பாண்டிச்சேரித் தொடர்பு

எனது நீண்ட நாள் நண்பர் ரவிக்குமார் நடத்திக் கொண்டிருக்கும் மணற்கேணி ஆய்விதழின் சார்பில் உருவாக்கி அளிக்கும் நிகரி = சமம் விருதை முதல் ஆண்டிலேயே நான் பெறுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் "நமது நண்பர்; அதனால் விருது அளிக்கிறார்" எனப் பலரும் எண்ணக்கூடும் என்ற நினைப்பும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்போடு இந்த விருதுக்கு நான் எப்படிப் பொருத்தமானவன் என நினைத்துப் பார்க்கிறேன்.
எனக்கும் ரவிக்குமாருக்கும் இடையேயுள்ள நட்பின் காலம் கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் கால் நூற்றாண்டுக் கணக்கு கூட நேர்ச் சந்திப்பின் அடிப்படையில் சொல்லப்படும் கணக்குதான். பார்த்துக் கொள்ளாமலேயே நட்பாய் இருந்த காலத்தையும் கணக்கிட்டால் கால் நூற்றாண்டைத் தாண்டி விட்டது என்பதை உணர்கிறேன்,புதுவைப் பல்கலைக் கழக நாடகத்துறையின் ஆசிரியராகத் தேர்வு பெற்றுப் பணியில் சேர்ந்த மூன்றாவது நாள் அவரை நேரில் சந்தித்தேன். எங்கள் துறைக்கு மிக அருகில் இருந்த கட்டடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த சிண்டிகேட் வங்கியின் ஊழியராக அவர் இருந்தார். அந்தச் சந்திப்பு புதுச்சேரியில் ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவைக்காக நடந்த சந்திப்பு அல்ல. அப்படியொரு தேவைக்காக என்றால் எனது முதல் விருப்பம் சிண்டிகேட் வங்கியாக இருந்திருக்காது. ரவிக்குமார் அங்கே வேலை செய்கிறார் என எனது நண்பரும் நான் தேர்வு செய்யப்பெற்ற அதே நாளில் நாடகத்துறையின் இணைப் பேராசிரியராய்த் தேர்வு செய்யப் பெற்ற கே.ஏ. குணசேகரன் சொன்னவுடன் போய்ப் பார்க்க வேண்டும் என நினைத்துச் சென்றேன். வங்கியின் வாடிக்கையாளனாக மாறினேன் என்பதைவிடத் தினசரி அந்த வங்கிக்குச் சென்று வரும் நபராக மாறினேன் என்பதுதான் சரியாக இருக்கும்.

மார்க்சீய – லெனினிய அமைப்புகள் இந்தியாவைப் பற்றி வரையறுத்துச் சொன்ன கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டவனாக மதுரையில் நண்பர்களோடு விவாதங்களில் ஈடுபட்ட காலங்களில் உச்சரிக்கப் பெற்ற பெயர்களில் ஒன்றாக ரவிக்குமார் என்ற பெயரும் இருந்தது. "கவிதையால் புரட்சியைக் கொண்டு வர முடியும்" என்ற நம்பிக்கையோடு அலைந்த அந்தக் காலம் தொட்டு ஏற்பட்ட அந்தப் பழக்கம் – நட்பு -ஒரே நேர்கோட்டில் செல்லாமல் வளைந்தும் நெளிந்தும் இடைவெளி விட்டும் தாவியும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவரது கருத்துகளோடும் நடவடிக்கை களோடும் எனக்கு வேறுபாடு தோன்றுகிறது என்றாலும் நான் விட்டு விலகித் தூரப் போய்விடுபவன் அல்ல. அப்படித் தூரப் போய்விடும் மனம் இந்திய சமூகத்தின் பொது மனப் போக்கு. வேண்டாதவனை விலக்கி வைக்கும் தீண்டாமைக்குள் சிக்கிய மனம் தான் விலகலைக் கடைப்பிடிக்கும். எல்லாவற்றையும் அதனதன் இருப்பில் ஏற்றுக் கொள்ளவும் சகித்துக் கொள்ளவும், தொடர்ந்து உரையாடல் நடத்தி