நீளும் வாரக்கடைசிகள்


ஒவ்வொரு கம்பத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றித் தேசப்பற்றைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், தேச முக்கியத்துவம் வாய்ந்த யாராவது இறந்ததைக் கொடியை இறக்கி அடையாளப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தோடு இணையத்திற்குள் நுழைந்தபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என்பது புரிந்தது.  அரைக்கம்பத்தில் கொடியை இறக்கிப் பறக்கவிடுவது நினைக்கப்படும் நாளின் அடையாளம் என்பது புரிந்தது.
போரில் இறந்தவர்களை நினைத்துக்கொள்ளும் இந்த நாளை 1971 முதல் ஐக்கிய அமெரிக்காவின் தேசியவிடுமுறை தினங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார்கள். அதற்கு முன்பு உள்நாட்டுப் போரில் உயிர்விட்ட ராணுவ வீரர்களை நினைத்துக்கொள்ளும் நாளாகவே இருந்தது. அதன் தொடக்கம் 1868 மே 30 ஆக இருந்தது.  மேமாதத்தின் கடைசித் திங்களை அறிவித்துள்ளார்கள். 1971 இல் தேசம் முழுவதற்குமான நாளாக ஏற்று ஐக்கியக்குடியரசின் அனைத்து மாநிலங்களும் விடுமுறை அளிக்கின்றன. அதுமுதல் மேமாதத்திற்கான நீண்ட வாரக்கடையாக மாறியிருக்கிறது. 

அன்றிலிருந்து இந்நாட்டரசின் ஆணையை ஏற்று உலகநாடுகளெங்கும் சென்று போரிட்டு மரித்துப் போன அமெரிக்கர்களை இந்தநாளில் நினைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் பகுத்தறிவுக் கொண்டும் தர்க்கரீதியாகவும் அணுகிப் பார்ப்பதாக நம்பும் அமெரிக்கர்களைப் போரை ஏற்க வைத்திருக்கும் அரசுகளின் திறமையைப்பாராட்டத்தான் வேண்டும். உள்நாட்டுப் போரை நடத்தியதை நினைவுகொள்வதில் அர்த்தமிருக்கிறது. அதே நேரத்தில் உலகத்தின் அனைத்துப்பரப்பிலும் உருவாக்கும் அநீதிகளை - அநீதிகளுக்கான தலைமையை அழித்து நீதியை நிலைநாட்டும் பொறுப்பு அமெரிக்க அரசுக்கு இருக்கிறது என்பதை எப்படி ஏற்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்நிய நாடுகளில் தலையிட்டுப் போரை நடத்தும் அரசின் செயல்பாடுகளால் உள்நாட்டில் பலவிதமான நன்மைகள் பெரும்பாலான மனிதர்களுக்குக் கிடைக்கிறது. முன்னாள் ராணுவ வீரர் என்பதற்காகத் தனிநபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாரிசுகளுக்கும் கிடைக்கும் சலுகைகள் பலவிதமானவை. வேலைவாய்ப்பு முன்னுரிமை தொடங்கி வீடு,வாகனம், நிலம், உணவுவிடுதிகளில் சிறப்புரிமையென எல்லாவற்றிலும் முன்னுரிமைகள் உண்டு.இப்போதெல்லாம் உலகப்போர்களில் உயிர்நீத்தவர்களோடு இணைத்து வியட்நாம், லத்தீன் அமெரிக்கா, லிபியா, வடகொரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், எனப் பலநாடுகளுக்கும் சென்று போரிட்டு மறைந்த அமெரிக்க ராணுவவீரர்களுக்கான கல்லறைகளில் சின்னச்சின்னக் கொடிகளையேற்றி நினைவுகொள்கிறார்கள்.


மேமாதத்தின் நீண்ட வாரக்கடைசி நாளான போரில் மரித்தோரின் நினைவு நாளை முன்வைத்தே ரோட் தீவுப்பயணத்தைத் திட்டமிட்டோம்.தீவிலுள்ள நியூபோர்ட் கடற்கரைக்கும், அதன் தலைநகர் புரொவிடென்ஸுக்கும் போய்த் திரும்பும்போகு திட்டம். பாஸ்டனிலிருந்து இரண்டுமணி நேரத்திற்குள் போய்விடும் தூரம். அந்தத்தீவே தனியொரு மாநிலம் என்றாலும் வடகிழக்கு ஐக்கிய மாகாணங்களின் கூட்டமைப்பான நியூ இங்கிலாந்தின் பகுதியாக இருக்கிறது.. இந்தியாவிலிருக்கும் வடகிழக்கு மாநிலங்களின் கூட்டமைப்பு போல நியு இங்கிலாந்து கூட்டமைப்பின் ஓரங்கமாக இருக்கும் ரோட் தீவு தவிர கனக்டிகட், மைன், மசாசுசெட்ஸ், நியுகாம்சயர் ஆகியனவும் அதற்குள் அடக்கம்.
