ஒரு அரங்கியலாளனாகவும் அரசியல் விமர்சகனாகவும் ராகுல்காந்தியைத் தொடர்ந்து கவனிக்கிறேன். அரசியல் கட்சி ஒன்றின் முன்னணித் தலைவராக அவரது பேச்சுகள் அரசியல் சொல்லாடல்களாக இருக்கின்றன. அந்தச் சொல்லாடல்கள் இப்போதிருக்கும் ஆட்சியாளர்களின் இறுக்கமான சித்தாந்தம், செயல்பாடுகள், மறைமுக நோக்கங்கள், எதிர்மறைச் சிந்தனைகள் போன்றவற்றை விவாதிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அம்பலப்படுத்துகின்றன. ஊழல், வாரிசு அரசியல் போன்றவற்றைப் பேசுவதற்கான திட்டங்களைத் தீட்டித்தரும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பையும், அதன் தலைமைப்பீடத்து மனிதர்களையும் நேரடியாகக் கைகாட்டுகின்றார். அப்படித்தான் அவரது பேச்சுகள் அமையவேண்டும் என்பதைத் திட்டமிட்டே செய்கின்றார்.