மாறவும், மாற்றவும் செய்யும் மனம் பொதுமனத்தோடு விலகிய நிலைப்பாடு கொண்டது. நமக்குத் தேவை விலகலையும் ஒதுக்குதலையும் விட்டொழிக்கும் மனங்கள் தேவை. அதற்குப் பதிலாக உள்வாங்கும் மனத்தை உருவாக்கிக் கொள்ள நாம் பழக வேண்டும். உள்வாங்கும் மனங்களோடு சேர்ந்து உள்வாங்கும் அரசியலை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். ஏனென்றால் எல்லாவற்றையும் தேசம், மதம், சாதி, வெளி, மொழி என்னும் பேரடையாளங்களை முன் வைத்தோ, கருத்தியல் சார்ந்த மதிப்பீடுகளையும் எதிர்வுகளையும் முன்னிறுத்திச் சொல்லாடல்களை உருவாக்கும் சிற்றடையாளங்களாலோ விலக்கித் தூர எறியும் கருத்தோட்டங்களால் நாம் கட்டமைக்கப் பட்டிருக்கிறோம்; அத்தகைய அரசியலே நிகழ்காலத்தில் பயமுறுத்தும் அரசியலாக ஆகிக் கொண்டிருக்கிறது. விலக்கி வைக்கும் அரசியலுக்கு எதிராக உள்வாங்கும் அரசியலை முன் வைத்து வேலை செய்யும் தேவையை உணர வைத்தவர் அண்ணல் அம்பேத்கர். நவீன இந்தியச் சிந்தனையாளர்களில் முதன்மையானவரான அம்பேத்கரிடமிருந்து ஒட்டு மொத்த இந்திய சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியன ஏராளம் இருக்கின்றன.
புதுச்சேரியில் இருந்தவரை ரவிக்குமாருக்கும் எனக்கும் நேர்ப் பேச்சுகளாக இருந்த விவாதங்களும் உரையாடல்களும் திருநெல்வேலிக்குப் போனபின் தொலைபேசியைத் துணையாக்கிக் கொண்டன. இந்தக் கால் நூற்றாண்டுக் காலத்தில் நானும் ரவிக்குமாரும் பலவற்றை நேரிலும் தொலைபேசியிலும் விவாதித்திருக்கிறோம். விளக்கம் பெற்றிருக்கிறோம். திட்டமிட்டிருக்கிறோம். செயல்பட்டிருக்கிறோம். பொதுத் தளங்கள் என்றில்லாமல் குடும்பம் சார்ந்த முடிவுகளுக்காகக் கூட தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து விலகியிருக்கிறேன் எனச் சொல்லிக் கொள்ளாமல் விலகி இருந்த காலத்திலும் கூட அவரது திட்டமிடலையும் விளக்கிக் கூறலையும் செயல்படுவதையும் செயல்படுத்து வதையும் கண்டு வியந்தவன் நான். கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இருக்க வேண்டிய உழைப்பும் வாசிப்பும் எழுத்தும் அவரிடம் இருப்பதை எப்போதும் பொறாமையோடு பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கிறேன் . நிற்க.
வழக்கமாக வரும் தொலைபேசி அழைப்புப் போலத்தான் இரண்டு வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் அழைத்தார். நிகரி விருது உருவாக்கம் பற்றிச் சொன்னார் ரவிக்குமார். பூனா ஒப்பந்த நாளான செப்டம்பர் 24 இல் விருது வழங்க வேண்டும் என்றார். கூட்டம் திண்டிவனம் அல்லது விழுப்புரம் என்றார். ”சரி ரவி! நான் அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்” என்றேன் கேட்டேன். ” உங்களுக்குத் தான் அந்த விருது; உங்களோடு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் விருது வழங்கப் போகிறோம். கல்யாணியிடம் பேசிவிட்டேன். உங்களுக்கு அந்த விருதைப் பெற்றுக் கொள்வதில் ஏதாவது தயக்கம் இருக்கிறதா? இருந்தால் சொல்லி விடுங்கள்” என்று சொல்லி விட்டு நிறுத்தினார்.
