நிகரி விருது - அறிவிப்பும் பரிசளிப்பும்


நிகரி சமத்துவ ஆசிரியர் விருது வழங்கும் விழா 24.09.2013 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை ஆ.ரவிகார்த்திகேயன் வரவேற்றார்.சிறப்பான ஆய்வு இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் மணற்கேணி பல்வேறு ஆய்வரங்கங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறது. ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விதமாகத் தற்போது எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டார்.
அடுத்து நோக்கவுரை ஆற்றிய ரவிக்குமார் இந்த விருது ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பதை விளக்கினார். வகுப்பறைகளில் நிலவும் பல்வேறுவிதமான பாகுபாடுகளிலும் மிகவும் கொடுமையானதாக சாதிய பாகுபாடு உள்ளதென்று கூறிய அவர், அத்தகைய பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதற்காக பாடுபடுகிறவர்களைக் கௌரவிப்பதற்கும் தான் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ விருதுகள் அளிக்கப் படுகின்றன. ஒரு விருதை யார் கொடுக்கிறார்கள் என்பதைப்போலவே அது யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதும் முக்கியம். கல்விக் கூடங்களில் சமத்துவத்தை ஏற்படுத்த இதுவொரு சிறிய துவக்கம்தான், பலரும் இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் விருதுபெற்ற ஆசிரியர் த.பாலு ஏற்புரையாற்றினார். அவர் பேசும்போது “ அரசுப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியே வந்து நல்ல காரியங்களைச் செய்வதைவிடவும் பள்ளியில் ஒழுங்காகப் பாடம் சொல்லிக்கொடுத்தாலே போதும். காசுகொடுத்துப் படிக்க முடியாத ஏழைப் பிள்ளைகள்தான் அரசுப் பள்ளிகளுக்கு வருகிறார்கள். அவர்களைப் நன்றாகப் படிக்க வைத்தால் அதுவே மிகச்சிறந்த சேவை. ரவிக்குமார் எந்த தளத்தில் செயல்பட்டாலும் அங்கே அடித்தளத்து மக்களுக்காக , யாரும் கண்டுகொள்ளாத மக்கள் தொகுதிக்காக, ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கிறார் என்பது முக்கியம். எனவேதான் அவர் கல்வித் தளத்தைத் தேர்ந்தெடுத்து அதில் பாகுபாடுகளுக்கு எதிராகச் செயல்படும் பள்ளி ஆசிரியருக்கும், கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் நிகரி என்கிற விருதைத் தனது சொந்த பங்களிப்பில் வழங்குகிறார்.


விருதுகள் என்றாலே ஒத்த கருத்துகளுக்கு இடமில்லாமல் பெரும்பாலும் சர்ச்சைகள் எழுவது உண்டு. பாரத் ரத்னா விருதை அளித்ததில்கூட எம்.ஜி.ஆருக்குப் பிறகுதான் அண்ணல் அம்பேதகருக்கு வழங்கினார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அத்தகைய விருதுகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியல் விருப்பு வெறுப்புகள் நமக்குத் தெரிகிறது.ஆனால் ரவிக்குமார் ஒரு அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தும் கட்சி அரசியல் அடையாளம் ஏதுமில்லாமல் இந்த நிகழ்வை நடத்துகிறார். என்னிடம் நற்கூறுகள் ஏதேனும் இருக்கிறதென்றால் அவை பலராலும் ஏற்படுத்தப்பட்டவை. குறிப்பாக பழமலையும் கல்யாணியும், கோச்சடை, ரகமத்துல்லா கான், லோகியா போன்ற பேராசிரியர்களும் ஏற்படுத்திய தாகம்தான் அதற்குக் காரணம்.குறிப்பிட்ட சிந்தனைப் போக்கும், இயக்கச் சூழலும் களச் செயல்பாடுகளும் சேர்ந்து உருவாக்கிய கூட்டு மனம்தான் நான். நிறைய செவிலித் தாய்களால் உருவாக்கப்பட்ட எனக்கு அளிக்கப்படும் விருது அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்படும் விருதுதுதான். இந்த விருதை அவர்கள் அனைவரின் சார்பில் நோபல் பரிசாக நினைத்து ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார். அடுத்து பேராசிரியர் அ.ராமசாமி ஏற்புரை நிகழ்த்தினார்.
 
