சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்கள்: ஒரு நேரடி அனுபவம்

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்களுக்கு அனுமதி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்து விட்டது. ஊடகங்களிலும் மேடைப் பேச்சிலும் எதிராக இருப்பது போலப் பாவனை பண்ணும் ஆளுங் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுங்கூட்டணியை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் எதிர்க்கட்சியும், அதன் கூட்டணிகளும் வெளியில் மட்டுமல்ல; பாராளுமன்றத்திலும் எதிர்த்துப் பேசத்தான் போகிறார்கள். 
அதற்காக இந்தக் கொள்கை முடிவு திரும்பப் பெறப்படும் என்று யாரும் நம்ப வேண்டியதில்லை. மைய அரசின் முடிவுகளுக்கு மாற்றாகச் செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஜெ.ஜெயலலிதாவின் மாநில அரசு உடனடியாக இந்தக் கொள்கை முடிவை ஏற்றுக் கொள்ளாமல் கொஞ்சம் தள்ளிப் போடலாம். உலகமயப் பொருளாதாரத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? என்பதில் தீர்மானகரமான முடிவு எதையும் காண்பித்துக் கொள்ளாமல் அவ்வப்போது மனதில் தோன்றும் நிலைபாடுகளுக்கேற்பச் செயல்படும் அவரின் ஆலோசகர்களில் பலர் இந்தக் கொள்கை முடிவின் ஆதரவாளர்கள் என்பதால் நீண்ட காலம் தள்ளிப்போடும் வாய்ப்புகளும் இல்லை. 

இந்தியாவைப் போலவே 20 ஆண்டுகளுக்கு முன்பு தாராளமயப் பொருளாதாரத்திற்குள் நுழைந்த ஐரோப்பிய நாடான போலந்து நாட்டில் -. அதன் தலைநகரம் வார்சாவில் வசித்துக் கொண்டிருக்கிறேன். வந்து ஓராண்டு முடிந்து விட்டது. போலந்து 1990 களுக்கு முன்பு சோவியத் யூனியனின் சோசலிச உற்பத்தி முறையைப் பின்பற்றி குடிமைப் பொருட்களைத் தேவைக்கேற்ப வழங்கும் பங்கீட்டு முறையையும், ஆடம்பரமற்ற அத்தியாவசியப் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருந்த நாடு. அடிப்படை உணவுப் பொருட்களான உருளைக்கிழங்கையும் காய்கறி களையும் இறைச்சியையும் (மாடு, பன்றி) போதுமான அளவுக்கு மேல் உற்பத்தி செய்த நாடு. ஆனால் சோசலிச விநியோக முறையில் இருந்த குளறுபடிகளாலும் நட்பு நாடுகளின் நெருக்கடியாலும் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு அவை கிடைக்காமல் போனது. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற போர்வையில் சொந்த நாட்டு மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களைத் தர முடியாமல் தத்தளித்த சோசலிசக் கட்டமைப்பில் அதிகாரத்துவமும் சுதந்திரமின்மையும் தலையாட்டம் போட்ட போது போராட்டங்கள் வெடித்தன. 1980 களின் இறுதி ஆண்டுகளில் வீதியில் இறங்கிப் போராடினார்கள். உணவுக்காக மட்டுமல்லாமல், உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்காகவும் தான் போராடினார்கள். பலவகையான தடைகளை நீக்கிய அரசதிகாரம் 1990 1990-களின் தொடக்கத்தில் சோசலிசக் கட்டமைப்பைக் கைவிட்டது. தனியார் மயம், தாராளமயம், உலகமயம் எனத் திசைகளைத் தெரிவு செய்த உடனேயே பன்னாட்டு மூலதனத்தில் தொடங்கப்பட்ட பெரும் பேரங்காடிகளும் அவற்றில் ஆடம்பரப் பொருட்கள் மட்டுமல்லாமல் சில்லறைப் பொருட்களின் விற்பனையும் வந்து விட்டன. அதன் பலன்களை அனுபவிக்கும் போலந்துக்காரர்களின் வாழ்நிலையை.- அந்த அனுபவத்தை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற வகையில் சிலவற்றை இங்கே கூறலாம் என நினைக்கிறேன். இந்தியச் சூழ்நிலையில் எப்படிப் பொருத்திக் கொள்வது என்பதை வாசிப்பவர்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன். 