தமிழ்நாட்டில் விருதுகள் வழங்குவதில் உள் அரசியல் இருப்பது போல அவற்றை ஏற்பதிலும் நிராகரிப்பதிலும் கூட எல்லாவகை அரசியலும் இருக்கின்றன என்பது எனக்கும் தெரியும்; நண்பர் ரவிக்குமாருக்கும் தெரியும் என்பதால் அந்தக் கேள்வியைக் கேட்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அதனால் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன் எனச் சொல்லி விட்டு அதன் பிறகு என்னைவிட இன்னொருவரைத் தேடி விருது வழங்கலாமே என்றேன். “ இல்லை இந்த வகை விருதுக்கு இன்னொருவரைத் தேட வேண்டியதில்லை; நீங்களே பொருத்தமானவர்” என்று ரவிக்குமார் சொன்ன போது ‘ நான் என்ன வகையில் பொருத்தமானவன் ‘ என்று யோசித்துப் பார்த்தேன்.

1989 இல் புதுச்சேரி நாடகப்பள்ளிக்கு வருவதற்கு முன்பு என்னை நான் இடதுசாரிச் சிந்தனை கொண்டவனாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே முழுமையாக பிறப்பு அடிப்படையிலான சாதி வரையறையையும், அதே அடிப்படையைக் கொண்டு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்னும் சலுகையின் மீதும் ஒருவித ஒவ்வாமை எனக்குள் இருந்தது. இட ஒதுக்கீட்டின்படி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு வருபவர்கள் திறமையானவர்களின் இடத்தைப் பறித்துக் கொள்கிறார்கள்; அவர்களின் தகுதிக்கும் அதிகமான சலுகைகளைப் பெறுகிறார்கள் எனப் பொதுப்புத்தியில் இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டம் எனக்குள்ளும் இருந்தது. ஆனால் அந்த எண்ண ஓட்டம் பாண்டிச்சேரியில் கிடைத்த நட்புச் சூழலாலும் விவாதங்களாலும் வாசிப்பாலும் தான் மாற்றம் பெற்றது. இட ஒதுக்கீடு மட்டுமே சலுகை அல்ல என்பதும், இந்திய அரசாங்கம் பலவிதமான சலுகைகளைப் பலவிதமான பொருளாதார நிலையிலும் சமூகத் தட்டிலும் இருப்பவர்களுக்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பது புரிந்தது. சாதிய அடுக்குகளாகப் புரிந்து கொள்ளப்படும் இந்திய சமூக அமைப்பில் உயர்ந்த இடத்தில் இருப்பதாக நம்பும் பிராமணர்களுக்குக் கடந்த கால அரசுகளும், நிகழ்கால அரசுகளும் வழங்கிய- வழங்கும்- சலுகைகள், மானியங்கள் எப்போதும் தகுதியை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பது இப்போது எனக்குப் புரிகிறது. குறிப்பிட்ட வகையான பதவிகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் சலுகைகளும் மானியங்களும் விருதுகளும் கேள்விக்கப்பாற்பட்டவையாக இருப்பதை எனக்கு முழுமையாக உணர்த்தியது 1991 தொடங்கி கொண்டாடப்பெற்ற அம்பேத்கர் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் தான். 

பாண்டிச்சேரிக்குப் போவதற்கு முன்பு கட்டாயம் படிக்க வேண்டியவர்கள் பட்டியலில் பெரியாரும் அம்பேத்கரும் இருந்ததில்லை. பெரியாருடைய பேச்சுக்களையும் எழுத்துகளையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரது பேச்சுத் தொனிக்காகவும், எளிய சொற்களைப் பயன்படுத்திய மொழி ஆளுமைக்காகவும் வாசித்திருந்தேன். ஒரு இலக்கிய மாணவன் தெரிந்து கொள்ள வேண்டிய அளவு என்று அதைச் சொல்லலாம். அவரைச் சமூகப் போராளியாகவோ, தமிழ்ச் சமூகத்தின் போக்கில் பெரிதான அதிர்வுகளை உருவாக்கிய சிந்தனையாளராகவோ ஏற்றுக் கொண்டு வாசித்தவனில்லை. அம்பேத்கரைப் பற்றிய அறிவும் வாசிப்பும் பெரியாரைப் பற்றிய அறிதல் அளவுக்குக் கூட இருந்ததில்லை. இவ்விருவர் பக்கமும் போக வேண்டிய அவசியம் இல்லை என்று என்னைத் தடுத்து வைத்திருந்தது மாணவப் பருவம் தொடங்கி எனக்கிருந்த இடதுசாரிகளின் தொடர்பும், பல்கலைக்கழகத் தமிழியல் துறைகளுக்குள் இடதுசாரித் திறனாய்வுத் செலுத்திய ஆதிக்கத்தின் விளைவும் என்று சொல்லலாம். எங்கெல்ஸையும் மார்க்ஸையும் அவரை உள்வாங்கிச் சமூகவியல் மற்றும் இலக்கியவியல் கோட்பாடுகளைத் தந்தவர்களையும் வாசித்த எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் அம்பேத்கரும் பெரியாரும் அந்நியர்கள் என்பது போன்ற எண்ணம் எப்படி? யாரால் உருவாக்கப் பெற்றது என்பது தனிக்கதை.

