வந்தார்கள்; வென்றார்கள்; செல்லவில்லை
ஆதியிலே வார்த்தை இருந்தது; அது தேவனாயிருந்தது; தேவனோடு இருந்தது என ஆதியாகத்தின் முதல் வசனம் ஆரம்பிப்பது போலச் சில வரலாற்று நூல்களில், “ஆதியிலே பாரதவர்ஷம் என்றொரு கண்டம் இருந்தது; அக்கண்டத்திற்குள் 56 தேசங்கள் இருந்தன; அத்தேசங்களின் ராஜாக்கள் அவ்வப்போது நடக்கும் சுயம்வரங்களில் தலையை நீட்டுவதற்காக வரிசையில் நிற்பார்கள் எனப் பலரும் படித்திருக்கலாம். படிக்கவில்லை என்றால் பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பெரிய எழுத்துக் கதைகளை வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்.- வாசித்து விட்டு இவையெல்லாம் கற்பனையான புராணங்கள் தானே; எப்படி வரலாறு ஆகும் எனக் கேட்கலாம். புராணம், புனைகதை, வரலாறு என்பனவற்றிற்குப் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அவற்றைப் புராணங்கள் சார்ந்த வரலாற்று நூல்கள் என வகைப் படுத்திக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை.