மொழி இலக்கியப் பாடத் திட்டங்கள் உருவாக்கலுக்கான பயிலரங்கு

எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இலக்கியக் கல்விக்கான பாடத்திட்ட உருவாக்கம் என்னும் பொருளில் இருநாள் பயிலரங்கு ஒன்றை நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். 
பாடத்திட்டக் குழுக்கள் சார்ந்த பங்கேற்பாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், மதிப்பீட்டாளர்கள், வல்லுநர்கள், கருத்துரையாளர்கள் என ஐவகைப் பிரிவினர் இடம் பெறுவிதமாகத் திட்டமிடப்பட உள்ளது 


பயிலரங்கின் நோக்கம்: தமிழகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்க்கல்வி என்பது பாடத் திட்டங்களின் அடிப்படையில் மூன்று நிலைகளில் செயல்பாட்டில் இருக்கிறது அவை:


1. இளம் கலையியல், இளம் அறிவியல் பட்டப்படிப்புகளில் பகுதி I (PART-I ) பாடமாகத் தமிழ் கற்பித்தல்.
2. இளம் கலையியல்- தமிழ் இலக்கியம் என்னும் பட்டப்படிப்பில் முதன்மைப் பாடமாகத் தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழ் கற்பித்தல் 
3. இளம் கலைப் பட்டத்தின் தொடர்ச்சியாக முதுகலைத் தமிழியல் மற்றும் இளநிலை ஆய்வுக்கான பட்டத்திற்காகவும் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன.
இம்மூன்று நிலைகளுக்குமான பாடத்திட்டங்களை ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியே உருவாக்கிச் செயல்படுத்தி வருகின்றன. என்றாலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் என்ற நிலையில் அதன் வழிகாட்டு முறையிலிருந்து அதிகம் விலகி இருக்க முடியாது. பொதுநிலைப் பட்ட அடிப்படைத்தாள், அடிப்படைத்தாள்களோடு உறவுடைய சார்புத் தாள், மொழி மற்றும் இலக்கியத்துறை சார்ந்து விருப்பத் தாள்கள் என்ற கூறுகளோடு பிறதுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளும் பிறதுறைப் பாடங்கள் என்ற பொது அமைப்புக்குள்ளேயே செயல்படுகின்றன. இப்பொது அமைப்பிலிருந்து விலகாமல் நிகழ்காலத் தேவைக்கேற்ற மொழிக் கல்வியை வடிவமைத்துத் தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கல்வியை உலகத்தரமானதாக மாற்றும் நோக்கத்தோடு புதிய பாடத்திட்ட முன்வரைவுகளை உருவாக்க இப்பயிலரங்கு முயற்சி செய்யும். 


இருப்பும் மாற்றங்களின் தேவைகளும்:
• நிகழ்காலத் தேவைக்கான மொழியாகத் தமிழை மாற்றுவதற்குப் பல்கலைக்கழக அளவில் செய்யக் கூடிய மாற்றம் மொழிப்பாடத்தில் செய்ய வேண்டிய மாற்றம் ஆகும். கலையியல் மற்றும் அறிவியல் பட்டங்களுக்கான தமிழ்த் தாளான பகுதி ஒன்றின் நோக்கம் இலக்கிய அறிமுகம் மற்றும் ரசனை உருவாக்கம் என்பதை முதன்மையாகக் கருதாமல் மொழிவளம் மற்றும் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டதாகப் பாடத் திட்டத்தை உருவாக்குதல் மிக அவசியம். வேண்டும்.


• இப்போது பகுதி ஒன்று தாள்களின் கூறுகளுக்கும், இளநிலைத் தமிழ் இலக்கியப் படிப்பில் இடம் பெற்றுள்ள தாள்களின் அமைப்புக்கும் வேறுபாடுகள் அதிகம் இல்லை. இரண்டுக்கும் ஒரே நோக்கம் தான் இருக்கிறது. இதனை மாற்றுவது அவசியமானது. கலையியல் மற்றும் அறிவியல் பாடங்களைப் படிப்பவர்களுக்கான தமிழ்த் தாள் அவர்களின் முதன்மைப் பாடங்கள் சார்ந்த சொல் வளத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக மாற்றப் பட வேண்டும். அந்நிலையில் தான் தமிழ்மொழியை அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் மொழியாக மாற்ற முடியும். எனவே இலக்கியக் கூறுகளைக் குறைத்துக் கொண்டு மொழிக்கூறுகளை அதிகப்படுத்தித் தமிழைப் பிழையின்றி எழுதவும், அவர்கள் துறை சார்ந்த எடுத்துரைப்புகளைப் பேச்சு வழியாகவும் எழுத்து வழியாகவும் நிகழ்த்தவும் தூண்டும் விதமாகப் பாடத் திட்டத்தை மாற்றியாக வேண்டும். இம்மாற்றத்தைத் தமிழின் வாழ்வுக்கான தேவையாகக் கருதிச் செய்தாக வேண்டும். எப்போதோ செய்திருக்க வேண்டிய இம்மாற்றத்தை இப்போதும் செய்யவில்லை என்றால் தமிழ்மொழியின் இருப்பும் எதிர்காலமும் வாழ்வும் பெரும் கேள்விக்குரியாக மாறி விடும். தமிழ்ப் பாடங்கள் பயனுடையதாக மாற்றப்படவில்லை என்றால் தமிழ் மொழியின் எதிர்காலம் மட்டுமல்ல; தமிழாசிரியர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியதே.