1989 இல் ஏற்பட்ட பாண்டிச்சேரி தொடர்பு தான் என்னை முற்றிலுமாக மாற்றிப் போட்டது. பாண்டிச்சேரியிலிருந்து 1997 இல் திருநெல்வேலிக்கு - நாடகத் துறையை விட்டு விட்டு இலக்கியத்துறை ஆசிரியனாகப் போன பின்பு என்னைப் பார்க்கும் பலரும்,“ ஐரோப்பிய இடதுசாரிகளுக்கு பிரெஞ்சுத் தொடர்பு ஏற்படுத்திய தாக்கம் போல” தமிழ் நாட்டிற்குள் பாண்டிச்சேரித் தொடர்புகள் காத்திரமான மாற்றங்களை உண்டாக்கி வருகிறது என்று சொல்வார்கள். அந்தக் கூற்று மற்றவர்களைப் பொருத்துச் சரியானதா என்று நான் சொல்ல முடியாது. என்னைப் பொறுத்த வரையில் முற்றிலும் பொருத்தமானது. வர்க்க அரசியல், வர்க்க இலக்கியம், வர்க்க சமுதாயம் என்ற சொல்லாடல்களுக்குள் இருந்த என்னை தேசிய இன அரசியல், உடல் அரசியல், விளிம்புநிலை அரசியல், ஒடுக்கப்படுதல் மற்றும் ஒதுக்கப்படுதலின் அரசியல் எனப் பல தளங்களுக்குள் நகர்த்திக் கொண்டு வந்தது. இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்ள இந்திய சாதி அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்; சாதி அமைப்பைப் புரிந்து கொள்ள அம்பேத்கரின் ஆய்வுகளை வாசித்தாக வேண்டும் என்ற நெருக்கடியை உணர்ந்தேன்; வாசித்தேன்; புரிந்து கொண்டேன். அதன் வெளிச்சத்தில் எனது எழுத்துகளின் தொனியை மாற்றிக் கொண்டேன். அதுவரை அம்பேத்கரைக் கேள்வி ஞானத்தின் வழியாகவே புரிந்து வைத்திருந்த நான் கார்ல் மார்க்ஸுக்கு இணையாக வாசித்தவராகவும் எழுதியவராகவும் அம்பேத்கரைச் சொல்லத் தயங்குவதில்லை இப்போது.

மாற்றத்தை முன் வைத்துச் செயல்படும் ஓர் அறிவுஜீவியின் நோக்கமும் வாசிப்பும் எழுத்தும் இவ்வளவு பரந்த பரப்பாக இருக்க வேண்டுமா? என்ற மலைப்பை அவர்கள் இருவரும் எனக்குள் உண்டாக்கியிருக்கிறார்கள். முதலாளித்துவ அரசு மற்றும் சோசலிச அரசு என்ற எதிர்நிலைக் கட்டுமானங்களை விமரிசனம் செய்வதில் தொடங்கி இந்திய அரசுருவாக்கத்தில் தேசிய இனப்பிரச்சினையின் இடம், இந்திய சமூக அமைப்பில் சாதியக் கருத்துரு, உலக அளவில் எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பெண்கள் போராட்டம் மற்றும் விடுதலை, இவ்வகை அரசியல் செயல்பாடுகளோடு இணைந்தும் விலகியும் நிற்கும் கலை இலக்கியப் போக்குகள் பற்றியெல்லாம் கவனப்படுத்திய நிறப்பிரிகையின் செயல்பாடுகள் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த ரவிக்குமார் அம்பேத்கர் நூற்றாண்டின் எழுச்சியிலும் மையமாக இருந்தார். அவரது வீட்டில் தான் பல விவாதங்களின் ஆரம்பம் தொடங்கியது. அங்கு தொடங்கும் விவாதம் புதுச்சேரி வணிக அவை அல்லது பிரெஞ்சு இந்திய நிறுவன வளாகம் அல்லது பாண்டிச்சேரி பல்கலைக்கழகப் பரப்பு என விரிந்தது.. 