அது ஒரு தத்துவப்போராட்டம்

உலகமயத்திற்குப் பின் தமிழக இளைஞர்களும் யுவதிகளும் இல்லாத பெருநகரங்கள் இல்லை என்னுமளவிற்குச் சின்னச்சின்ன நாடுகளிலும் வாழ்கிறார்கள் தமிழர்கள். அதிலும் மனிதவளத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், கனடாவிலும் ஒவ்வொரு பெருநகரத்திலும் குடும்பத்தோடு வாழும் இந்தியர்களைத் தேடி அலையவேண்டியதில்லை. வாரக்கடைசியைக் கழிப்பதற்கான இடங்களில் அரைமைல் தூரம் நடந்தால் ஒரு இந்தியக் குடும்பத்தைப் பார்க்கலாம். ஒரு மணிநேரம் செலவிட்டால் ஒரு தமிழ்ப் பேச்சைக் கேட்கலாம்.
உங்கள் குடும்பத்து இளைஞரோ, யுவதியோ மூன்றாண்டுகள் வெளிநாடொன்றில் இருந்தால் போதும். அவர்கள் வழியாக அவர்களின் நண்பர்களைத் தேடிப்போய்ப் பார்த்துவிடலாம். இலங்கைத் தமிழ் நண்பர்கள் வேறு அங்கங்கே இருப்பதால் தமிழ்ப் பேசவும் தமிழ்ச்சாப்பாடு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தைத் தாண்டி வேதியியல், மின்னணுவியல், மருத்துவம், வாகனத் தயாரிப்பு, கட்டடப்பணியென பல துறைகளில் இந்திய அறிவுக்கும் உடலுக்கும் மதிப்பு இருக்கிறது. ஒருநகரத்தில் வாழும் தமிழர்கள் மாதத்திலொருநாளாவது சந்தித்துக் கொள்வதும் முடிந்தால் கூட்டாஞ்சோறு சாப்பிடுவதுமாகப் பரிவர்த்தனை செய்கிறார்கள். இரண்டாண்டு வார்சா வாழ்க்கையின்போது அந்தக் கூட்டாஞ்சோறுப் பண்பாடு தந்த அனுபவங்கள் புதுமையானவை.
கனடாவின் அரசியல் தலைநகர் ஒட்டாவாவில்  இரண்டு நாட்கள் தங்கும் திட்டமிருந்தது. ஆனால் அறையெதுவும் முன்பதிவு செய்யவில்லை.  “அறையெதுவும் போடக்கூடாது; வெளியிலும் சாப்பிடக்கூடாது” என்ற சொல்லித் தகவல் அனுப்ப நண்பர்கள் இருக்கும்போது அதைத் தவிர்க்க யார் விரும்புவார்கள். திருநெல்வேலியில் அந்தப் பெண் எங்கள் வீட்டிற்கெல்லாம் வந்திருப்பதாகவும் எங்கள் வீட்டில் தங்குவதற்குத் தயங்கக்கூடாதென்றும் சொன்னாள். நான் நல்லா சமைப்பேன்; அதைச் சாப்பிடவாவது தங்கவேண்டும் என்பதும் அவளது வேண்டுகோள்.

புதுக்கோட்டையிலிருந்து வந்து திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் படித்த பெண் அவள். பெயர் விஜி. முழுப்பெயர் விஜயலெட்சுமி. அந்தப் பெயருக்குரியதாக இருந்த முகமும் நினைவிலிருந்து வரவில்லை. தயக்கம் இருந்தது. ஆனால் அவள் சமைத்துப் போடப்போகும் இந்தியச் சாப்பாட்டை நினைத்துச் சம்மதமும் சொன்னது மனது.