• முதன்மைப் பாடமாகத் தமிழைப் பயிலும் பட்டப் படிப்பில் மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தைக் குறைத்து இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கல்வியின் தேவையை அதிகரிக்கும் விதமாகப் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். இலக்கியப் படிப்பின் அடிப்படைகளைக் கற்றுத் தருவதோடு முழுமையாகப் படிப்பதன் தேவைகளையும் உருவாக்கித் தர வேண்டும். இவை எந்தவொரு மொழியிலும் இலக்கியம் கற்றவரோடு உறவாடத் தேவையான அடிப்படைகளாக இருக்க வேண்டும். அத்தோடு தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியையும், இன்னொரு இந்திய மொழிப் பயிற்சியும் அளிக்க ஏற்பாடு செய்யும் விதமாகப் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்

• மூன்றாவது கட்டமாக முதுகலைத் தமிழ்ப் படிப்பில் இலக்கியக் கல்வியை மாணவர்களை மையமிட்டதாக மாற்றி ஆசிரியர்களின் துணையின்றி இலக்கியப் பனுவல்களை அணுகும் நிலையை உருவாக்க வேண்டும். திறனாய்வு மனப்பான்மை, பிறதுறை அறிவை இலக்கியக் கல்விக்குப் பயன்படுத்தும் வழி முறைகள் போன்றவற்றோடு பிறமொழி அறிவோடு கூடிய ஒப்பாய்வு, மொழி பெயர்ப்பு போன்றவற்றில் ஈடுபடும் நிலையை உருவாக்கும் விதமாகப் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக இளநிலை ஆய்வுப் பட்டத்தில் ஆய்வுமுறையியல் மற்றும் அணுகுமுறைகளை மட்டும் கற்றுத் தந்து விட்டு ஒவ்வொரு மாணாக்கரும் தங்களுக்கான தனித்தாள்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும் விதமாகப் பாடத்திட்டம் உருவாக்கப் படவேண்டும். எனவே பயிலரங்கு நிகழ்நிலையிலுள்ள பாடத் திட்டங்களின் மீதான மதிப்பீடு, மாற்றம் செய்ய வேண்டிய மையப்புள்ளிகளைக் கண்டறிதல், மாற்றுப் பாடத்திட்ட வரைவை உருவாக்குதல் என்பதாக அமையும். 

இந்தப் பயிலரங்கில் கல்வி நிலையங்கள் சாராத வல்லுநர்கள், கல்வியாளர்கள் மட்டுமல்லாமல் காலத்திற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கும் பலரையும் பங்கெடுக்கச் செய்யலாம் என நினைத்துள்ளேன். தமிழ் உயிர்ப்புள்ள மொழியாக இருப்பதில் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது. உங்கள் ஆலோசனைகள்/ கட்டுரைகளை எனது முகநூலில் பதிவு செய்யலாம். அல்லது இணைய முகவரியான : ramasamytamil@gmail.com - இல் அனுப்பலாம். எனது தொலைபேசி : 9442328168 இல் பேசலாம்.
உங்கள் கருத்துக்கள்/ கட்டுரைகளின் அடிப்படையில் நேரடிப் பங்கேற்பிக்கான வாய்ப்பினை வழங்க முடியும். அழைக்கப்படுபவர்களின் பயணச் செலவு, தங்குமிடச் செலவு, உணவு ஆகியன ஏற்பாடு செய்யப்படும்.


• பயிலரங்கு நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ள நாட்கள் : 2013, டிசம்பர் 4,5 (புதன், வியாழன்)


(அ.ராமசாமி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்