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை ஆசிரியனாக இருந்த எனக்கு அம்பேத்கரின் நூற்றாண்டு சில வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. மதுரை நிஜநாடக இயக்கம் என்னிடத்தில் மூன்றாம் அரங்கு என அழைக்கப்பட்ட ஏழ்மை அரங்கின் தத்துவம் மற்றும் செயல்தளத்தை உருவாக்கிப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்திருந்தது. அதன் 20 க்கு மேற்பட்ட தெரு நாடகங்களில் நடிகனாகப் பங்கேற்ற அனுபவத்தோடு மதுரை நகரக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், திருநெல்வேலி, விருதுநகர், அருப்புக் கோட்டை, திண்டுக்கல்,எனச் சிறுநகரங்களின் கல்வி வளாகங்களிலும் மேடையேற்றிய அனுபவம் எனக்குள் இருந்தது. மதுரை மாவட்டத்தின் பல கிராமங்களில் மக்களோடு இணைந்த இயக்கங்களுக்காகவும் நாடகங்கள் செய்திருந்தோம். அந்நாடகங்களில் பலவும் நடுத்தர வர்க்கம் சார்ந்த அமைப்பு எதிர்ப்பு, அமைப்புகளின் மீதான விமரிசனம் என்ற தளத்தில் அமைந்தவை. ஆனால் ஒரு நாடகம் மட்டும் முற்றிலும் விதிவிலக்கானது. ”நியாயங்கள்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட அந்த நாடகம் தமிழ்நாட்டில் பல்வேறு நாடகக் குழுக்களால் சில ஆயிரம் முறை நிகழ்த்தப் பெற்ற நாடகம். அந்த நாடகமும் கூட நீதித்துறையின் மீதான விமரிசனத்தை வைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டது என்றாலும் காட்சிப் படுத்தும் நிகழ்வுகளாக இருப்பன வெண்மணிச் சம்பவங்கள்.

1968 இல் கீழவெண்மணியில் 42 பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்; ஆனால் கொளுத்தியவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை தருவதற்குப் பதிலாக விடுதலையை வழங்கியது. அதற்கு நீதிமன்றம் சொல்லிய வார்த்தை “ சந்தேகத்தின் பலனை” அளிப்பது என்ற அடிப்படை. இந்திய நீதி மன்றங்களும் சமூகமும் எல்லா நேரமும் சந்தேகத்தின் பலனை உடையவர்களுக்குச் சாதகமாக அளிக்கின்றன என்ற நிலையை மாற்றி “ சந்தேகத்தின் பலனை ஆதிக்க சாதியினருக்கே அளிக்கின்றார்கள்” என்ற நிலைபாட்டில் அந்த நாடகத்தை புதுச்சேரியில் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவின் சார்பில் கம்பன் கலையரங்கத்திற்கு வெளியே தரையில் நிகழ்த்திக் காட்டினோம். பாடலும் வசனமும் நடிகர்களின் வியர்வை வழியும் உடலுமாக விரிந்த அந்த நாடக நிகழ்வு இந்தியாவில் வெண்மணியோடு முடிந்து போகவில்லை. பல்வேறு மாநிலங்களில் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது என்று காட்ட அந்த நேரத்தில் ஆந்திரத்தின் சுண்டூரில் நடந்த வன்கொலைகளை நினைவூட்டி வளர்த்தெடுத்தோம்.நடக்கும் மோதல்கள் எல்லாவற்றிலும் இருப்பது ஆதிக்கச் சாதியினரின் திமிரும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான அணிகள் இல்லாமையும் தான் எனக் காட்டினோம். அந்த நிகழ்வுக்கு தொல். திருமாவளவன் ஒரு பார்வையாளராக வந்திருந்தார். 
