சோ.தர்மன்:நிலவியலில் நிறுத்திய எழுத்து
என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்; எல்லாவற்றையும் நானே திட்டமிடுகிறேன் எனக் கூறுவதற்குப் பின்னால் இருப்பது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைதான் முழுமையாகச் செயல்படுகிறதென்று சொல்லமுடியாது. தன்பிள்ளை, தன்குடும்பம், தன்போக்கு என இருப்பவர்களுக்கு வேண்டுமானால், ஓரளவுக்கு இது சாத்தியமாகலாம். அதுகூட ஓரளவுக்குத்தான். பொதுமனிதர்களை நோக்கி இயங்கும் ஒருவரால், அவரது செயல்பாடுகளை முழுமையாக அவரே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. எழுத்து, இலக்கியம் என்பது அடிப்படையில் பொதுமனிதர்களை நோக்கிய இயக்கம். ஆகவே எழுத்தாளர்களின் செயல்பாடுகளைச் சூழல் இயக்குகிறது.