ஒரு சொம்பின் கதை

“ ஏய்! என்னாச்சு..
ரொம்ப யோசிச்சுக்கிட்டு இருக்கிறமாதிரி தெரியுது.
ஓ.. திரும்பவும் அதே நினைவு தானா?
பித்தளைச் சொம்பு கண்ணில பட்டுவிடக்கூடாதே உனக்கு”.

”ஆமா. நீ சொல்றது சரிதான்.
இந்தச் சொம்பு என் நினைவைக் கிளறிவிட்டது;
அந்தச் சொம்பும் இப்படித்தான் இருந்தது.
அகன்ற வாயும் நடுவில் உருண்டு திரண்டு
ஒரு பந்தைப்போல.
திரும்பவும் சுருங்கி விரிந்து...
திரட்சிக்கும் அடிப்பாகத்திற்கும் இடையில்
ஓர் உடுக்கைபோல.
***
அன்று -
வருவதாகச்சொன்ன உனக்காகத்தான் காத்திருந்தேன்.
நானும் அம்மாவும் வீட்டிற்குள் இருந்தோம்.
கதவு தட்டப்படும் ஓசை.
நீதானென்று ஓடிவந்து திறந்தேன்
நீயில்லை.. அவன்.. ம்ம் அவனே தான்..
முன்னொருநாள் கையில் பந்தோடு வந்து
நாம் கட்டி வைத்திருந்த மணல் வீட்டைச் சிதைத்துவிட்டுத்
தனது பந்தை எடுத்துக் கொண்டு ஓடினானே !
அவன் தான். அவனே தான் வந்தான்.
இப்போதெல்லாம் அடிக்கடி அவ்வப்போது வந்துகொண்டே இருந்தான்.
அப்போது
வாசலில் கட்டியிருந்த மணியைத்தடவி எழுப்பிய ஓசையைக்
கண்ணால் கேட்டுக் கண்ணாலேயே பார்த்துவரச் சொன்னாள் அம்மா
போனேன்.
அவனே தான் .
கையில் பந்தெல்லாம் இல்லை.
“வேட்கையாக இருக்கிறது; தாகம் தீர்க்கமுடியுமா?”
கண்களுக்குள் புகுந்து கேட்டே விட்டான்.
சன்னமான குரலில்தான் சொன்னான்;
அம்மாவுக்கும் கேட்டுவிட்டது.
சொம்பில் நிரம்பிய நீருடன் அம்மா,
என்னை அழைத்தாள்.
’தாகம் தீர்த்துவிட்டு வா’ -
சொல்லிக் கையில் கொடுத்தாள்.
அம்மா உள்ளே; நான் வாசலில்.
சொம்பின் இடுப்பைப் பிடித்து வாங்கக் கைநீட்டியவன்
கைபற்றியிழுத்து இடுப்பை வளைத்துவிட்டான்.
வளையல்கள் உரசும் சத்தம் உரக்கக் கேட்டது.
‘ இவன் செய்வதைப் பாருங்கள்’- பதற்றக்குளறல்
‘என்ன அங்கே’- வினாவாய் வந்த அம்மா.
” இவனுக்கு விக்கல் எடுக்கிறது” -
சுதாரிப்புப் பதிலாய் ஆனது.
நாசியைத் தடவிவிட்டு அம்மா போனபோது
புன்னகையைப்பெருக்கி மழையாய்ப் பொழிந்துவிட்டான்.
நான் நனைந்தேன்.
அம்மாவுக்கும் ஈரவாடை எட்டியிருக்கும்.
===========================================
(கலித்தொகை / குறிஞ்சிக் கலி.51 )

 சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி,
நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே! 5
உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை,
'அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா' என்றாள்: என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10
'அன்னாய்! இவனொருவன் செய்தது காண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்,
'உண்ணு நீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15
செய்தான், அக் கள்வன் மகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்