாகஇந்நூலின் பின்னட்டை புகழ்கிறது. இக்கதை ஆண்டாள் வரலாற்றைப் புதிய கோணத்தில் மறுவாசிப்பு செய்த முதல்கதை என புகழப் பட்டுள்ளது. அருவருப்பான அபத்தத்தை இவர் சார்ந்திருக்கும் சித்தாந்த வட்டம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
12. தரம் தாழ்ந்து பாடத்திட்டக் குழுவில் பரிந்துரை சந்தைகளில் தந்திர லாவகங்களுடன் செயல்படும் தற்கால இலக்கிய வணிகர்கள் கல்லூரியின் அறிமுகநிலை மாணவர்களுக்கு இவ்வகை நூல்களை விலைப் படுத்துவது மொழிக்கும், பண்பாட்டுக்கும், நாட்டுக்கும் பெருங்கேடு. நவீன இலக்கிய சோலைக்குள் இளங்கலை மாணவர்கள் செல்ல உதவ வேண்டிய பல்கலைக்கழகத்தை நச்சுப் பொய்கையாக்கவே வழிவகுக்கும் இத்தகைய செயல்பாடுகள் நிறைந்த சூழ்நிலையில் பல்கலைக்கழகம் கல்விக் கடமையாற்றத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
பேரா. என்.சுப்பிரமணியம் அவர்கள் நாகர்கோவில் தெ.தி. இந்துகல்லூரியில் தமிழ்துறை தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் குறிப்பாக பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் கொண்டவர்.
இது குறித்த பத்திரிகை செய்தி:

னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இந்த கீழ்த்தரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அவதூறு சிறுகதை பாடத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்கப் படவேண்டும். அனைத்து இந்து சமூக, ஆன்மிக அமைப்புகளும் பல்கலைக் கழகத்திற்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று கோருகிறோம். வாசகர்கள் இந்த இணைப்பில் உள்ள மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டும் பல்கலைக் கழகத்திற்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்கலாம்

கருத்துகள்

அரவிந்தன் நீலகண்டன் இவ்வாறு கூறியுள்ளார்…
அன்புள்ள பேரா.அ.ராமசாமி அவர்களுக்கு,

வணக்கம் தங்கள் முயற்சியை ஒத்த ஒன்றையே இக்கட்டுரை ஆசிரியரும் கூறியிருக்கிறார் அல்லவா? // அனுபவத்தில் நேர்மை, கருத்தோட்டத்தில் தெளிவு, வாழ்வியலில் அழகும் ஆழமும் பருகும் துடிப்பு, உலகத்தரத்துக்கு உன்னதங்களைத் தரும் திறன் – என விரியும் சிறுகதை உலகம் தமிழுக்கு உண்டு. புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ஜெயகாந்தனின் ‘யுக சந்தி’, சுந்தர ராமசாமியின் ‘சீதைமார்க் சீயக்காய்த் தூள்’, லாசராவின் ‘ஜனனி’, ஜெயமோகனின் ‘அறம்’ … என ஒரு பல்வண்ணப் பார்வை குழல் (Kaleidoscope) தந்து மாணவ மன மண்டலத்தை உயர் சிகரங்களில் உலவச் செய்ய வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமை. இதற்கு ஏற்ப பாடத்திட்டக் குழுவை நெறிமுறைப்படுத்த வேண்டும்.//

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்