காலனியத்திற்குப் பிந்திய இந்திய அரசுகள், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போலத் தான் கொள்கை முடிவுகளை எடுக்கின்றன. தனியார் மயம் கொஞ்சம்; பொதுத்துறையில் கொஞ்சம்; அரசுத்துறையாகக் கொஞ்சம் என அல்லாடுகின்றன. போலந்து அப்படியெல்லாம் தயக்கம் காட்டவில்லை. சோவியத் ருஷ்யாவின் நினைவுகள் கனவிலும் வரக் கூடாது என முடிவு செய்து விட்டுப் பக்கத்தில் இருந்த ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளை மாதிரியாக எடுத்துக் கொண்டு தொடக்கத்திலேயே முக்கிய முடிவுகளை எடுத்து விட்டது. .கசப்பான சோசலிசக் கட்டமைப்பை முற்ற முழுதாகக் கைவிட்டு விட்டு முதலாளியப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் நுழைந்த நாடு என்பதால் தயக்கமின்றி எல்லா நிலைகளிலும் தனியார் மயத்தையும் தாராளமயத்தையும் உலகமயத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டது. ஐரோப்பியப் பெருமுதலாளிகளின் வருகைக்கு அனுமதி அளித்துள்ள போலந்து இன்னும் அமெரிக்காவின் வால்மார்ட்டை அனுமதிக்கவில்லை. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வால்மார்ட்டின் பேரங்காடிகள் இல்லை என்பதையும் இந்தியர்கள் கவனிக்க வேண்டும். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது என்னும் சொலவடையை உணர்ந்த இந்தியக் கிராமத்துக்காரகள் போல அமெரிக்கா புகுந்த நாடும் விளங்காது என்பதை உலக நாடுகள் பல உணர்ந்துள்ளன; நமது மத்திய அரசாங்கத்திற்கு மட்டும் அது புரியவில்லை. 

மைய மாநில அரசுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய கட்சிகள், கட்சி அரசியலின் லாபத்திற்காக பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகளின் நிர்வாகத்தைச் சீர்குலைத்து விட்டுத் திசைதடுமாறிக் கொண்டிருந்த போதுதான் உலக அளவில் சோசலிசக் கட்டமைப்பு நாடுகளும் மறு சீரமைப்பு என்ற பெயரில் முதலாளித்துவப் பொருளாதாரத்தை நோக்கி நகரத் தொடங்கின. இந்தியாவின் பிரதமராக வந்து சேர்ந்த பி.வி. நரசிம்மராவுக்கு நிதி அமைச்சராக அனுப்பப்பட்ட டாக்டர் மன்மோகன் சிங்கின் வழிகாட்டுதலில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தாராளமயத்துக்குள் இந்தியாவும் நுழைந்தது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் கொள்கை முடிவுகளை நரசிம்மராவ் அரசாங்கமும், அவருக்குப் பின்னால் வந்த வாஜ்பாய் அரசாங்கமும் தவணை முறையில் எடுத்தன 

####### ######### 

வார்சாவில் ஒரு நுகர்வோனாக என்னுடைய அன்றாடத் தேவைக்கான பொருட்களைப் பல விதமான கடைகளில் வாங்கிக் கொண்டிருக்கிறேன். கேரிபோர், டெஸ்கோ, அவுசான், ரியால், மார்க்போல், மோக்போல், லிடல், சாம்சூப்பர், பித்ரங்கோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளில் மட்டும் அல்லாமல் பக்கத்திலேயே இருக்கும் நம்மூர் உழவர் சந்தைப் போன்ற சந்தையிலும் தினசரித் தேவைக்கான பொருட்களை வாங்கிக் கொள்கிறேன். அதற்குப் பக்கத்திலேயே வாகனங்களையே விற்பனை யகமாக மாற்றி வார இறுதி நாட்களில் வந்து விடும் ’நகரும் அங்காடி’களிலும் கூடச் சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம். நான் மட்டுமல்ல; இங்குள்ள எல்லாரும் இவ்வகைக்கடைகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். பன்னாட்டுப் பேரங்காடிகள் நுழைந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னும் போலந்தில்- அதன் தலைநகர் வார்சாவிலும் வார்சாவைப் போன்ற பெருநகரங்களான க்ராக்கோ, போஸ்னான், கிடான்ஸ் போன்றவற்றிலும் எல்லா தரப்புக் கடைகளும் இருக்கின்றன; அவை காணாமல் போய்விடவில்லை என்பது ஆறுதலான செய்தி. அதற்குக் காரணம் போலந்து அரசு கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடுகளும் விதி மீறல்களை அனுமதிக்காக நிர்வாக நடைமுறைகளும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வகை அங்காடிகளும் 10 அல்லது 15 நிமிடப் பயணத்தில் அடைந்து விடக்கூடிய தூரத்தில் இருக்கின்றன. ஆனால் பெரும்பேரங்காடிகளை உள்ளடக்கிய ”மால்கள்” அருகருகே அமைக்கப்படவில்லை. வாகனங்களில் போனாலே அரைமணி நேரம் ஆகும் விதமாகப் பத்துக் கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடைவெளியில் தான் அமைக்கப்பட்டுள்ளன. 