மகனுக்கும் மருமகளுக்கும் வகுப்புத் தோழி. படிக்கும் காலத்தில் எங்கள் வீட்டிற்கெல்லாம் வந்திருந்ததால் எல்லோருக்கும் பழக்கம். மனைவிக்கு அவர் பெயர்க்காரப் பெண் என்பதால் ரொம்பவும் பிடிக்கும். அவளது கணவர் ஆனந்த், பொன்னமராவதிக்காரர். இருவருமே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் வியாபாரம், விவசாயம் எனச் சில தலைமுறைக்கான வசதிகளுண்டு. என்றாலும் படித்த படிப்புக்கான வேலை வெளிநாட்டில் கிடைத்ததால் மகிழ்ச்சியாக அங்கே இருக்கிறார்கள். இரண்டு நாளும் ஒட்டாவை நகரையும், 50 கி.மீ. தூரத்திலொரு கிராமத்தையும் அதனருகில் ஒரு மலையையும் காட்டினார்கள். இரண்டுநாளும் என்னை  அவர்கள் காரில் ஏற்றிக் கொண்டார்கள். அவர்களோடு உரையாடலாம் என நினைத்து ஏறிய என்னைப் பேசவைத்துக் கேட்டுக்கொண்டே வந்தார்கள்.  
தமிழ்நாட்டிலிருந்து பிரிந்திருப்பதால் ஊரைப் பற்றி, தமிழ்நாட்டு அரசியல் பற்றி, கல்லூரிகள் பற்றி,  சினிமாக்கள் பற்றி, கிராமங்கள் பற்றி, அவை ஏன் மாறாமல் இருக்கின்றன என்பதான கேள்விகளுக்கு எனது வாசிப்பை -வேறுவிதமான பார்வையோடு சொல்வதைக்  கேட்டுக்கொள்வதில் அவர்களின் ஆர்வம் கூடிக்கொண்டே போனது. ஒருவேளை இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருந்து அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தால், இப்படியெல்லாம் உட்கார்ந்து கேட்டிருப்பார்களா? என்ற சந்தேகம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. நிச்சயம் இது சாத்தியமில்லை என்று நினைத்துக்கொண்டேன். இவைபற்றியெல்லாம் நேரடியான ஒற்றைப் பரிமாணத்தைத் தந்துவிடப் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இருக்கும்போது ஒருமனிதனிடம் ஏன் உட்கார்ந்து கேட்கவேண்டும் ?. அப்படித்தான் தமிழ்நாட்டின் பொதுப்புத்தி உருவாக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு மனிதர்களை ஒரே மாதிரிச் சிந்திப்பவர்களாக நினைத்துக் கொண்டு ‘இவைகளைத் தான் அவர்கள் விரும்புவார்கள்; இவை மட்டும் தான் அவர்களின் எதிர்பார்ப்பு’ எனச் செய்திகளை எழுதித் தரும் பத்திரிகைகளின் பொதுப்புத்தி உருவாக்கத்திலிருந்து யாரும் தப்பமுடியாதுதானே. தமிழ்நாட்டுப் பெண்களுக்குத் தேவை சதி, வஞ்சகம், தட்டிப் பறித்தல், பணத்தாசையோடு வாழ்தலை விரும்பும் நபர்களாகவும், பகட்டான ஆடைகளோடும் நகைகளோடும் வரும் மனுசிகளைக் காட்டும் தொடர்கள் என முடிவுசெய்துவிட்ட தொலைக்காட்சித் தொடர்களிடமிருந்து தப்பித்தல் எப்படிச் சாத்தியம். யாருக்கு முடியும்?  இரட்டை எதிர்வுக்குள் அரசியலைக் குறுக்கிக்காட்டும் விவாதங்களால் நகலெடுக்கும் சிந்தனையாக்கமும் இன்னொரு பொதுப்புத்தி உருவாக்கம். 
இவையெதுவும் அண்டாமல் தொலைதூர நாடான கனடாவின் ஒட்டாவா நகரில் வாழும் அந்த இளம் தம்பதியரோடு பேசிய இரண்டு நாட்களும் இந்தப் பயணத்தில் புது அனுபவம். அதைவிடப் புது அனுபவம் அவளது ருசியான சமையல். பொங்கல், வடை, சாம்பார், சட்டினியெனத் தமிழ்நாட்டு வாசனையைத் துல்லியமாக உருவாக்கித் தந்தவளுக்கு எனது பாராட்டுகளைச் சொன்னேன். அடுத்தநாள் கோழி வருவலும் பிரியாணியும் செய்து திக்குமுக்காட வைத்துவிட்டாள். அங்கிருந்த நாளொன்றில் மகனின் பிறந்தநாள் வேறு வந்ததால் அதற்கான தயாரிப்புகளாகக் கேசரி, வடை.  இரண்டு நாட்களும் வீட்டிற்குள் வந்தால் தமிழ்நாட்டுச் சமையல் வாசனை.  வெளியில் போனால் கனடிய வாசனை. எனது அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது  கணவனுக்குச் சமைத்துப் போடுவதில் இருக்கும் சந்தோசத்தை அவளிடம் காணமுடிந்தது. அவர்களது காரில் தான் நான் மட்டும் பயணம் செய்தேன்.
