நாடக ஆசிரியரைத் தேடும் பாத்திரங்கள்
தமிழில் கவிதைகளும் கதைகளும் எழுதப்படும் அளவுக்கு நாடகங்கள் எழுதப்படவில்லையே? எழுதப்பட்ட நாடகங்களும் நிகழ்கால மனிதர்களைப் பாத்திரங்களாக்காமல் கடந்த காலத்திற்குள் நுழைகின்றனவே? தொன்மங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நினைவூட்டும் நாடகப்பனுவல்களே எழுதப்பட்டு மேடையேற்றப்படுகின்றனவே? இதன் பின்னணிகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வியைப் பல இடங்களில் சந்தித்ததுண்டு. புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றி விட்டு வெளியேறிய பின்னும் நாடகங்கள் குறித்தும் அரங்க நிகழ்வுகளையும் அதன் தொடர்ச்சியாகத் திரைப்படங்களையும் ஊடகங்களையும் கவனித்து எழுதுபவன் என்பதால் இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் பதிலை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், நான் இதற்கான பதில்களை உடனடியாகச் சொன்னதில்லை. ஆனால் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை என்பதையும் மறுக்கவில்லை; மறக்கவில்லை.