பேரங்காடிகளில். அதிகப்படியாக இருப்பவை ஆடைகள் விற்பனை யகங்கள் தான். காலணிகள், வீட்டு உபயோகப்பொருட்கள், மின்னியல் சாதனங்கள், உணவு விடுதிகள், பயணத்தேவைகள், எனத் தேவை சார்ந்த பொருட்கள் மட்டுமல்லாமல் அழகு சாதனப் பொருட்கள், ஆடம்பரப்பொருட்கள், உள் அலங்கார, வெளி அலங்காரப் பொருட்கள் எனப் பலவகையான பொருட்களை விற்கும் மையங்கள் இருக்கின்றன. முக்கிய வங்கிகளின் கிளைகளும் அவற்றின் தானியங்கிப் பணம் வழங்கும் எந்திரங்களும் இருப்பதோடு திரையரங்குகள், விளையாட்டுக்கூடங்கள், கொண்டாட்ட மையங்கள், என எல்லாம் உள்ளேயே அமைக்கப் பட்டுள்ளன. சென்னையில் இருக்கும் ஸ்பென்சர் வணிக வளாகம் போன்றன எனச் சொன்னால் புரியும் என நினைக்கிறேன். இத்தகைய வணிக வளாகங்களில் ஏற்கெனவே சில்லறை வணிகத்தில் நுழைந்து விட்ட ரிலையன்ஸ், மெகாமார்ட் போன்றன செயல்படுவதுபோல இனி வால்மார்ட்டும் அதன் வகை மாதிரிகளான கேரிபோர், ரியால், அவுசான், டெஸ்கோ போன்றனவும் இந்தியாவில் கடை விரிக்கும். சில்லறை வியாபாரத்தில் இந்தியப் பெருமுதலாளிகள் தொடர் அங்காடிகள் செய்யத் தொடங்கி விட்ட வியாபாரத்தைத் தான் பன்னாட்டுக் குழுமங்களின் பேரங்காடிகள் செய்யப் போகின்றன வேறுபாடு அவ்வளவு தான். 

இந்தக் கடைவிரிப்பின் மூலம் லாபம் அடையப்போகிறவர்கள் யார்? யார்? என்பதை முதலில் விளங்கிக் கொள்ளலாம். இக்கொள்கை முடிவினால் அதிக லாபம் அடையப் போவது முதலீடு செய்யப் போகும் பன்னாட்டுக் குழுமங்கள் மட்டுமே என்பது போன்ற வாதங்கள் தூக்கலாக இருக்கின்றன. ஆனால் அது மட்டுமே உண்மை அல்ல. இந்த வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. முதலீடு செய்வதே லாபத்திற்காகத் தானே. பில்லியன் கணக்கில் முதலீடு செய்யும் பன்னாட்டுக் குழுமங்கள் லாபம் அடையாமல் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்க முடியாது. அதைப் பற்றிப் பேசாமல் அரசும், காங்கிரஸ்காரர்களும் இந்தியப் பொருளாதாரத்திற்கு, இந்திய விவசாயத்திற்கு, இந்திய நுகர்வோருக்கு, இந்தியத் தொழிலாளர் களுக்கு ஏற்படும் நன்மைகளை மட்டுமே பேசுகிறார்கள். இது திசை திருப்பும் வேலை. . 