அமெரிக்காவின் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தினமும் வாரக் கடைக் கடைசிக் கொண்டாட்டங்களை நீட்டிக்கொள்வதற்கு வகைசெய்யும்விதமாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படும் ஜூலை 4, கிருஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 மட்டுமே நிலையான விடுமுறை நாட்கள். அவை என்ன கிழமையில் வருகிறதோ அன்றுவிடுமுறை. மற்ற விடுமுறை நாட்களெல்லாம் அந்தந்த மாதத்தின் நீண்ட வாரக்கடைசி நாட்கள் என்பதாக முறைப்படுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவதொரு சனி, ஞாயிறோடு முன்னொட்டோ பின்னொட்டாகவோ சேர்த்து நீண்ட வாரக்கடைசிகளை உருவாக்கித் தருவதன் மூலம் மாதத்தில் ஒருவாரக்கடைசி விடுமுறை  இரண்டு நாளென்பதற்குப் பதில் மூன்றாகிறது.
வாரக்கடைசிகள் கொண்டாட்டத்திற்குரியன என்பது மேற்குல வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட  சிந்தனை. கொண்டாட்டங்கள் குடும்பவெளிக்குரியன அல்ல என்பதும் அதன் தொடர்ச்சி. இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டாடுவதற்குக்கூட பொதுவெளிகளையே தேர்வு செய்வார்கள். காதலெனும் அந்தரங்கச்செயல்பாட்டை முடித்துக் கணவன் - மனைவி பாத்திரத்தை ஏற்கும் புதிய ஏற்பாட்டிற்குக் கூட ஒரு கேளிக்கை விடுதியையோ, பரபரப்பான பெருஞ்சாலையையோ தேர்ந்தெடுத்து முட்டிபோட்டுக் காதல் விடுத்து, “கணவனாக ஏற்றுக் கொள்” எனச் சொல்வதில் ஒருவித மயக்கத்தை அடைவதுண்டு.

குடும்பம், வீடு - என்ற இரண்டு சொற்களையும் ஒருபொருட் பன்மொழிபோல இந்தியர்களாகிய நாம் பயன்படுத்துகிறோம். வீடு இடப்பெயர். இந்தியத் தந்தையாதிக்கத்தின் அதிகாரமான நிலப்பெயர் வீடு. குடும்பம், வீட்டோடு தொடர்புடைய கருத்தாகவும் அமைப்பாகவும் இருக்கும் பெயர்ச்சொல்.  தந்தைமை/ ஆண் அதிகாரம் செல்லுபடியாகும் கருத்தியல் தளம். ஒரு வீட்டின் உரிமையாளராக இருக்கும் தந்தை, குடும்பத்தலைவராக நம்பப்படுகிறார். வீடு என்னும் இடத்தின் உரிமை காரணமாகக் குடும்பத்தின் மீது அதிகாரம் செலுத்தும் அதிகாரம் அவருக்கு இருப்பதாக அவர் நம்புகிறார். அந்த வீட்டின் ஒவ்வொரு அங்குளத்திலும் அவரது உழைப்பும் சம்பாத்தியமும் இருக்கிறது என நம்புவதால் அந்த வீட்டின் ஒவ்வொரு அறைக்குள் இருப்பவர்களும் தனது கட்டுப்பாட்டுக்குள், கண்காணிப்புக்குள் இருக்கவேண்டியன என்பதும் அந்த நம்பிக்கையின் நீட்சி.
இந்தியத் தந்தையாதிக்கத்தின் அதிகாரமான நிலமான ‘வீடு’போல மேற்குலக வாழ்க்கையில் வீடு இருப்பதில்லை. வீடு முழுவதும் செல்லும் உரிமையை யாரும் விரும்புவதில்லை. வீட்டிற்குள் இருக்கும் ஓரறை மட்டுமே அவர்களது உரிமை. பொது அறைகளான குளியலறை, கழிப்பறை, சமையலறை, சரக்கறை போன்றனவற்றைப் பயன்படுத்த வரிசையில் நிற்கவேண்டும். ஒருவர் பயன்படுத்தியபின் இன்னொருவர் அனுமதிபெற்று நுழையலாம். காக்கவைத்ததற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். அனுமதி தந்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். மகளின் அறையில் அம்மா நுழைவதற்கும், தந்தையின் அறையில் தனயன் நுழைவதற்கும்கூட அனுமதி வேண்டும். மன்னிக்க,  நன்றி போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட வேஎண்டும். வரிசையில் முதலில் நின்று கதைவைத் திறப்பவர் அனைவருக்கும் உள்ளே செல்ல அனுமதிப்பவராக நாகரிகம் காட்டினால் மதிக்கப்படுவார்; வரிசையில் வரும் இன்னொருவர் அவரை அனுப்பிவிட்டுத் தான் கதவைத் தாங்கிநின்றால் பெருந்தன்மையோடு நன்றி கூறிப்படுவார். இவையெல்லாம் மேற்கின் பண்பாட்டு அடையாளங்கள்.  