கனடிய வாசனையெனச் சொல்வது மனிதர்களின் நடை, உடை, பாவனைகள் தான். வேகம் காட்டாத நடையில் ஒவ்வொருவரும் செல்கிறார்கள். எல்லோருடைய கைகளிலும் ஏதாவதொரு பை இருக்கிறது. பைக்குள் குளிர் அதிகமானாலோ, மழை வந்துவிட்டாலோ அணிந்து கொள்வதற்கான ஆடைகள் இருக்கின்றன. வீட்டைவிட்டுக்கிளம்பும் ஒவ்வொருவரும் அன்றைய வெப்பதட்பநிலையையும், போகிற இடத்தில் இங்கிருப்பதைவிட மாறுதல் இருக்குமா? என்பதையும் தெரிந்து கொண்டுதான் கிளம்புவார்கள். இதை ஐரோப்பாவிலிருந்தபோது கவனித்திருக்கிறேன். ஒரேநாளில் காற்று, மழை, பனியென மாறும் சூழல். அதற்கேற்றதான ஆடைகள் வைத்திருக்கவேண்டும். உடலில் பூசிக்கொள்ளும் திரவங்கள் வேண்டும். முக்கியமாக உதடுகளிலும் உள்ளங்கைகளிலும் தடவிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் வெடித்து ரத்தம் கசியும்.


பொதுவாகனங்கள் சரியான நேரத்துக்கு வருகின்றன. வருவதில் சிக்கலென்றால் திட்டமிடுவதற்கான நேரங்கொடுத்து முன்னரே அறிவிப்புச் செய்கிறார்கள். மாற்றுவழிகள் எவை என்றும் சொல்கிறார்கள். மனிதர்களைப் பதற்றமடையாமல் வைத்திருக்கும் வழிகளைக் கவனித்துக்கொள்ளும் அரசு நிர்வாகம் கண்காணிப்பு முறைகளையும் கடுமையானவைகளாகவே வைத்திருக்கின்றன. சாலைவிதிகள், நகரச் சுத்தம், சூழல் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு, ஆண்-பெண் மரியாதையைப் பேணுதல் என்பதை அறிந்தவர்களாக மக்களை மாற்றிவிட்டு, அவர்களிடமிருந்து பெறும் வரிகளுக்கான பணியைச் செய்கின்றன. கட்டுப்பாடும் பொறுப்பும் கடமையும் பிரித்துக்காட்ட முடியாதவைகளாக இருக்கின்றன.
 “ ஒருநேரம் வெளியே வித்தியாசமான சாப்பாட்டுக்குப் போகலாம்”  என்று மெக்சிகன் சாப்பாட்டுக்கூடத்திற்குச் செல்வதென்று முடிவானது.  தரை தளத்திற்குக் கீழிருந்த அந்த கூடம் ரத்தச் சிவப்பு வண்ணத்தில் இருந்தது. லத்தீன் அமெரிக்கப் பாடகர்களின் இசை அதிர்ந்துகொண்டிருந்தது.  சமைக்காத கறிகளும் காய்களும் தானியங்களும் நிரல்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. சின்னச்சின்னப் பொம்மைகளும் வரிசைகட்டி நின்றன.  மேசை தேடி உட்கார்ந்தால் பணியாளர்கள் ஒருவரும் வரவில்லை.  என்ன இருக்கிறது என்ற விவரங்கள் அடங்கிய அட்டைகள் இருந்தன. மதுபானங்கள், அதற்கு உடன் சாப்பிடும் தானியங்கள், பயறுகள், முதன்மைச் சாப்பாடு, அதனோடு சேர்த்துக்கொள்ளவேண்டிய இணைப்புகள், பின்னர் குளிர்மைப் பண்டங்கள் எனப் பட்டியல்கள் இருந்தன. பொதுவான உணவுச்சாலைகள் என்றால் எந்தநாட்டுப் பட்டியலென்று பார்த்து அதற்குள் நமது விருப்பத்தைச் சொல்லவேண்டும். இது முழுமையும் மெக்ஸிகன் விடுதி என்பதால், அந்நாட்டுப் பலகாரங்கள் மட்டுமே கிடைக்கும்.   என்ன வேண்டுமென்பதைக் கேட்டுக் குறித்துக் கொள்ளப் பணியாளர்கள் வரமாட்டார்கள். அதற்குப் பதிலாக நாமே போய் நமக்கு என்னென்னெல்லாம் வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டு வரவேண்டும். அதற்குப் பிறகு அவையெல்லாம் எந்த வரிசையில் வரவேண்டுமோ அந்த வரிசையில் வந்துசேரும்.