கொள்கை முடிவு நடைமுறைப் படுத்தப்படும்போது அதன் தொடர்புச் சங்கிலியில் அனுமதி அளிக்கும் அரசு நிர்வாகம், அதன் மூலம் பெரும் பேரங்காடிகளை அமைக்கப் போகும் பன்னாட்டு மூலதனக் குழுமங்கள், அப்பெரும் பேரங்காடிகளில் பொருட்களை வாங்கப் போகும் நுகர்வோர் ஆகிய மூவரும் உடனடியாகக் கண்ணுக்குத் தெரிகின்றனர். கண்ணுக்குத் தெரியாமல் பிணைக்கப்படுவனவாக மூலப் பொருட்களை உற்பத்தி செய்து தரும் இந்திய வேளாண்மையும், சிறு மற்றும் பெரும் ஆலைத் தொழில்களும் நிற்கின்றன. .அவற்றோடு இவை எல்லாவற்றிலும் உழைப்பை மட்டும் கொடுத்துக் கூலியைப் பெற்றுக் கொள்ளப்போகும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் யார் யாரெல்லாம் எந்தெந்த விகிதத்தில் பலன் அடைவார்கள் என்பதைச் சுருதி சுத்தமாகச் சொல்ல முடியாது என்றாலும் சில அனுமானங்களை முன் வைக்க முடியும். 

உடனடியாகப் பலன் அடையப் போகின்றவர்கள் பெருநகரவாசி களான உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் என்பதில் மாற்றுச் சொல்லமுடியாது. தரமான பொருட்களை, நேர்மையான விலையில் வாங்க விரும்பும் இவர்களை இந்தக் கொள்கை முடிவு அதிகம் கவரப் போகிறது. முழுவதும் குளிரூட்டப்பட்ட பெரும் பேரங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களையும் அலங்காரப் பொருட்களையும் வாங்கிவிட்டு அவற்றுக்குரிய விலையை வரியோடு செலுத்திய மனநிறைவோடு இனி வீடு திரும்புவார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைத் தங்களிடமிருந்து வாங்கும் வியாபாரிகள் அரசுக்குச் செலுத்துவதில்லை என்ற ஆதங்கமும், ரசீது போடாமல் பொருட்களை வாங்கி விட்டுக் குற்றவுணர்வில் நெளியும் மனச் சிக்கலும் இனி இருக்காது. இந்த வரிகளைக் கட்டுவதோடு சேர்த்து அவர்கள் தரப் போகும் விலைகளும் விலை உயர்வும் அவர்களுக்குத் தெரியாமலேயே ஏற்றப்படும் என்பதை அவர்கள் கவனிக்கப்போவதில்லை. மறைமுக விலையேற்றம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அன்றே சாப்பிடும் தயிர் கால்கிலோவுக்கு 2 ஜுலாட்டி (இந்தியரூபாய் 30/-) ஒருவாரம் தாக்குப்பிடிக்க 2.2 அதே தயிர் ஒருமாதம் வரை கெடாமல் இருக்க வேண்டும் என்றால் 2.7 தர வேண்டும் விலை நிர்ணயிப்பில் காலம் நுழையும் போது ஏன் இந்த வேறுபாடு என்று நுகர்வோர் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. 

அடிக்கடி கடைக்கு வர விரும்பாத நடுத்தரவர்க்கத்தினர் நீண்ட நாள் கெடாமல் இருப்பதையே விரும்புவார்கள் என்பதைச் சொல்லி விளக்க வேண்டியதில்லை. கைவிரல்களால் எண்ணித் தரப்படாத கரன்சிகளை கணிணி வழியாகவே பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது விலை உயர்வுகளைப் பொருட்படுத்தும் மனநிலையெல்லாம் அவர்களுக்கு வராது. தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அந்த விலையைக் கொடுப்பவர்களாக அரசுகளும் தனியார் நிறுவனங்களும் அவர்களை ஆக்கி வைத்திருக் கின்றன. உயரும் விலைவாசிகளுக்கேற்ப படிகளும் ஊக்கத் தொகைகளும் தரப்படுவதன் மூலம் அவர்கள் முழுமையாக நுகர்வோராக ஆகி விட்டனர். எழுதி வைக்கப்படும் விலை, வசூலிக்கப்படும் வரிகள் உட்பட அனைத்தும் வெளிப்படையாகத் தெரியும் வகையில் ரசீதுடன் கூடிய வியாபாரத்தை இந்தப் பன்னாட்டுச் சில்லறை வணிகக் குழுமங்கள் நடத்திக் காட்டும். ஆகவே நடுத்தர வர்க்கம் இந்தக் கொள்கை முடிவால் தாங்கள் எதையும் இழக்கவில்லை என்றே நம்புவார்கள். மகிழ்ச்சி கொள்வார்கள். எதையும் இழக்காமலேயே பலன் அடைவதாக அவர்கள் நம்பப் போவதால் இந்தக் கொள்கை, நடுத்தர வர்க்கத்தினர் வரவேற்கவும் ஆதரிக்கவும் செய்வார்கள்; வந்தபின் விட்டுவிடவும் மாட்டார்கள். 