வீட்டின் தேவைக்காகச் சேர்ந்து வாழத்தொடங்கிக் காதலனாக ஆக்கிக் கொண்ட ஒருத்தி எனது மாணவியாக இருந்தாள் வார்சாவில். அவனை என்னிடம் அறிமுகம் செய்வதற்கு முன்னால் ஆரத்தழுவி முத்தமிட்ட பின்பே என்னிடம் அறிமுகப்படுத்தினாள்.  அவளது தந்தையின் வீடு (அவள் அப்படித்தான் சொன்னாள் ) பால்டிக் கடல் ஓரத்தில் ஒரு பண்ணைவீடாக இருக்கிறது. எனக்கு வார்சாவின் விடுதி வாழ்க்கை பிடிக்கவில்லை. அதனால் வீடுதேடினேன். இவன் தன் தாத்தாவின் வீட்டில் உள்ள இரண்டு அறைகளுக்குச் சொந்தக்காரன். ஒரு அறையை வாடகைக்குக் கொடுக்கத் தயாராக இருந்தான். அந்த அறையை எனது படிப்புக்கால அறையாகப் பயன்படுத்தத் தயாரானேன். இரண்டு ஆண்டுகளாக அந்த அறையில் இருக்கிறேன். வாடகை கொடுக்கிறேன். ஓராண்டாகக் காதலிக்கிறோம். இப்போது சேர்ந்து வாழ்கிறோம். எப்போதாவது இருவருக்கும் உறவுகொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்தால் இன்னொருவர் அறையில் அனுமதியோடு நுழைவோம். மற்றபடி தனித்தனி தான்.
வார நாட்களில் நான் எனது அறைக்குப் போகும்போது அவன் வேலைக்குப் போயிருப்பான். அவன் வரும்போது நான் பல்கலைக்கழகத்துக்கு வந்திருப்பேன். இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டுமென்றால் வெளியில் தான் சந்தித்துக் கொள்ளமுடியும். வாரக்கடைசிநாட்களில் நண்பர்களோடு வெளியில் செல்வதே விருப்பமானது. அறையில் அடைந்து கிடப்பது சோகம். வாரக்கடைசிகளை வீட்டின் புறத்தே நின்று கொண்டாட வேண்டுமென நினைப்பதும் அவர்களின் பண்பாட்டு அடையாளமே. அந்தரங்கமான இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொள்ளவும் முட்டிபோட்டுக் காதலைச் சொல்லவும்கூடப் பொதுவெளியைத் தேர்வுசெய்பவர்கள் அவர்கள். முத்தத்தை அந்தரங்கமாக நினைக்கும் மனநிலைக்குமாறாகப் பொதுவெளிக்குரியதாக வைத்திருப்பதை நாம் புரிந்துகொண்டால் மற்றவற்றைப் புரிந்துகொள்ளலாம்.
வாரக்கடைசியைக் கொண்டாட்டத்தின் அடையாளமாக மாற்றியதின் பின்னணியில் சுற்றுலாப் பொருளாதாரம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக உருவாகும் நுகர்வுப் பண்பாடும் இருக்கிறது. சுற்றுலாவும் பண்ட நுகர்வும் மேற்குலகில் தனியார் வசம் இருக்கிறது. வாரக் கடைசிக் கொண்டாட்டங்களையும் இப்போதெல்லாம் பேரங்காடிகளின் விற்பனைச் சலுகைகள் கட்டமைக்கின்றன. நீண்ட நாள் தேங்கி நிற்கும் துணிகள் உள்ளிட்ட பண்டங்களைக் கழித்துக்கட்டும் விற்பனைச் சலுகைகளை அவை வழங்குகின்றன.
சனிக்கிழமைக் காலையில் இறக்கப்பட்டு நடுக்கம்பத்தில் பறந்த அமெரிக்காவின் தேசியக்கொடி நேற்று திங்கட்கிழமையின் விற்பனையின்போது உயர்ந்து பறந்துகொண்டிருந்தது. பணப்பரிவர்த்தனையை மாற்றிக் கடன் அட்டைகளாகவும் சேமிப்பு அட்டைகளாகவும் மாற்றிவிட்ட பின்னை முதலாளியம் நினைவு தினங்களைக் கொண்டாட்ட தினங்களாகவும், விற்பனைப் பெருக்க நாட்களாகவும் மாற்றி வைத்திருக்கிறது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்