1992 இல் தொடங்கிய நியாயங்கள் என்னும் நாடக மேடையேற்றம் தலித்திய அரங்கின் எல்லைகள் பலவற்றை உருவாக்கிக் காட்டி விட்டு 1997 இல் நான் திருநெல்வேலிக்குப் போனதோடு முடிந்து போனது. இந்து மதத்தில் “தண்ணீர்” எவ்வாறு சாதியிருப்பின் காரணியாக இருக்கிறது என்பதை ஒரு நாடகத்தில் சொன்னது போல பிரபஞ்சனின் அகலிகை என்ற பெண்ணிய நாடகத்தில் “ தாடகை” என்ற பாத்திரத்தை உருவாக்கியதின் மூலம் கறுப்பு வண்ணம் கொண்ட விளிம்பு மனிதர்களுக்கு எதிராக இந்து மதப் புனிதர்கள் நடத்திய யுத்தத்தையும் சொல்லாடல்களையும் முன் வைத்தோம். சமூக உணர்வு கொண்ட படைப்பாளிகளின் நியாயத்தை - குற்ற உணர்வைத் தூண்டும் விதமாக வடிவமைக்கப் பெற்ற வார்த்தை மிருகம் என்ற நாடகத்திற்குள் சிதம்பரம் அண்ணாமலை நகர் பத்மினியின் வாக்குமூலத்தை உள்ளடக்கிய பிரதியாக ரவிக்குமார் எழுதித் தர உடலரசியல், சாதி அரசியல், மொழி அரசியல் எனப் பல தளங்களில் சொல்லாடலை உருவாக்கிய மேடை நிகழ்வைத் தயாரித்தேன். இந்நாடகங்கள் எல்லாம் தலித் இயக்கம் எழுச்சி பெற்ற முதல் ஐந்தாண்டுகளில் பாண்டிச்சேரியில் மட்டுமல்லாமல் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி எனப் பல இடங்களில் நிகழ்த்தப் பெற்றதோடு மதுரையில் நடந்த எல்லா தலித் கலைஇரவுகளிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. தலித்திய அரங்கின் வரையறைகளை - எல்லைகளை விரிவாக்கிக் காட்டிய மேடை நிகழ்வுகள் அவை.

நாடகத்துறை சார்ந்த செயல்பாடுகளில் அலுப்பு என்பதைவிடப் புதுச்சேரி நாடகப் பள்ளியில் பணியாற்றும் சூழலில் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் சோர்வினால், மையப் பல்கலைக்கழக வேலையை விட்டுவிட்டு இலக்கியத் துறைக்குத் திரும்பி விட வேண்டும் என நினைத்தேன். என்னைத் திறமையான நேர்காணலின் வழியாக உள்வாங்கிய துணைவேந்தர் மதிப்பிற்குரிய வே. வசந்திதேவி இந்த நிகரி விருதை வழங்கி அமர்ந்திருக்கிறார்கள். அவருக்குத் தெரியும் எனக்கு அந்தப் பல்கலைகழகத்தின் பணி வாய்ப்பை உருவாக்கியதில் தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் இயக்கங்கள் பற்றி நான் கொடுத்த விளக்கங்கள் முக்கியப் பங்காற்றின என்பது. அரசுத்துறை அதிகாரிகளாக வந்திருந்த வல்லுநர்கள் முதலில் எனக்கு என்னவெல்லாம் தெரியும் எனக் கேள்வி கேட்பதை மாற்றிக் கொண்டு,”எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கும் தலித் இயக்கங்கள்” பற்றி என்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என ஆவலை வெளிப்படுத்தினார்கள். 55 நிமிடங்கள் நடந்த நேர்காணலில் முக்கால் மணி நேரம் தலித்தியம் பற்றி நான் பேச அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம் தலித்தியம் சார்ந்து நான் புதுச்சேரியில் கற்றுக் கொண்டவை தான் திருநெல்வேலியில் என்னை இணைப் பேராசிரியராக மாற்றியது. அதையே எனது முதல் விருதாக - தலித்தியம் சார்ந்த எனது செயல்பாடுகளுக்குக் கிடைத்த முதல் விருதாக நினைக்கிறேன். இப்போது தரப்படும் நிகரி- சமத்துவ ஆசிரியர் விருது ஒரே காரணத்துக்காகத் தரப்படும் இரண்டாவது விருது என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருநெல்வேலிக்குப் போன பிறகும் தலித்திலக்கியம், தலித்திய விமரிசனம் சார்ந்து தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி ஒன்றை நண்பர் ரவிக்குமார் தான் உருவாக்கினார். 