வாழ்த்துரை ஆற்றிய பேராசிரியர் கல்யாணி “ வகுப்பறையில் பல்வேறு பாகுபாடுகள் இருக்கின்றன. இந்த விருது வழங்கப்படுவது குறித்து கலந்துபேசுவதற்காக என்னை சந்திக்க வந்த ரவிக்குமார் ஆங்கிலத்தில் இருந்த அறிக்கை ஒன்றை என்னிடம் தந்துவிட்டுப் போனார். முதலில் அதை நான் படிக்கவில்லை. பிறகு ஒருநாள் எடுத்துப் பார்த்தேன். தேசிய ஆலோசனைக் கவுன்சில் வழங்கிய அறிக்கை அது. அதைப் படித்தபோதுதான் எத்தனைவிதமான பாகுபாடுகள் இருக்கின்றன, அவற்றைக் களைவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது. அந்த அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என முடிவு செய்திருக்கிறேன். இந்த விருதை அளிக்க முடிவு செய்ததற்காக மணற்கேணி பத்திரிகையின் ஆசிரியர் ரவிக்குமாரைப் பாராட்டவேண்டும். எனக்கு தலித் பிரச்சனை குறித்து இந்த அளவுக்கு புரிதல் ஏற்பட அவரும் ஒரு காரணம். எந்தவொரு விஷயத்தையும் மனதில் தைப்பதுபோல அவர் சொல்லுவார். இந்த நிகரி விருதுக்கான நினைவுப் பரிசை வடிவமைத்தவர் அவரது மகன் அதீதன். மிகச் சிறப்பாக அதைச் செய்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.”
”இந்த சமத்துவ ஆசிரியர் விருதைப் பெற்றிருக்கும் பாலு பள்ளி மாணவராக இருந்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கமானவர். அப்போதே நல்ல பேச்சாளர். சமச்சீர் கல்வியை அவர் சார்ந்திருந்த ஆசிரியர் சங்கம் ஏற்காதபோது தனது சொந்த முயற்சியில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக துண்டறிக்கை வெளியிட்டு வினியோகித்தவர். பேராசிரியர் ராமசாமி தலித் பிரச்சனையில் நல்ல தெளிவான பார்வை கொண்டவர். அரசு அதிகாரிகளுக்கு எஸ்.சி/ எஸ்.டி பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் 2001 ஆம் ஆண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது. நான், ரவிக்குமார் போன்றவர்களெல்லாம் பயிற்சி கொடுத்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி கொடுத்தபோது ராமசாமி அவர்களும் வந்து அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தார்.”
 
”இங்கே சிறப்புரையாற்ற வந்திருக்கும் வசந்திதேவி அவர்கள்தான் நான் மனித உரிமைப் பணிகளில் ஈடுபடக் காரணம் என்று சொல்லலாம். கடலூர் சிறையில் இருந்த தமிழிந்தியன் என்ற கைதி எனக்கொரு கடிதம் எழுதினார்.அதை அறிந்த வசந்திதேவி அவர்கள்தான் என்னை உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று அங்கு இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளராக இருந்த திரு ராஜா அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகுதான் மனித உரிமை தொடர்பான பிரச்சனைகளை நான் கையிலெடுத்தேன்.”
 
”தலித்துகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.அவற்றை எதிர்த்து அவர்கள் சாதி அடிப்படையில் திரள்வதற்கு நியாயமிருக்கிறது. ஆனால் பி.சி யோ அல்லது எம்.பி.சியோ அப்படி சாதி அடிப்படையில் திரளுவதற்கு எந்த நியாயமும் இப்போது இல்லை. முன்பு இருந்திருக்கலாம், இப்போது இல்லை என்பதுதான் எனது வலுவான கருத்து. சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் பற்றி ஆசிரியர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்த விழாவுக்குப் பிறகாவது அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவேண்டும்” என்று கல்யாணி குறிப்பிட்டார்.

விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றிய முனைவர் வசந்திதேவி சுமார் ஒரு மணி நேரம் பேசினார். கல்வித்துறையில் நிலவும் பல்வேறுவிதமான சீர்கேடுகளையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ”வர்க்க அடிப்படையிலான போராட்டம் வர்ண அடிப்படையிலான போராட்டம் என இனிமேல் பிரித்துப் பார்க்கக்கூடாது.இரண்டும் ஒன்றுதான் என அணுகவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மனது வைத்திருந்தால் இந்நேரம் அந்தப் பள்ளிகள்தான் தமிழ்நாட்டிலேயே தலைசிறந்த பள்ளிகளாக இருந்திருக்கவேண்டும்.ஆதிக்க சாதியினர் தலித் பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுத் தருவதில் அக்கறைகாட்டவில்லை என நாம் குற்றம் சாட்டுகிறோம். அது உண்மைதான். ஆனால் தலித் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானவர்கள் தலித் ஆசிரியர்களில்லையா? அவர்கள் தமது கடமையை சரியாகச் செய்யவேண்டும் என்று நாம் கேட்கவேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.
”சில தலித் சிந்தனையாளர்கள் தலித் குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பது நல்லது என்கிறார்கள்.அது திசைதிருப்பும் கருத்து. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால் தாய்மொழிதான் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் அப்படித்தான் இருக்கிறது.தலித் பிள்ளைகள் அத்தனைபேரும் ஆங்கிலத்தில் படித்து கர்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்குப் போக முடியுமா? அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளைத் திறப்பது ஆபத்தாகத்தான் முடியும். டென்னிஸ் த மெனேஸ் என்ற கார்ட்டூன் கதையில் டென்னிஸ் சொல்வான் ’நீ வெற்றிபெற வேண்டுமென்றால் விளையாட்டின் விதியை நீ தீர்மானிக்கவேண்டும்’. அதுபோலத்தான் தங்களுக்கு சாதகமான விதத்தில் கல்வியின் விதிகளை ஆளும் சாதியினரும் வர்க்கத்தினரும் வகுத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற கல்வியைப் படியுங்கள் என்கிறார்கள்.”
 
“நாம் சமூக நீதி என்றாலே இட ஒதுக்கீடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அரசு வேலைவாய்ப்புகளில்தான் இட ஒதுக்கீடு.தனியார் துறையில் அது இல்லை. இப்போது அரசுத் துறைகளில் எங்கே வேலைவாய்ப்பு இருக்கிறது? தனியார் துறையில்தான் இருக்கிறது. இட ஒதுக்கீடு இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பு இல்லை, வேலை வாய்ப்பு இருக்குமிடத்தில் இட ஒதுக்கீடு இல்லை.தனியார் துறைதான் இன்று அனைத்து சலுகைகளும் கொடுத்து ஊட்டி வளர்க்கப்படுகிறது.அங்கே உயர் சாதிக்கும் உயர் வர்க்கத்துக்கும்தான் இடம் கொடுப்பார்களே தவிர தலித் பிள்ளைகளுக்கு எங்கே வேலை கொடுப்பார்கள்?”
 
“ இன்று நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் யாருடைய நன்மைக்கு உருவாக்கப்படுகின்றன? இந்த நாட்டிலிருக்கும் கோடீஸ்வரர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த நாட்டின் இயற்கை வளங்களெல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் மாற்றப்படவேண்டுமென்றால் கல்வியால்தான் முடியும். அந்தக் கல்வியை நாம் பெறவேண்டும். 1964 இல் கோத்தாரி கமிஷன் உருவாக்கப்பட்டது. இந்த நாட்டில் எந்தத் துறையில் புரட்சி ஏற்படவேண்டுமென்றாலும் அதற்கு கல்வியிலே முதலில் புரட்சி ஏற்படவேண்டும் என்று அந்தக் கமிஷன் சொன்னது. அந்தக் கல்விப் புரட்சி உண்டாவதற்கு பொதுப் பள்ளி முறை, அருகமை பள்ளி முறை வந்தாகவேண்டும். அதுமட்டுமல்ல பள்ளிகள் யாவும் அரசாங்கத்தால்தான் நடத்தப்படவேண்டும். இதைக் கொண்டுவருவதற்கு நாம் போராடவேண்டும். அப்போதுதான் சாதியற்ற சமுதாயம் உருவாகும்” என்று வசந்திதேவி பேசினார்.
 