அடுத்ததாக உடனடியாகப் பலன் அடையப்போவது அரசாங்கம். மாதச் சம்பளக்காரர்களிடம் கறாராக வருமான வரியை வசூலிக்கும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது போலச் சில்லறை வணிகர்களிடம் கறாரான வரியை வசூலிக்கும் கட்டமைப்பு வசதியை உருவாக்கத் தவறி விட்டன நமது அரசுகள். எல்லாவற்றையும் கணக்கு மூலம் நிர்வாகம் செய்யும் பன்னாட்டுக் குழுமங்களிடம் பெரிய அளவு சிரமங்கள் இல்லாமல் வரியை வசூலித்து விடும் வாய்ப்புகள் உள்ளது. அந்த வரி இதுவரை கிடைத்த வரி வருவாயை விடப் பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்பதிலும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இந்த வரிவாயைக் கூட்டாமல் குறைப்பதற்கு அரசை நடத்தும் கட்சிகளும் அதன் பொறுப்பாளர்களும் பெறும் உள் ஒதுக்கீடுகள் அரசாங்கத்திற்கு வராமல் போகும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. 

அடுத்துத் தொழிலாளர்கள். இப்போதுள்ள சில்லறைக் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் அவ்வளவு பேரும் தங்கள் அனுபவங்களை வைத்துக் கொண்டு அப்படியே அங்கே தாவி விட முடியும் என எதிர்பார்த்தால் நிச்சயம் நடக்காது. இவர்களின் அனுபவத்திற்கும் புதுவகைக் கடைகளில் வேலை செய்யப் போகின்றவர்களிடம் எதிர்பார்க்கப்படும் திறமைக்கும் பெருமளவு தொடர்புகள் இருக்காது. கீழ்நிலைப் பணிகளான சுத்தம் செய்தல், சுமைகளைத் தள்ளுதல், ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளுக்கு மட்டுமே இவர்கள் பயன்படுவார்கள். மற்றவைகளையெல்லாம் எந்திரங்களும் மேலாளர்களும் கணிணியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களும் பார்த்துக் கொள்வார்கள். அந்தத் தராதரங்களுக்கேற்ப சம்பளவிகிதங்கள் அளிக்கப்படலாம். அவை எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதை நமது அரசுகள் உறுதி செய்து தர வேண்டும். செய்யவில்லையென்றால் வறுமைக் கோட்டிற்குப் பக்கத்தில் இருப்பவர்களின் கூட்டம் அதிகமாகி விடும் ஆபத்துகளே அதிகமாகும் . 

புதுவகை அங்காடிகளின் வியாபாரத்தின் மூலம் இந்திய வேளாண்மையும் சிறு மற்றும் குறு ஆலைத்தொழில்களும் பெரிய லாபம் அடையும் என்பதையும் மறுக்க முடியாது. லாபம் அடையும் என்பதைவிட அவற்றின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்த மாற்றங்களால் இந்தியர்கள் மட்டுமே பலன் அடைவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது. இப்போதுள்ள இந்திய விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் உற்பத்திக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், உற்பத்திப் பொருட்களைப் பாதுகாத்து தேவையை –நெருக்கடியை உண்டாக்கி விலையேற்றத்தை உருவாக்கிக் கொள்ளும் சாதகமான அம்சங்கள் அவர்களிடம் இல்லை. அதனைச் சாத்தியமாக்க அரசின் உதவியையும், வணிகர்களின் தயவையுமே நாடிக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாகவே தங்களின் பிரதிநிதிகளாகக் கருதும் அரசியல்வாதிகளின் மூலம் மானிய விலை உரம், கொள்முதல் விலை நிர்ணயம் ஆகியவற்றைக் கோருகின்றனர். அல்லது வந்த விலைக்கு உற்பத்தியான உடனேயே வியாபாரிகளின் விற்று விட்டுக் கையும் காலும் தான் மிச்சம் எனத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு போகிறார்கள். அல்லது தோல் துண்டுகளையே சுருக்குக் கயிறாக மாட்டிக் கொள்கிறார்கள். 

இந்த நிலையில் பெரும் மாற்றத்தை இந்தக் கொள்கை முடிவு கொண்டு வரும் என்பதைச் சொல்லும் அதே நேரத்தில் அந்த மாற்றம் சரியான திசையில் இருக்காது என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்..இந்திய வேளாண்மை பெருந்தொழில்களைப் போல நவீன மயப்படும் வாய்ப்புகள் அதிகம். சிறு மற்றும் குறு விவசாயிகள் அப்போது போட்டியிட முடியாமல் பெரும் பண்ணைகளுக்குத் தங்கள் நிலங்களைக் குத்தகைக்குக் கொடுத்து விட்டு அங்கே வேலை செய்யும் கூலிகளாக மாறும் வாய்ப்புகள் ஏற்படும். தங்கள் குடும்பத்தில் கார்ப்பரேட் முறையில் வேளாண்மையை வளர்த்தெடுக்கும் திறமைசாலிகளை வைத்திருக்கும் வேளாண் குடும்பங்கள் தொடர்ந்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து பன்னாட்டுக் குழுமங்களின் தேவையை நிரப்பக்கூடும். அல்லது இந்திய வேளாண்மைக்குள்ளும் பண்ணைத் தொழில் என்ற போர்வையில் வெளிநாட்டுக் குழுமங்கள் நுழையக் கூடும். சிறு மற்றும் குறு விவசாயம் அழிக்கப்பட்டு பண்ணை வேளாண்மை பெருகுவதை வளர்ச்சி என நமது அரசுகளும் அதன் திட்டமிடல் வல்லுநர்களும் கூறுவார்கள். 

இந்திய அரசு, இந்தியத் தொழிலாளிகள், இந்திய விவசாயிகள், இந்திய நுகர்வோர் என எல்லோர் நிலையிலும் மாற்றங்களைக் கொண்டு வரப்போகும் இந்தக் கொள்கை முடிவு பன்னாட்டு மூலதனக் குழுமங்களுக்கு எதனைத் தரும் எனக் கேட்கலாம்.. இப்போது பல்லாயிரம் கோடிகளில் முதலீடு செய்யப் போகும் வால்மார்ட், கேரிபோர், டெஸ்கோ, அவுசான், ரியால் போன்ற பன்னாட்டுக் குழுமங்கள் நிரந்தரமான லாபம் அடைய குறைந்தது நான்கு அல்லது ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாராகவே இருப்பார்கள். ஐந்தாண்டுகளுக்கு முதலீடுகளைப் போட்டு விட்டுப் பின்னர் கிடைக்கும் மொத்த லாபத்தையும் எடுத்துக் கொண்டு இன்னொரு நாட்டுக்கு முதலீடு செய்யப்போய் விடுவார்கள். 

இங்கே அவர்களின் லாபம் ஈட்டும் வியாபாரமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்போது இந்தியாவில் இந்தியர்களின் சில்லறை வியாபாரம் மட்டுமே காணாமல் போயிருக்கும் என நினைக்க வேண்டாம். மரபான விவசாயத்தைச் செய்து கொண்டிருக்கும் கிராமங்களும், கைத் தொழில் பட்டறைகளும், சட்டை பாவாடைகள் தைத்துத் தரும் தையல்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிவெட்டுபவர்கள், வாகனங்களைப் பழுது பார்த்துத் துடைத்துக் கழுவித் தரும் சேவைப் பணியாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் ஓரங்கட்டப்பட்டு விளிம்புக்குத் தள்ளப் படுவார்கள். அவர்களுக்கான வெளியாகப் பெருநகரங்கள் இருக்காது. அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதற்காகச் சேரிகளும் அதன் மனிதர்களும் ஓரங்களுக்குத் தள்ளப்படுவது போல ரோட்டோரத்துப் புரோட்டாக்கடைகளும், மாமி மெஸ்களும், நாயர் தேநீர்க்கடைகளும் கூடத் தேடிக் கண்டடைய வேண்டியனவாக மாறிப் போகும். பழவண்டிகளும் பூக்காரிகளும் பஞ்சு மிட்டாய் தாத்தாக்களும் இல்லாத பெருநகரங்களில் வாழ்வதை வளர்ச்சியல்ல என்று சொல்பவர்கள் பழம் பஞ்சாங்கமாகக் கருதப்படுவதைக் கூடச் சகித்துக் கொள்ளலாம். தேச விரோதிகள் என்று முத்திரை குத்தும் ஆபத்து இருப்பதால் தப்பித்தல் சாத்தியமில்லை. 