2000 இல் சென்னையில் நடந்த தமிழினி 2000 என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழகத்தில் தலித் இலக்கியம் என்ற கட்டுரையை வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்த வாய்ப்பு முதலில் தலித் விமரிசகராக அறியப்பட்ட ராஜ் கௌதமனிடம் வழங்கப்பட்டு அவரால் இயலாமல் என்னிடம் வந்து சேர்ந்தது. அவர் செய்யாததை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு ரவிக்குமார் பரிந்துரைக்க கருத்தரங்க அமைப்புக்குழு ஏற்றுக் கொண்டது. அந்தக் கட்டுரையை எழுதுவதற்காகத் தமிழில் எழுதப்பெற்ற தலித் எழுத்துகள் அனைத்தையும் தொகுத்து வாசித்தேன். அவற்றை விளக்கிக் காட்டவும் விமரிசனம் செய்யவும் தேவையான அடிப்படைகளையும் உருவாக்கிக் கொண்டு 50 பக்கக் கட்டுரை ஒன்றை எழுதித் தந்தேன். அந்தக் கட்டுரை தான் இன்றளவும் தமிழில் தலித் இலக்கியம் பற்றிய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகளுக்கு அடிப்படையான தரவுகளைத் தந்து கொண்டிருக்கும் கட்டுரையாக இருக்கிறது.

தமிழில் எதாவது ஒரு எழுத்தாளரை மையப்படுத்தி வடிவம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து தனக்கான நியாயங்களை முன்னிறுத்திக் கொண்டு மற்றவர்களை விலக்கி வைக்கும் -ஒதுக்கித் தள்ளும் திறனாய்வு முறையே தமிழில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தன. அந்தக் கட்டுரை ஒதுங்குதலையும் ஒதுக்குதலையும் மையப்படுத்தாமல் உள்வாங்கும் திறனாய்வு முறையை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக நவீனத் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் போக்காக தலித் இலக்கியப் போக்கு இருக்கிறது என்பதைப் பல்வேறு கட்டுரைகள் வாயிலாகவும் கருத்தரங்கப் பொழிவுகள் வழியாகவும் உரையாடல்கள் மூலமும் நிறுவும் பணியைச் செய்துள்ளேன். இந்தச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப் பெற்ற அம்பேத்கரியல் மையத்தை மாற்றினேன். பல்கலைக்கழக மானியக் குழுவின் பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட நிதியிலிருந்து உருவாக்கப் பெற்ற மையம் எமது பல்கலைக்கழக வளாகத்தில் மாணாக்கர்களின் யாதொருவரும் பிறப்பு அடிப்படையிலான சாதியக் கருத்துகளாலும் எண்ணங்களாலும் ஒதுக்கப்படக் கூடாது என்ற வலுவான நிலைபாட்டை உருவாக்கித் தந்தது. தமிழ்நாட்டில் செயல்பட்ட அறிவுஜீவிகள், செயலாளிகள் அனைவரும் அந்த வளாகத்தில் வந்து ஆற்றிய உரைகளின், இலக்கியப் பதிவுகளின் தாக்கம் அது. அதன் மையமாக இருந்து -அம்பேத்கரியல் மையத்தின் இயக்குநராக இருந்து செயல்பட்ட அந்தக் காலம் எனது வாழ்க்கையின் நினைக்கத் தக்க காலம்.

ஒரு மனிதனின் நினைக்கத் தக்க காலத்தைத் அவனே நினைத்துக் கொள்வது போதுமானது தான். உவகை அளிப்பது தான். என்றாலும், மற்றவர்களும் நினைத்துப் பாராட்டுகிறார்கள்; அங்கீகரிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பது உவகையினும் உவகை. அந்த உவகையிலும் உவகையான தருணத்தை மணற்கேணி ஆய்விதழ் வழங்கியிருக்கிறது. உவகையிலும் உவகையோடு இந்த விருதை - நிகர்நிலைச் சமூகத்தை உருவாக்கும் செயல்களைச் செய்யுங்கள்; தொடருங்கள் என ஆணையிட்டுச் சொல்லும் - நிகரி விருதைப் பெற்றுக் கொள்கிறேன். அதன் ஆணையை நெஞ்சினுள் நிறுத்திச் செயல்பட வேண்டும் என உறுதி கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்