விழாவில் பேராசிரியர்கள் பழமலை,ரஹமத்துல்லா கான், முன்னாள் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், எழுத்தாளர் இமையம், உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உமாபதி, ரவிகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.


நிகரி சமத்துவ ஆசிரியர் விருது

இந்தியாவில் தீண்டாமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதென அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாடநூல்களிலும் அதை அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போதும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கிடையே சாதி அடிப்படையில் பேதம் பாராட்டுவது எவ்வளவு பெரிய கொடுமை! சமூக நீதிக்குப் பேர்போன தமிழ்நாட்டில் நினைத்தே பார்க்கமுடியாத வடிவங்களில் கல்வி நிறுவனங்களில் தீண்டாமை நிலவிக் கொண்டிருக்கிறது.

அம்பேத்கர், தான் படிக்கும்போது மற்ற பிள்ளைகளோடு சமமாக உட்கார அனுமதிக்கப்படவில்லையென்பதையும் தான் உட்காருவதற்காக வீட்டிலிருந்து சாக்குத் துண்டு ஒன்றை எடுத்துவரும்படித் தமது ஆசிரியர் சொன்னதையும் எழுதியிருக்கிறார். மறைந்த கங்கிரஸ் தலைவர் எல்.இளையபெருமாள், தான் படிக்கும்போது பள்ளியில் ‘ பறையன் பானை’ என எழுதப்பட்ட பானை ஒன்று வைக்கப்பட்டிருந்தது எனவும் அதில்தான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று விதி இருந்தது எனவும் குறிப் பிட்டிருக்கிறார். அம்பேத்கர் மற்றும் இளையபெருமாள் காலத்திலிருந்ததைப் போலவே சமத்துவமற்ற நிலை இன்றும் தொடர்கிறது.


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் சத்துணவு சமைத்தால் அதை தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகள் சாப்பிடுவதில்லை என்ற நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதன்காரணமாக சத்துணவுப் பணியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதையும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இத்தகைய பாகுபாடுகள் தமிழ்நாட்டில் மட்டும் நிலவவில்லை, இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது. இது களையப்படவேண்டும் என்பதற்காக திருமதி சோனியா காந்தி அவர்களின் தலைமையில் செயல்படும் தேசிய ஆலோசனைக் குழு

(National Advisory Council - NAC) ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பியது.ஆனால் அந்தப் பரிந்துரைகள் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.
 
பள்ளிகளில் மட்டுமின்றி உயர்கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய பாகுபாடுகள் தொடர்கின்றன. குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் சொல்ல வொண்ணா இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அவ்வாறு இடையூறுகளுக்கு உள்ளான தலித் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளை நாம் அறிவோம்.


இத்தகைய பாகுபாடுகளைப் போக்குவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும் ஆங்காங்கே எந்தவித எதிர்பார்ப்புமின்றி தலித் அல்லாத சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் இந்த நிலையை எதிர்த்துத் தம்மால் இயன்ற வழிகளில் போராடிவருகின்றனர். தலித் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்து வருகின்றனர். சந்தடியில்லாமல் அவர்கள் ஆற்றிவரும் பணி மகத்தானது.
கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும்தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என அழைக்கப்படும்.
 
இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் இந்த ஆண்டுமுதல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படும்.
 
இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அதற்கான விழா விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் .
இவண்
ரவிக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்