கனடியப் பயணத்திட்டம் பத்துநாட்கள் பார்க்கத் திட்டமிட்ட நகரங்கள் ஐந்து. டொறொண்டோவில் மூன்று நாட்கள். ஒட்டாவாவில் இரண்டு நாட்கள். கிங்ஸ்டனில் ஒருநாள். மாண்ட்ரியலில் இரண்டு நாள். க்யூபெக்கில் இரண்டு நாட்கள். ஆனால் இரவுத் தங்கல்கள் நான்கு நகரில் தான். கிங்ஸ்டனுக்கு முற்பகல் போய்விட்டு மாலையில் கிளம்புவதால் தங்கும் ஏற்பாடு கிடையாது. மற்ற நகரங்களில் ஒட்டாவா தவிர்த்து மூன்று நகரங்களிலும் அறைகள் முன்பதிவு செய்துவிட்டே சென்றோம். அயல்நாட்டுப் பயணங்களில் அதுதான் சரியான திட்டம். போனபின் இறங்கித் தேடிக்கொள்ளலாம் என்ற நினைப்பில் செல்ல முடியாது.
ஒட்டாவாவிலிருந்து மாண்ட்ரியாலுக்குக் கிளம்பும்போது அவர்கள் வீட்டுச் சாப்பாட்டைப் பாராட்டிச் சொல்லவேண்டுமென்று தோன்றியது. அந்தப் பெண்ணின் சமையலைப் பாராட்டும் விதமாக அவரிடம், ”நீங்கள் கொடுத்து வைத்தவர் என்னைப்போல” என்று சொன்னேன். முழுநேரமும் வீட்டிலிருந்து பொறுப்பாய் வீட்டைக் கவனித்து எனக்குப் பிடித்த வகையில் சமைக்கும் என் மனைவியைத் தனியாகப் பாராட்டியதில்லை. அந்தப் பெண்  வேலைக்குப் போய்விட்டு வந்து தனது கணவருக்கு ருசியாகச் சமைத்துப் போடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவது தெரிந்தது. நாங்கள் வந்திருக்கிறோம் என்பதற்காக அல்லாமல், அவளது கணவருக்கே விதம்விதமாகச் சமையல் செய்து போடுவதை அவரே ஒத்துக்கொண்டார். என்றாலும் “ எங்க அம்மா சட்னி அரைச்சா இரண்டு இட்லி கூடச் சாப்பிடலாம்;  எங்க அக்கா வீட்டுப் பிரியாணியின் ருசி இன்னும் உனக்கு வரல” என்று சொல்கிறார் என்பது அவளது வருத்தமாக இருந்தது.