இப்படி ஆகிவிடுவதைத் தவர்க்கும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. கட்டுப்பாடுள்ள வியாபார நலன்கள் என்ற அளவில் தான் ஐரோப்பிய நாடுகள் தனியார் மயத்தை அனுமதித்துள்ளன. நான் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பக்கத்தில் 200 மீட்டர் தூரத்தில் ஒற்றைத் தளத்தில் அமைந்த அங்காடி வளாகம் ஒன்றிருக்கிறது. அந்த வளாகத்தில் உள்ள கடைகள் எல்லாம் ஒற்றைப் பொருள் விற்பனைக்கடைகள். நாய் உணவுகள் மட்டும் ஒரு கடையில் விற்கப்படுகிறது என்றால் இன்னொன்றில் மனிதர்களுக்கான ரொட்டிகள். மற்றொரு கடையில் இறைச்சிகள். ஒன்றில் ஆண்களுக்கான உள்ளாடைகள்; இன்னொன்றில் பெண்களுக்கான உள்ளாடைகள். பூட்டும் சாவியும் ஒரு கடையில் கிடைக்கிறது; அதுக்குப் பக்கத்திலேயே பல்புகள் கிடைக்கிறது. ஒரு கடையில் வீட்டுக்கான உள் அலங்காரப் பொருட்கள் விற்பனையாகிறது; அதுக்குப் பக்கத்தில் பூந்தொட்டிகளும் விற்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் முடிதிருத்தம் செய்யும் கடையின் எதிரில் குளியல் பொருட்களும், கழிவறைப் பொருட்களும். ஒரு ஓரத்தில் மதுபானங்கள் அருந்தும் வளாகமும் இன்னொரு ஓரத்தில் கையில் ஏந்திச் சாப்பிடும் கடைகளும் இருக்கின்றன. இத்தகைய அங்காடி வளாகங்கள் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களின் பக்கத்திலும் இருக்கின்றன. இவையெவையும் பன்னாட்டுக் குழுமங்களின் வளாகங்கள் அல்ல. உள்ளூர்க்காரர்களின் கடைகள். அங்கும் வியாபாரம் நடக்கவே செய்கின்றன. 

இந்தியாவில் இருக்கும் அளவுக்கு வேறுபாடுகள் இல்லையென்றாலும் பலதரப்பட்ட பொருளாதாரப் பின்னணி கொண்ட மக்கள் போலந்திலும் வாழ்கிறார்கள். அவர்கள் தங்களின் வருமானத்திற்கேற்ப எல்லாவகை அங்காடிகளிலும் பொருட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்குப் பொருட்களைத் தரும் சில்லறைக் கடைகளும் அரசின் கண்காணிப்பி லிருந்து விலகிப் போய்விடவில்லை. ரசீதில்லாமல் எந்த வியாபாரமும் சாத்தியமில்லை என்ற நிலை அங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. கூடையில் மீன் விற்கிறவர்களைப் போலக் கார்களில் வந்து ஆப்பிள் பழங்களையும் காரட்டையும் எடை போட்டு விற்கும் சிறுவியாபாரிகளும் ரசீது தந்து பணம் வாங்கிக் கொள்கிறார்கள். 

இதையெல்லாம் தாண்டி நமது அரசுகள் நமது மக்களுக்கான – விவசாயிகள், வியாபாரிகள், (உடல் மற்றும் மூளை சார்ந்த), தொழிலாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்தினருக்கான நலன்களைப் பேணும் அரசாங்கமாக இருக்க வேண்டும். அதை மறந்து விட்டுக் கொள்கைகளுக்காகவும் கோட்பாடுகளுக்காகவுமான தேசநலனைக் காவு கொடுப்பனவாக இருக்கக் கூடாது.
============================================================================== 
நன்றி: உயிர்மை,நவம்பர் 2012 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்