அப்போது என் மனைவியும் அவளோடு சேர்ந்துகொண்டார்.  “ இப்போ எல்லாம் என் சமையலைவிட மகள் வீட்டில சாப்பிடுறதுதான் இவருக்கே பிடிக்குது” என்று சொல்ல “ நீங்கள் இதற்குக் காரணம் சொல்லவேண்டும்; இப்போது இல்லையென்றால் எப்போதாவது எழுதவேண்டும் என்று கோரிக்கையும் வைத்தாள்.  “எழுதலாம்; எழுதியதைப் படிக்கும்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. அதையும் தெரிந்து கொள்ளவேண்டுமென்பதால் இப்போதே சொல்லிவிடுகிறேன்” என்று சொல்லிக் கொஞ்சம் நிறுத்திவிட்டு,  ‘அது ஒரு தத்துவப்பிரச்சினை’ என்றேன்.  ‘ தற்காலிகமானது வேண்டுமா? நிரந்தரமானது வேண்டுமா?  என்று கேட்டால்  எதைத் தேர்வுசெய்வீர்கள் என்று கேட்டேன். கொஞ்சம் தயங்கினார்கள். அது நம்முன்னால் இருப்பதைப் பொறுத்தது. என்றாலும் நிரந்தரமானதைத் தான் முதலில் தேர்வுசெய்வேன்; இரண்டாவதாகத் தற்காலிகத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று இருவரும் சொன்னார்கள்.
இதுதான் இந்திய மனநிலை.  “இந்தியர்களுக்கு எப்போதும் பிடித்தமானது நிரந்தரம் தான். ஆனாலும் தற்காலிகத்தைக் கொண்டாடும் ஆசையும் இருக்கிறது. அவருக்கு அக்கா வீட்டுக்குப் போய் சாப்பிடுவது தற்காலிகம். எனக்கு என் மகள் வீட்டுச் சாப்பாடும் தற்காலிகம் தான். சிலநாள் விருந்து என்பதால் அவர்களும் சிறப்பாகவும் கவனமாகவும் சமைப்பார்கள். மனைவி கைச்சமையல் எல்லா இந்தியர்களுக்கும் நிரந்தரம். அதன் மீது கொஞ்சம் சலிப்பு இருக்கவே செய்யும். சமைக்கும் மனைவிக்கும் அந்தச் சலிப்பு தவிர்க்க முடியாதது. ஆனாலும் உள்ளூரிலிருக்கும்போது ஒருவன் வீட்டுச் சாப்பாட்டையே தொடர்ந்து சாப்பிட விரும்புகிறான். எப்போதாவது எல்லாரும் சேர்ந்து வெளியே உணவு விடுதிக்குப் போவது விருப்பம்.
இதற்கு நேர்மாறானது மேற்கத்திய மனோபாவம். அவர்களது முதல் விருப்பம் தற்காலிகமாக இருக்கிறது. அவர்களது சமையல் கட்டு அதற்கேற்ற பொருட்களை மட்டுமே கொண்டிருக்கிறது. தூக்குச் சட்டியில் சாப்பாட்டைக் கட்டியெடுத்துப் போகும் ஐரோப்பியர்களைப் பார்ப்பது அரிது. வேலை பார்க்கும் இடத்திற்குச் சாப்பாடு கொண்டுபோகும் பாத்திரங்களே அங்கு இல்லை. வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டுக் காகிதத்தில் கையைத் துடைத்துவிட்டுக் காரியத்தில் இறங்கிவிடுவார்கள். தற்காலிகத்தை ரசிக்கின்ற இந்த மனோபாவம் தான் இரண்டு மூன்று முறை விவாகரத்துக்களை விரும்புகிறது.


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
குடும்பத்தை விட்டுத் தொலை தூரம் வந்து வாழும் எங்களுக்கு நண்பர்கள் வருகையே ஒரு விழா. அதுவும் தாய் தந்தையுடன் வருகிறார்கள் என்றால் திருவிழா அல்லவா?? நீங்கள் வந்ததே எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி அப்பா. உங்கள் சொற்பொழிவை நாட்கள் அல்ல வருடங்கள் கூட கேட்டுக் கொண்டே இருக்கலாம்.மகள்களைப் பாராட்டுவதில் அப்பாக்களை மிஞ்ச ஆளில்லை என்பதை நீங்களும் எனது அப்பா போலவே மீண்டும் ஒரு முறை உறுதி செய்து விட்டீர்கள் .ஆனால் நண்பரின் தந்தை சிறந்து எழுத்தாளராய் இருப்பதில் நண்பர்களுக்கும் பெருமை உண்டு என்பதை உங்கள் எழுத்தால் உணர்ந்தேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்